thalaivan

thalaivan

திங்கள், 20 பிப்ரவரி, 2012

ராஜிவ் காந்தி கொலை – புலிகள் சிக்கியது எப்படி? விறு விறுப்பு தொடர் அத்தியாயம்-16

அத்தியாயம்-16


ராஜிவ் கொலையில் சினிமாக்காரர்களின் தொடர்பு!


“ஈழ விடுதலை இயக்கம் ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் பத்மநாபாவின் கொலையைச் செய்தது யார் என்ற மர்மம் தொடர்கிறது”  என்று கூறி, அந்த கொலை வழக்கை கிடப்பில் போட்டு வைத்திருந்தது, அப்போதைய தி.மு.க. அரசு. ஆனால், அந்தக் கொலையைச் செய்தது யார் என்பது, தமிழக காவல்துறைக்கும் தெரியும், இந்திய உளவுத்துறைகளுக்கும் தெரியும்.

விடுதலைப்புலிகளால் செய்யப்பட்ட கொலை அது என்பது அனைவருக்கும் தெரிந்துதான் இருந்தது.

இருந்தும் சில காரணங்களுக்காக, கொலை செய்தது யார் என்பது தெரியாது என பாசாங்கு பண்ண வேண்டிய நிலையில் தி.மு.க. இருந்த காரணத்தால், அப்போது கிடைத்த தடயங்களையும் சோதனைக்கு அனுப்பியிருக்கவில்லை. ஆனால், தடயங்கள் காவல்துறை வசம் இருந்தன.

இப்படியாக தமிழக காவல்துறை வசம் இருந்த ஒரு தடயம்தான், பத்மநாபா குழு மீது தாக்குதல் நடந்தபோது வீசப்பட்டு, ஆனால் வெடிக்காமல் கிடந்த ஒரு வெடிகுண்டு. இந்த வெடிகுண்டில்தான், கடந்த அத்தியாயத்தில் கூறப்பட்டதுபோல, SFG-87 (சிங்கப்பூர் ஃபிராக்மென்டேஷன் கிரானைட்-87) என்ற எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்தன. மற்றைய தடயம், பத்மநாபா கொல்லப்பட்ட சம்பவத்தில் ஈ.பி.ஆர்.எல்.எப். அலுவலக மரக்கதவில் பாய்ந்திருந்த உலோகத்திலானா சிறு குண்டுகள்.

ராஜிவ் காந்தி கொல்லப்பட்டபின், இந்தத் தடயங்கள் மீண்டும் உயிர் பெற்றன. (இந்தக் காலகட்டத்தில் தி.மு.க. அரசு ஆட்சியில் இல்லை)

விதியின் விளையாட்டைப் பார்த்தீர்களா? பத்மநாபாவைக் கொல்ல வீசப்பட்ட வெடிகுண்டு, ராஜிவ் காந்தி கொல்லப்பட்டபின், கொலை செய்தவர்களுக்கு எதிரான தடயமாக மாறியது. இந்த வெடிகுண்டு சி.பி.ஐ. புலனாய்வுக் குழுவால் சோதனைக்காக தமிழகத் தடய அறிவியல் சோதனைக் கூடத்துக்கு அனுப்பப்பட்டது.

பத்மநாபா கொல்லப்பட்ட சம்பவத்தில் ஈ.பி.ஆர்.எல்.எப். அலுவலக மரக்கதவில் பாய்ந்திருந்த உலோகத்திலானா சிறு குண்டுகளைப் போலவே, வெடிக்கப்படாத வெடிகுண்டிலும் உலோகத்தாலான சிறு குண்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வெடிபொருள் கலவையில் ஆர்.டி.எக்ஸ். மற்றும் டி.என்.டி. இருப்பது தெரியவந்தது.

சோதனைக்கு அனுப்பப்பட்ட வெடிகுண்டில், 0.2 மில்லி மீற்றர் விட்டமும், 0.05 கிராம் எடையும் கொண்ட உலோகத்திலான 2800 சிறு குண்டுகள் இருந்தன. இதன் வெடிபொருள் கலவை 60% ஆர்.டி.எக்ஸ்., 40% டி.என்.டி. என அமைந்திருந்தது.

ராஜிவ் காந்தியை கொல்லப் பயன்படுத்திய வெடிகுண்டில் ஆர்.டி.எக்ஸ். மட்டுமே இருந்தது. ஆனால், அங்கு கிடைத்த உலோகத்தினாலான சிறு குண்டுகள், பத்மநாபா படுகொலை செய்யப்பட்ட இடத்திலிருந்து கைப்பற்றப்பட்ட வெடிகுண்டிலிருந்த உலோகத்தாலான சிறு குண்டுகளைப் போலவே இருந்தது.

