thalaivan

thalaivan

வியாழன், 28 ஜூன், 2012

சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் தளபதி லெப்.கேணல் கில்மன் நினைவு நாள்.

லெப்.கேணல் கில்மன்/காந்தன் 
வேலாயுதம்பிள்ளை சிவகுமார் 
தமிழீழம்(கிளிநொச்சி மாவட்டம்)
தாய் மடியில்-21.06.1970
மண் மடியில்-28.06.1995

திருகோணமலை மாவட்டத்தில் 28.06.1995 அன்று எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் காந்தன் (கில்மன்) உட்பட்ட மூன்று மாவீரர்களின் 17ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

திருகோணமலை மாவட்டத்தில் விடுதலைப் புலிகளின் ஆளுகையை வலுப்படுத்தும் நோக்கில் 1995ம் ஆண்டில் சாள்ஸ் அன்ரனி படையணி லெப்.கேணல் கில்மன் தலைமையில் தேசியத் தலைவர் அவர்களால் அனுப்பி வைக்கப்பட்டது.

பல்வேறு நெருக்கடிகளிற்கு மத்தியில் காட்டுப்பகுதிகளில் வலுவான தளங்களையமைத்துடன் சிறிலங்கா படையினர் மீதும் பல அதிடித் தாக்குதல்களை நடாத்தப்பட்டு சிறிலங்கா படையினருக்கு பலத்த இழப்புக்கள் சாள்ஸ் அன்ரனி படையினரால் ஏற்படுத்தப்பட்டது.

காட்டுப்பகுதியில் நிலை கொண்டிருந்த விடுதலைப் புலிகளை அழித்தொழிப்பதற்காக சிறிலங்கா படை உயர் தளபதிகளின் திட்டமிடலில் ”ராமசக்தி - 03” பெயரில் திரியாய் காட்டுப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட படை நடவடிக்கை விடுதலைப் புலிகள் தரப்பில் இழப்புக்கள் ஏதுமின்றி முறியடிக்கப்பட்டது.

அந்நடவடிக்கையை வழிநடாத்திய கேணல் காமினி பெர்னாண்டோ உட்பட பல படையினர் கொல்லப்பட்டும் பலர் படுகாயமடைந்துமிருந்தனர். இதனைத் தொடர்ந்து சிறிலங்கா படையினரால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட படை நடவடிக்கைகள் அனைத்து சாள்ஸ் அன்ரனி படையணியால் முறியடிக்கப்பட்டன.

படை நடவடிக்கை முறியடிப்பு, வலிந்த தாக்குதல் நடவடிக்கையென அனைத்தையும் வெற்றிகரமாக வழிநடாத்திய தளபதி லெப்.கேணல் கில்மன் திருமலை மாவட்டத்தில் இழக்கப்பட்டு வந்த விடுதலைப் புலிகளின் ஆளுகையை வலுப்படுத்தியதுடன் சிறிலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் மேலும் விரிவடையாது படையினர் மீதான தாக்குதல்கள் மூலம் கட்டுப்படுத்தினார்.

இந்நிலையில் 28.06.1995 அன்று திருமலை முதன்மைச் சாலையில் வைத்து சிறிலங்கா படை உயர் தளபதி ஒருவர் மீதான பதுங்கித் தாக்குதலுக்கான தயாரிப்பு வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக அங்கு ஏற்பட்ட வெடிவிபத்தில் மேலும் இரு போராளிகளுடன் லெப்.கேணல் கில்மன் வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.

லெப்.கேணல் கில்மன் தமிழீழ விடுதலைப் புலிகளின் புகழ்பூத்த தளபதிகளில் ஒருவரான பிரிகேடியர் தீபன் அவர்களின் உடன்பிறப்பு என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

லெப்.கேணல் கில்மன் அவர்களுடன் இவ்வெடிவிபத்தில்,

மேஜர் வரன் (கலைவாணன்) (நாகராசா தவரத்தினராசா - முள்ளிவாய்க்கால் முல்லைத்தீவு)

லெப்டினன்ட் அன்பன் (அழகன்) (நடராசா சிறிக்குமார் - செட்டிக்குளம், வவுனியா)

ஆகிய போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.


தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈகம் செய்த இந்த வீரமறவர்களிற்கு எங்கள் வீரவணக்கங்கள். இதே நாளில் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எங்கள் வீரவணக்கங்கள்.

தமிழீழம் கிடைக்கும் வரை உங்களை நிச்சயம் தொடர்வோம்.

Image Hosted by ImageShack.us


பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

புதன், 27 ஜூன், 2012

உயிராயுதம் கரும்புலிகளின் வீரவரலாறு (காணொளி இணைப்பு)

“பலவீனமான என் இனத்தின் பலம் மிக்க ஆயுதமாகவே நான் கரும்புலிகளைத் தேர்ந்தெடுத்தேன்”
தமிழீழ தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன்.






தமிழீழ தாயக விடுதலைக்காக தங்கள் இன்னுயிரை ஈகம் செய்த இந்த மானமாவீரர்களிற்கும் மற்றும் இதே நாளில் வீரச்சாவடைந்த ஏனைய மாவீரர்களுக்கும் எங்கள் வீர வணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம்.

தமிழீழம் கிடைக்கும் வரை உங்களை நிச்சயம் தொடர்வோம்.


Image Hosted by ImageShack.us

பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

வெள்ளி, 22 ஜூன், 2012

இஸ்ரேலிடம் இருந்து ஈழத் தமிழர்கள் கற்றுக்கொள்ள வேண்டியவைகள்: [பாகம் 07]

இஸ்ரேலியர்கள் தமக்கென்று அமைத்துக்கொண்ட கிறிஸ்தவ பாதுகாப்பு வலயங்கள் எப்படி பல ஆபத்துக்கள், நெருக்கடிகள் போன்றனவற்றில் இருந்து இஸ்ரேல் தேசத்தை பாதுகாத்தன, பாதுகாத்து வருகின்றன என்று கடந்த சில வாரங்களாக இந்தத் தொடரில் பார்த்து வருகின்றோம்.


ஈழத் தமிழர்கள் தமக்கான நட்பு சக்திகளை உருவாக்கிக்கொள்வது எத்தனை அவசியம் என்பதை உணர்ந்து கொள்வதற்காகவே இந்த விடயத்தை சற்று ஆழமாக இங்கு பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.

அமெரிக்கா என்கின்ற நாட்டை இஸ்ரேல் தனது நட்பு நாடாக மாற்றிக்கொண்டதன் ஊடாக, இஸ்ரேலுக்கு கிடைத்த, கிடைத்துவருகின்ற நன்மைகள் ஏராளம்.

இதற்கு ஈழத் தமிழர் சம்பந்தப்பட்டதும், எமக்கு சுவாரசியத்தை ஏற்படுத்தக்கூடியதுமான மற்றொரு உதாரணத்தை இந்த வாரம் ஆராய இருக்கின்றோம்.

1960களின் பிற்பகுதிகளில் இஸ்ரேலின் அயல்நாடுகள் தொடர்பாக இஸ்ரேல் செய்யவேண்டிய ஒரு விடயத்தை வலியுறுத்தி ஐ.நா. சபை ஒரு தீர்மானத்தைக் கொண்டுவந்தது. (242வது தீர்மானம்).
அந்தத் தீர்மானத்தை இஸ்ரேல் ஏற்கமறுத்ததைத் தொடர்ந்து உலகில் உள்ள பல நாடுகள் இஸ்ரேல் உடனான தமது தூதரக உறவுகளைத் துண்டித்துக்கொண்டன. அப்படியான ஒரு சந்தர்ப்பத்தில், அமெரிக்கா தனக்குள்ள செல்வாக்குகளைப் பயன்படுத்தி பல நாடுகளை இஸ்ரேல் தேசத்துடன் நட்புறவு கொள்ள வைத்திருந்தது.

உதாரணத்திற்கு, சிறிலங்கா தேசத்துக்கு அப்பொழுதிருந்த தேவைகளைப் பயன்படுத்தி எவ்வாறு இஸ்ரேலை சிறிலங்கா அரசுடன் அமெரிக்கா நட்பாக்கி விட்டிருந்தது என்பது பற்றிப் பார்ப்பது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கின்றேன்.