இந்தத் தரவுகள், இரு வெடிகுண்டுகளையும் தயாரித்தவர்கள் ஒரே ஆட்கள்தான் என்பதை சட்ட ரீதியாக நிரூபிக்க போதுமானவை அல்ல. “ஒரே ஆட்கள் தயாரித்து இருக்கலாம்” என்ற சந்தேகத்தை ஏற்படுத்த மட்டுமே போதுமானவை. தவிர பத்மநாபா கொலையில் விடுதலைப் புலிகளின் தொடர்பு அதுவரை நிரூபிக்கப்பட்டு இருக்கவில்லை என்பதால், இவற்றை வைத்துக் கொண்டு, விடுதலைப் புலிகளை காட்சிக்குள் கொண்டுவருவதில் சிரமங்கள் இருந்தன.

இப்படியான நிலையில், பத்மநாபா கொலை பற்றி சக உளவுத்துறைகளிடம் என்ன தகவல்கள் உள்ளன என்பதை கேட்டுத் தெரிந்து கொண்டது சிறப்புப் புலனாய்வுக் குழு. பத்மநாபா கொலைச் சம்பவத்தில் டேவிட், ரகுவரன் ஆகிய இரு விடுதலைப்புலி உறுப்பினர்களுக்குத் தொடர்பு இருப்பதாக ஐ.பி. (இன்டெலிஜென்ஸ் பீரோ) தகவல் கூறியது. றோ வைத்திருந்த தகவலும் அதுதான்.

ஆனால், இந்த இருவரது போட்டோக்களையும் பெறுவதில் இந்த இரு உளவு அமைப்புகளும் தாம் வெற்றிபெறவில்லை என்று கூறிவிட்டன.

பத்மநாபா கொலையாளிகள் கடத்திச் சென்ற மாருதி வேன் உரிமையாளர்கூட, அவர்களது அடையாளங்கள் பற்றிப் பெரிய அளவில் எந்த விவரத்தையும் தெரிவிக்கவில்லை. “எனது கார் இரவு நேரத்தில் கடத்தப்பட்டது. அப்போது இருளாக இருந்ததால், யாரையும் அடையாளம் தெரியும் அளவுக்கு பார்க்க முடியவில்லை. காரை கடத்திய நபர்கள் அனைவரும் கறுப்பாகவும், ஒரே மாதிரியான தோற்றமளிப்பவர்களாகவும் இருந்தார்கள்” என்று அவர் கூறிவிட்டார்.

சிறப்பு புலனாய்வுக்குழு, எதற்காக பத்மநாபா கொலையாளிகளின் அடையாளத்தைத் தெரிந்து கொள்ள விரும்பியது?

காரணம், பத்மநாபா கொலையை வெற்றிகரமாக நடாத்திக் கொடுத்து விட்டதலால், அதே குழுவிடம்தான் ராஜிவ் கொலை ஆபரேஷனையும் கொடுத்திருப்பார்கள் என்று நினைத்தது புலனாய்வுக் குழு!

ராஜிவ் கொல்லப்பட்ட இடத்தில் குர்தா-பைஜாமா அணிந்த நபர் (சிவராசன்) நின்றிருந்தார் அல்லவா? பத்மநாபா கொலையை முடித்துக் கொடுத்த டேவிட், ரகுவரன் ஆகிய இருவரில் ஒருவர்தான் அவர் என்பதே புலனாய்வுக் குழுவின் ஆரம்ப தியரியாக இருந்தது!!

இதனால், பத்மநாபா கொலையைப் பார்த்த சாட்சிகளிடம், குர்தா-பைஜாமா அணிந்த நபரின் போட்டோவைக் காட்டி, பத்மநாபாவைக் கொல்ல வந்தவர்களில் இவரும் இருந்தாரா என திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருந்தது புலனாய்வுக்குழு. இந்த முயற்சி தோல்வியில்தான் முடிந்தது.

அடுத்தபடியாக புலனாய்வுக் குழுவின் பார்வை, ராஜிவ் கொலை நடந்த இடத்தில் போட்டோக்களை எடுத்த ஹரிபாபுவின்மீது திரும்பியது. ராஜிவ் காந்தியைக் கொன்ற வெடிகுண்டு, அதை போட்டோ எடுக்க வந்த ஹரிபாபுவையும் கொன்றுவிட்ட போதிலும், அவரால் எடுக்கப்பட்ட போட்டோக்கள்தான், ராஜிவ் கொலையில் இருந்த ஒரேயொரு நேரடித் தடயமாம்.