பலஸ்தீனரது உரிமை சம்பந்தப்பட்ட ஐ.நா. சபையின் 242வது தீர்மானத்திற்கு இஸ்ரேல் இணங்காதத்தைக் காரணம் காண்பித்து, 1970 இல் சிறிமா அரசு இலங்கையில் இஸ்ரேலியத் தூதரகத்தை மூடியிருந்தது. இஸ்ரேலுடனான தனது உறவைத் தூண்டித்தது பற்றி இலங்கை சர்வதேச மட்டத்தில் பெருமையும் வெளியிட்டிருந்தது.

அக்காலகட்டத்தில் இஸ்ரேலியப் பிரஜைகள் எந்த விடயத்திற்காகவது, எந்த வடிவிலாவது இலங்கைக்குள் பிரவேசிப்பதற்கு கடுமையான தடையும் விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் இலங்கையில் தமிழ் விடுதலை அமைப்புக்கள் மேற்கொண்ட கெரில்லாத் தாக்குதல்கள் கட்டுப்படுத்த முடியாமல் எல்லை மீறிச் செல்ல ஆரம்பித்ததைத் தொடர்ந்து, இஸ்ரேலிடம் தொடர்பைப் பேணும் ஒரு நிர்பந்தம் ஸ்ரீலங்கா அரசுக்கு உருவானது.

அந்த நிர்ப்பந்தத்தை அமெரிக்காவே உருவாக்கியும் விட்டிருந்தது.

அமெரிக்காவிடம் இராணுவ உதவிகளை சிறிலங்கா வேண்டி நின்ற பொழுது, இஸ்ரேலின் ஊடாகவே அமெரிக்கா ஆயுத, இராணுவ உதவிகளைச் செய்ய முடியும் எற்று அது கூறியிருந்ததது. எனவே வேறு வழியில்லாமல் தாம் தடை விதித்திருந்த இஸ்ரேலை இலங்கைக்குள் வரவழைத்து இஸ்ரேலில் தங்கியிருக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது சிறிலங்கா அரசு.

அக்காலகட்டங்களில் பொதுநலவாய நாடுகளைப் பொறுத்தவரையில், இஸ்ரேல் என்ற நாடு ஒரு தீண்டத்தகாத நாடாகவே இருந்தது. எனவே ஸ்ரீலங்கா அரசு மிகவும் இரகசியமாகவே தனது இஸ்ரேலியத் தொடர்புகளை ஆரம்பித்திருந்தது.

1983ம் ஆண்டு ஜூலை மாதத்தில் ஸ்ரீலங்காவின் அமைச்சரவைச் செயலாளர் ஜீ.வி.பி.சமரசிங்க இஸ்ரேலுக்கு ஒரு இரகசிய விஜயத்தை மேற்கொண்டார். அமெரிக்கா ஊடாக ஏற்கனவே இஸ்ரேலுடனான தொடர்புகள் ஆரம்பிக்கப்பட்டிருந்த போதிலும், சமரசிங்க அவர்களின் விஜயத்தின்போது இஸ்ரேலின் உதவி பற்றிய இறுதி முடிவு எடுக்கப்பட்டது.

1984ம் ஆண்டு சித்திரை மாதத்தில் இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சின் ஆசியப் பிராந்திய உதவிப் பணிப்பாளர் டேவிட் மட்னாய் இலங்கைக்கு இரகசிய விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். அமெரிக்க தூதராலயத்தில் வந்து தங்கியிருந்த இவர் சிறிலங்காவின் ஜனாதிபதி உட்பட பல்வேறு தரப்பினருடனும் இரகசியப் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டிருந்தார். அதனைத் தொடர்ந்து இலங்கை இராணுவ அதிகாரிகள் சிலர் இஸ்ரேலுக்கு இராணுவப் பயிற்சிக்காக அனுப்பிவைக்கப்பட்டார்கள்.

1984ம் ஆண்டு மே மாதம் 24ம் திகதி கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தில் ‘இல்ரேலிய நலன் காக்கும் பிரிவு’ உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இலங்கையில் இஸ்ரேல் மீண்டும் காலூன்ற ஆரம்பித்தததைக் கண்டித்து நாட்டில் பாரிய கொந்தளிப்பு ஏற்பட்டது. குறிப்பாக கிழக்கில் முஸ்லிம்கள் தமது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார்கள். ஆனால் அப்பொழுது நடைமுறையிலிருந்த அவசரகாலச்சட்டம், பத்திரிகைத் தணிக்கை என்பன, எதிர்ப்புக் குரல்கள் வெளிவராமல் முற்றாகவே தடுத்துவிட்டன.