போட்டோகிராபர் ஹரிபாபு எடுத்த புகைப்படங்கள் அனைத்தையும், பல்வேறு குழுக்கள் ஆராய்ந்தன. அதன் பின்னரும், ராஜிவ் கொலையைத் திட்டமிட்டவர்களுடன் ஹரிபாபுவுக்கு எந்த அளவுக்குத் தொடர்பு இருந்தது என்பது புலனாய்வுக் குழுவால் ஊகிக்க முடியவில்லை. ஹரிபாபு, ராஜிவ் காந்தி நிகழ்ச்சியை படம் எடுப்பதற்காக அமர்த்தப்பட்ட வெறும் போட்டோகிராபரா அல்லது ராஜிவ் காந்தியை குறிவைக்கும் சதித் திட்டத்தின் ஓர் அங்கமா என்று தெளிவாகத் தெரியவில்லை.

ஹரிபாபுவின் குடும்பம் ஏழ்மையானது. அவரது வீட்டுக்கு சில தடவைகள் புலனாய்வுக்குழு அதிகாரிகள் சென்றார்கள். அவர் தீவிரவாத அணி ஒன்றில் இருந்ததற்கான அறிகுறி எதுவும் அந்த வீட்டில் இல்லை. விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கும் அவருக்கும் சிறு பரிச்சயம்கூட் இருந்ததற்கு ஆதாரம் எதுவும் அந்த வீட்டில் கிடைக்கவில்லை.

ஆனால், நிஜத்தில் அவருக்கு விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்த சிலருடன் தொடர்புகள் இருந்தன.

ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட இடத்தில் ஹரிபாபுவும் கொல்லப்பட்ட தகவல் கிடைத்த உடனேயே, புலிகளுடன் அவருக்கு இருந்த தொடர்பு பற்றிய ஆதாரங்கள் அனைத்தும் அவரது வீட்டில் இருந்து அகற்றப்பட்டன. இந்த விஷயம் ஆரம்பத்தில் புலனாய்வுக் குழுவுக்கு தெரிந்திருக்கவில்லை.

இதனால் அவரையும் விட்டுவிட்டு, அடுத்த நபர் பற்றி ஆராய நகர்ந்தது புலனாய்வுக்குழு.

இப்போது ஹரிபாபுவால் எடுக்கப்பட்ட போட்டோக்களில் இருந்தவர்கள் பற்றி ஆராயத் தொடங்கியது சிறப்புப் புலனாய்வுக் குழு. அந்த போட்டோக்களில் பிரதானமாகக் காட்சியளித்தவர்களை, குறிப்பாக ஸ்ரீபெரும்புதூர் பொதுக்கூட்ட இடத்துக்கு ராஜிவ் காந்தி வருவதற்கு முன் எடுக்கப்பட்ட போட்டோக்களில் காணப்படுபவர்களைப் பற்றிய முழு விவரங்களையும் அலசி ஆராய வேண்டும் என்று தீர்மானித்தார்கள்.

முதல் போட்டோவில் இருந்த காங்கிரஸ்காரர் லதா கண்ணனுக்கும் அவரது மகள் கோகிலாவுக்கும் ராஜிவ் கொலை திட்டமிடலுடன் ஏதேனும் தொடர்பு இருக்குமா என்பது குறித்துப் புலனாய்வு நடத்தினார்கள். அதில் ஒன்றும் சிக்கவில்லை.

இரண்டாவது போட்டோ, ராஜிவ் கலந்துகொள்ள இருந்த பொதுக்கூட்டத்தில், பெண்கள் அமர்ந்திருந்த பகுதியை நோக்கி எடுக்கப்பட்டது. அதில் இருந்த பெண்களில், சந்தேகத்திற்குரிய நபர்கள் யாராவது உள்ளனரா என்று விசாரித்தார்கள். அதிலும் பலன் இல்லை.

மூன்றாவது போட்டோவில், சினிமா இசையமைப்பாளர் (சங்கர்) கணேஷ், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒரு கான்ட்ராக்டரிடம் பேசிக்கொண்டிருந்தார். அந்த போட்டோவை வைத்து, ராஜிவ் கொலையில் சினிமா தொடர்பு உடைய யாராவது சம்மந்தப்பட்டு உள்ளார்களா என்ற கோணத்தில் தொடங்கியது விசாரணை.