1984ம் ஆண்டு ஆனி மாதம் 9ம் திகதி நடைபெற்ற ஐ.தே.கட்சி செயற்குழுக் கூட்டத்தில் உரை நிகழ்த்திய சிறிலங்காவின் ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்த்தன, இஸ்ரேலிய நலன் காக்கும் பிரிவு தொடர்ந்து இலங்கையில் தங்கியிருக்கும் என்று உறுதிபடத் தெரிவித்திருந்தார்.

சில முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது அதிருப்தியைத் தெரிவிக்க முற்பட்டபோது, ‘முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தின் தீர்மானத்தை ஆதரிக்க விரும்பாவிட்டால் தாராளமாக வெளியேறலாம்’ என்று ஜே.ஆர். உறுதியாகத் தெரிவித்திருந்தார். ‘அரசாங்கத்தின் தீர்மானத்தை கண்டித்துப் பேசுபவர்களும் வெளியேற்றப்படுவார்கள்’ என்றும் அவர் தெரிவித்துவிட்டார்.

இஸ்ரேலின் உள்நாட்டுப் பாதுகாப்பு நிறுவனமான ‘ஷின் பெய்த்’ மற்றும் இஸ்ரேலிய புலனாய்வு நிறுவனமான ‘மொசாட்’ என்பன இலங்கைப் படையினருக்குப் பயிற்சிகளை வழங்க ஆரம்பித்தன.

தமிழ் போராளிகள் லெபனானிலும், பலஸ்தினத்திலும் பயிற்சி பெற்றுவருவதால், அவர்களை முறியடிக்க இஸ்ரேலே சிறந்த பயிற்சியை வழங்கமுடியும் என்பதில் அனேகமான ஸ்ரீலங்காப் படை அதிகாரிகளும், அரசியல் தலைவர்களும் உறுதியாக இருந்தார்கள்.

இஸ்ரேலியர்களும், ‘கெரில்லா தாக்குதல்களை எப்படி முறியடிப்பது என்கின்ற பயிற்சிகளை வழங்குகின்றோம் பேர்வழிகள்’ என்று கூறிக்கொண்டு தமிழ் மக்களை எப்படிக் கொன்றொழிப்பது என்கின்ற பயிற்சிகளைத் தாராளமாக வழங்க ஆரம்பித்தார்கள்.

அப்பொழுது இலங்கையில் புதிதாக உருவாக்கப்பட்ட விஷேட அதிரடிப் படையினருக்கும் (Special Task Force-STF) இஸ்ரேலியர்களே முழுப் பயிற்சிகளை வழங்கினார்கள். தமிழ் இளைஞர்கள் வகை தொகையின்றி கொல்லப்பட்டு, அவர்கள் அனைவருமே தமிழ் போராளிகள் என்று அடையாளப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இஸ்ரேலின் மவுசு மேலும் இலங்கையில் அதிகரிக்க ஆரம்பித்தது.

1984ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 21ம் திகதி, இல்ரேலின் நலன் காக்கும் பிரிவின் புதிய பொறுப்பாளராக ‘அக்ரயில் கார்பி’ நியமிக்கப்பட்டார்.

இஸ்ரேல் கற்றுத்தந்த யுக்திகள் களமுனையில் முன்னேற்றம் கண்டுவர ஆரம்பித்ததைக் கண்டு புளகாங்கிதம் அடைந்த ஸ்ரீலங்கா அரசு இஸ்ரேல் மீது முன்னர் விதித்திருந்த கட்டுப்பாடுகளையெல்லாம் தளர்த்த ஆரம்பித்தது.

அதுவரை இஸ்ரேல் மீது இலங்கையில் விதிக்கப்பட்டிருந்த வர்த்தகத் தடை, ஜனாதிபதி ஆணையினால் நீக்கப்பட்டது.

இஸ்ரேலியர்கள் இலங்கைக்கு வர விதிக்கப்பட்டிருந்த தடையும் நீக்கப்பட்டது. தடை நீக்கப்பட்டது மட்டுமல்ல இஸ்ரேலியர்களுக்கு விஷேட சலுகைகளும் ஸ்ரீலங்கா அரசினால் வழங்கப்பட்டன. ஸ்ரீலங்காவின் வெளிவிவகார உதவி அமைச்சராக அப்பொழுது கடமையாற்றிய டிரோன் பெர்னாண்டோ இஸ்ரேலிய நலன் காக்கும் பிரிவினர் இலங்கைக்குள் வர விசா எதுவும் தேவையில்லை என்று அறிவித்தார்.

28.03.1985 இற்கு பின்னர் இஸ்ரேலியர்கள் எவருக்குமே இலங்கைக்குள் வர விசா தேலை இல்லை என்றும் ஸ்ரீலங்கா அரசு அறிவித்திருந்தது. அந்த அளவிற்கு ஸ்ரீலங்கா அரசு இஸ்ரேலுடன் கொஞ்சி விளையாட ஆரம்பித்திருந்தது.

சுற்றி வளைப்புக்கள், கைதுகள், அழித்தொழிப்புக்கள், சித்திரவதை நுணுக்கங்கள் என்று எதிர் கெரில்லாப் போரியல் நுணுக்கங்கள் முதல் ‘டோரா’ கடற்கலங்கள் வரை ஸ்ரீலங்காப் படைகளுக்கு வழங்கி இஸ்ரேல் இராணுவ ஒத்தாசைகளைப் புரிந்திருந்தது.

உண்மையிலேயே இஸ்ரேலுடனான அனைத்து உறவுகளும் அமெரிக்காவின் ஆலோசனை மற்றும் வழிநடத்தலின் பெயரிலேயே ஸ்ரீலங்கா அரசு செய்தது என்பது இங்கு முக்கியமாகக் குறிப்பிடத்தக்கது. அமெரிக்க இராணுவ ஜெனரல் வேர்ணன் வால்டர்ஸது தலைமையில்தான் இஸ்ரேலின் தொடர்பும், அதனது நடவடிக்கைகளும் அமைந்திருந்தன என்பது, அமெரிக்கா, ஸ்ரீலங்கா மற்றும் இஸ்ரேலின் உயரதிகாரிகளுக்கு மட்டுமே அப்பொழுது தெரிந்த இரகசியம்.

ஸ்ரீலங்காவிற்கு இஸ்ரேலின் பெயரில் வழங்கப்பட்ட அனைத்து உதவிகளும் அமெரிக்காவின் ஆசீர்வாதத்துடனேயே மேற்கொள்ளப்பட்டன. இஸ்ரேலிய இராணுவ மற்றும் புலனாய்வு முக்கியஸ்தர்களுடனான சநதிப்புக்கள் அனைத்தையும் அமெரிக்காவே செய்திருந்ததும், அனேகமான சந்திப்புக்கள் அமெரிக்கத் தூதராலயத்திலேயே நடைபெற்றிருந்ததும், இஸ்ரேலிய நலன்காக்கும் பிரிவு அமெரிக்கத் தூதராலயத்திலேயே முதன் முதலில் அமைக்கப்பட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

அதாவது இஸ்ரேல் தேசம் தனக்கென்று அமைத்துக்கொண்ட கிறிஸ்தவ பாதுகாப்பு வலயமானது, எப்படி ஒரு பௌத்த தேசத்தில் யூதர்கள் தளம் அமைக்கக் காரணமாக இருந்ததது என்பதைச் சுட்டிக் காட்டவே சிறிலங்காவுக்குள் இஸ்ரேல் நுழைந்த இந்த உதாரணத்தை இங்கு பார்த்திருந்தோம்.

சரி மறுபடியும் முன்னர் இந்தத் தொடரில் நாம் எழுப்பியிருந்த கேள்விகளுக்கு வருவோம்.

இஸ்ரேலியர்களுக்குத்தான் கிறிஸ்தவ உலகின் பாதுகாப்பு வலயம் இருக்கின்றதே – ஈழத் தமிழருக்கு யார் இருக்கின்றார்கள்?

ஈழத் தமிழர்களுக்கு எந்த மதக் குழுமம் நட்பு சக்தியாக அமையமுடியும்?