சினிமா இசையமைப்பாளர் (சங்கர்) கணேஷ், ராஜிவ் கொலை நடப்பதற்கு முன்னும், பின்பும், யாரையெல்லாம் சந்தித்தார் என்ற விபரங்களை அவர் அறியாமலேயே திரட்டியது புலனாய்வுக் குழு. இந்த விசாரணையில் சுவாரசியமான விஷயம் ஒன்று வந்தது. விசாரணையில் கிடைத்த சிறிய சிறிய தகவல்கள், எப்படி ஒன்றுக்கொன்று பொருந்தி வந்தன என்று, இதோ பாருங்கள்:

• ராஜிவ் காந்தி படுகொலை நடந்ததற்கு முந்தைய நாள், லண்டனிலிருந்து இலங்கைத் தமிழர் ஒருவர் சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கியிருந்தார். சென்னையில் உள்ள சொகுசு ஹோட்டல் ஒன்றில் அவர் தங்கினார்.

• நீண்ட பயணத்தின்பின், அவர் சென்னையில் தொடர்பு கொண்ட முதலாவது நபர், சினிமா இசையமைப்பாளர் (சங்கர்) கணேஷ்தான்!

• சென்னையில் இசையமைப்பாளர் (சங்கர்) கணேஷை தொடர்பு கொண்டபின், அன்றிரவே அந்த இலங்கைத் தமிழர் சென்னையில் இருந்து கொழும்பு புறப்பட்டுச் சென்றார்.

• அவர் பயணம் செய்த விமானம் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து இரவு 8 மணிக்கு கொழும்புவுக்கு புறப்பட்டுச் சென்றது. அந்த விமானம் புறப்பட்டு 20 நிமிடத்தில், இரவு 8.20 மணிக்கு, விசாகப்பட்டினத்திலிருந்து ராஜிவ் காந்தி பயணம் செய்த தனி விமானம் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தை வந்தடைந்தது. அதில் வந்திறங்கினார் ராஜிவ் காந்தி.

• சென்னை வந்திறங்கிய ராஜிவ் காந்தி, சென்னைக்கு அருகே ஸ்ரீபெரும்புதூரில் பொதுக்கூட்டம் நடக்க இருந்த இடத்துக்குச் சென்றார். அங்கே ராஜிவ் காந்தி வந்து சேரும்வரை மேடையில் இசை நிகழ்ச்சி நடாத்திக்கொண்டு இருந்தார் சினிமா இசையமைப்பாளர் (சங்கர்) கணேஷ்.

• மனித வெடிகுண்டு பெண், பைஜாமா-குர்தா அணிந்த மர்ம நபர் ஆகியோரால் ராஜிவ் கொலைச் சம்பவத்தை போட்டோ எடுக்க அழைத்து வரப்பட்ட ஹரிபாபு எடுத்த போட்டோக்களிள் ஒன்று, சினிமா இசையமைப்பாளர் (சங்கர்) கணேஷை போகஸ் பண்ணி எடுக்கப்பட்டிருந்தது.

• ஸ்ரீபெரும்புதூரில் பொதுக்கூட்டம் நடக்க இருந்த மேடைக்கு ராஜிவ் காந்தி வருவதற்கு 15 நிமிடங்களுக்கு முன், அதே மேடையில் இசை நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு கீழே இறங்கினார் இசையமைப்பாளர் (சங்கர்) கணேஷ். அவர் மேடையைவிட்ட அகன்று செல்ல, மேடையை நோக்கி நடந்துவந்த ராஜிவ் காந்தியை அணுகினார் மனித வெடிகுண்டு பெண். குண்டு வெடித்தது. ராஜிவ் கொல்லப் பட்டார்.

இவ்வளவு விபரங்களும் கோர்வையாகக் கிடைத்த பின்னர், என்ன நடக்கும்?  வந்தது கிளைமாக்ஸ்! …

(17ம் அத்தியாயம் தொடரும்… அடுத்த வாரம்)

நன்றி.
விறுவிறுப்பு.கொம் 




பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

1 கருத்து :

  1. உண்மை ஒரு நாள் வரும் .... இப்போது உண்மையை அறிந்து கொண்ண்டுவிட்டேன்.... அதற்கு விலை .... லட்சக் கணக்கில் ஈழ தமிழ் மக்கள் வாழ்வு ஆதாரம் பரி போய் விட்டதே.... காலம் தக்க பதில் சொல்லும்.....

    பதிலளிநீக்கு

Get this widget