ஈழத் தமிழர்களின் நேச சக்திகள் என்று யார் எமக்கு இருக்கின்றார்கள்?

எப்படி எங்களுக்கான ஒரு பாதுகாப்பு வலயத்தை எங்களால் உருவாக்கிக்கொள்ள முடியும்?

ஈழத் தமிழருக்கான பாதுகாப்பு வலயத்தை உருவாக்கிக்கொள்ள நிச்சயம் எங்களால் முடியும்.

இஸ்ரேலியர்களை போலவே எங்களுக்கும் பல இனக் குழுமங்கள், மதக் குழுமங்கள் நேச சக்திகளாக இருக்கின்றன.

அந்த நேச சக்திகளை நாம் சரியான முறையில் எங்களுக்குச் சார்பாகப் பயன்படுத்திக்கொள்ளவில்லையே தவிர, நேச சக்திகளே எங்களுக்குக் கிடையாது என்று நாம் கூறிவிட முடியாது.

இஸ்ரேலியர்களுக்கு உள்ளது போன்று ஈழத் தமிழருக்கு உள்ள நேச சக்திகள், மதக் குழுமங்கள் என்ன, இஸ்ரேலியர்களைப் போன்று ஈழத் தமிழர் எப்படி தமக்கென்று ஒரு பாதுகாப்பு வலயத்தை உருவாக்கிக்கொள்ளலாம் என்று அடுத்தவாரம் விரிவாக ஆராய்வோம்.
தொடரும்…


நிராஜ் டேவிட்
nirajdavid@bluewin.ch
Image Hosted by ImageShack.us


பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

ஞாயிறு, 3 ஜூன், 2012

முதல் தமிழீழ தற்கொடையாளர் பொன். சிவகுமாரனின் வீரவணக்க நினைவு நாள் இன்றாகும்.

தியாகி பொன்.சிவகுமாரன்
தமிழீழம் (யாழ் மாவட்டம்)
தாய் மடியில்:26.08.1950
மண் மடியில்:05.06.1974

ஈழ விடுதலைப் போராட்ட வீரர்களில் சிவகுமாரன் ஒரு முன்னோடி ஆவார். யாழ்ப்பாணம், உரும்பிராயில் காவற்துறையினரின் சுற்றி வளைப்பில் அகப்பட்ட சிவகுமாரன் நஞ்சருந்தி மரணமடைந்தார். ஈழப்போராட்ட வரலாற்றில் முதன் முதலில் நஞ்சு அருந்தி உயிர் நீத்தவர் இவரே.

சிங்கள இனவாதத்தால் தமிழ் மக்களுக்கெதிரான கொடுமைகளும் படுகொலைகளும் கட்டவிழ்த்து விடப்பட்டு, தமிழ் மக்களின் சுதந்திர இருப்பு சிதைக்கப்பட்டது. இந்நிலையில் தான் அன்று மாணவனாகவிருந்த தியாகி பொன்.சிவகுமாரன், தமிழ் மக்களின் உரிமைகள் மீட்கப்படுவதற்கும் சுதந்திர இருப்பை உறுதிசெய்வதற்கும் ஆயுதப் போராட்டமே சரியான மார்க்கம் என்பதை உணர்ந்து சிங்கள இனவாதத்திற்கெதிராக ஆயுதமேந்திய போராட்டத்தை முன்னெடுத்தார்.

புலிகளின் குரல் வானொலியில் தியாகி பொன்.சிவகுமாரனின் நினைவூட்டல் ஒலி வீச்சு.


யாழ் மண்ணின் உரும்பிராயில் பிறந்த சிவகுமாரன் அவர்கள் சிறு பராயத்திலிருந்தே அநீதிகளைக் கண்டு கொதித்தெழுகின்ற, அவற்றைத் தட்டிக்கேட்கின்ற இயல்புடையவர்.மக்கள் மீதான சிங்கள ஆட்சியாளர்களின் கொடுமை நிறைந்த ஒடுக்குமுறைக்கெதிராக போராட வேண்டுமென்ற துடிப்புடன் சிவகுமாரனால் மேற்கொள்ளப்பட்ட போராட்டச் செயற்பாடுகள் சரியான அரசியல் அடித்தளத்தைக் கொண்டவை. தொலைநோக்கு அடிப்படையில் அமைந்தவை.

தியாகி பொன்.சிவகுமாரனின் போராட்டச் செயற்பாடுகள் சிலவற்றை மீட்டு பார்ப்பதன் மூலம், தமிழ் மக்கள் மனங்களில், குறிப்பாக இளைஞர்கள் மனங்களில் விடுதலைக்கான பேரெழுச்சியை ஏற்படுத்திய அம்மாவீரனின் வரலாற்றை உள்வாங்கிக்கொள்ள முடியும். அதன் மூலம் தமிழ் மக்களின் விடுதலை வென்றெடுக்கப்பட்டு, அடிமைத் தழைகள் நீங்கிய வாழ்வமைய வேண்டுமென்பதற்காக போராடிய சிவகுமாரனின் இலட்சியத்தாகத்தின் ஆழத்தை அறிந்து கொள்ள முடியும்.

புரட்சியும் எழுச்சியும் இளைஞர் சமூகத்திடமிருந்து தான் தோற்றம் பெறுகின்றது. எனவே, தமிழ் மாணவர்களின் கல்வியைச் சீரழிப்பதன் மூலம் மக்களை எளிதாக அடிமைப்படுத்த முடியும் என்ற மூலோபாயத்தை சிங்கள அரசுகள் திடமாக நம்பி செயற்பட்டு வந்திருக்கின்றன. கல்வியில் பின்னடைவை ஏற்படுத்துவதன் மூலம் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தை நசுக்கலாம், போர்க்குணத்தை மழுங்கடிக்கலாம், சுதந்திர உணர்வைச் சிதைக்கலாம் என்ற நோக்கத்தில் காலங்காலமாக அவை செயற்பட்டு வந்திருக்கின்றன. (இன்றைய காலத்தில்கூட பல பாடசாலைகளும் பாடசாலைகளை அண்டிய பகுதிகளும் இராணுவ முகாம்களாக இருப்பதைக் கூற முடியும்.)

தமிழ் மாணவர்களின் கல்வி மீது கத்தி வைக்கும் ஆரம்பக் கட்டம் ஆயிரத்துத் தொழாயிரத்து எழுபதுகளில், சிறிமாவோ பண்டாரநாயக்காவின் ஆட்சிக்காலத்தில் தரப்படுத்தல் அமுல்படுத்தப்பட்டதோடு நிகழ்ந்தது. இது போன்ற அக்கிரமங்களை எதிர்த்துப் போராடும் இலக்கோடு உயர்கல்வி மாணவர்கள் ஒருங்கிணைந்த தமிழ் மாணவர் பேரவை தோற்றம் பெற்றது. 1971ல் தமிழ் மாணவர் பேரவையில் இணைந்த சிவகுமாரன் அவர்கள் சில தோழர்களை ஒருங்கிணைத்து சிங்கள அரசுக்கும் தமிழ்த் தேச விரோத சக்திகளுக்கும் எதிரான போராட்டத்தில் ஈடுபட்டார்.

கல்வித் தரப்படுத்தலை அமுல்படுத்திய சிறிமா அரசின் துணை அமைச்சராகவிருந்த சோமவீர சந்திரசிறி பயணம் செய்த வாகனத்திற்கு நேரக் கண்ணிவெடி  வைப்பதோடு ஆரம்பமானது சிவகுமாரனது ஆயுதப்போராட்ட வரலாறு (செப் 1970). இச்சம்பவத்திலிருந்து சிங்கள அமைச்சர் உயிர்தப்பிய போதும், அச்சம்பவம் தொடர்பான குற்றச்சாட்டில் கைதான சிவகுமாரன் சிறையில் மோசமான சித்திரை வதைகளுக்குட்படுத்தப்பட்டார்.

தொடர்ந்து தமிழ் மக்களின் உரிமைப்போராட்டத்தை காட்டிக்கொடுக்கும் துரோகத்தனத்தை புரிந்து வந்த யாழ்-நகரமேயர் அல்பிரட் துரையப்பா மீதும் தாக்குதல் முயற்சிகளை மேற்கொண்டார் (பெப் 1971). அம்முயற்சிகளும் வெற்றியளிக்கவில்லை. துரையப்பா மீதான தாக்குதல் காரணமாக கொலை முயற்சிக் குற்றம் சுமத்தப்பட்டு, 3 ஆண்டுகள் கொடுமையான துன்றுத்தல்களுடன்கூடிய சிறைவாழ்க்கையின் பின்னர், தனது 23வது வயதில் விடுதலையானார். ஆனாலும் அவர் மனம் தளரவில்லை. மிகவும் உறுதியோடு போராட்டச் செயற்பாடுகளை முன்னெடுத்தார்.

மூன்று ஆண்டுச் சிறை வாழ்க்கையின் பட்டறிவு மூலம் போராட்டம் தொடர்பான பல நடைமுறை யதார்த்தங்களை சிவகுமாரன் உணர்ந்து கொண்டார். போராட்டச் செயற்பாடுகள் தொடர்பான இரகசியங்களை வரவழைப்பதற்காக சிங்களப் படைகளும் சிறிலங்கா காவல்துறையும் போராளிகள் மீது கோரமான சித்திரவதைகளை மேற்கொள்ளும் போது உண்மைகள் வெளிப்பட நேர்ந்தால் போராட்டத்திற்கு உதவுகின்ற மக்கள் இன்னல்களை எதிர்கொள்ள வேண்டிவரும், போராட்டத்தின் இலக்கு பாதிக்கப்பட்டு பின்னடைவு ஏற்படும், அத்தோடு போராட்டம் முளையிலேயே கிள்ளியெறியப்பட்டுவிடும் ஆகியனவே சிறை வாழ்க்கை மூலம் சிவகுமாரன் பட்டறிந்த யதார்த்தம். எனவே, எதிரிகளிடம் உயிருடன் பிடிபடும் சூழல் ஏற்படின் சயனைற் உட்கொண்டு உயிரைப் போக்கிக்கொள்வதன் மூலமே போராட்டத்தை முன்னகர்த்த முடியுமென்ற முடிவை எடுத்தார்.

போராட்ட முறைமையென்பது கொள்கைகளை முன்னிறுத்தி உரிமைகளை வென்றெடுப்பதற்கான வழியேயன்றி, போராட்ட முறைமையே கொள்கையாக வரித்துக்கொள்ள முடியாதென்பதில் உறுதியான கருத்தைக் கொண்டிருந்தார். எனவே,போராட்ட முறைமைகள் காலத்திற்கும் சூழலுக்குமேற்ப மாற்றமடைய வேண்டுமென்பதில் ஆழமானதும் தெளிவானதுமான கருத்தைக் கொண்டிருந்தார். தமிழ் மக்களின் அபிலாசைகளையும் உரிமைகளையும் நிலைநிறுத்தும் பொருட்டு அமைதி வழியில் மேற்கொள்ளப்பட்டு வந்த போராட்டங்களையும் பெரிதும் மதித்து ஏற்றுக்கொண்டார். சிறையில் இருந்த காலங்களில் உணவு மறுப்புப் போராட்டங்களை முன்னெடுத்தார்.

அத்தோடு தமிழ் மக்களுக்கெதிரான சிங்களத்தின் கொடுமைகளுக்கும் அநீதிகளுக்குமாக மட்டும் சிவகுமாரன் போராடவில்லை. தமிழ்ச் சமூகத்திற்குள் புதைந்திருந்த சமூக அடுக்குகளைப் பொசுக்கும் முயற்சிகளிலும் அவர் பின்நிற்கவில்லை. சாதியம், பெண் அடக்குமுறைப்போக்கு, மணக்கொடை போன்ற சமத்துவ வாழ்வுக்குப் புறம்பான போக்குகளையும் துணிந்து நின்று எதிர்த்தார்.


சிறிமா அரசானது, 1974 ஜனவரியில் யாழப்பாணத்தில் ஒழுங்கு செய்யப்பட்ட 4வது உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டைக் குழப்பும் கீழ்த்தனமான நோக்கில் பல இடையூறுகளை விளைவித்தது. ஆனாலும் மாநாட்டு ஒழுங்கமைப்பாளர்களின் உறுதியான செயற்பாட்டால் மாநாடு பெரும் மக்கள் எழுச்சியுடன் நடந்தேறியது. இவ் வெற்றியின் பின்னணியில் சிவகுமாரன் மிகவும் உத்வேகத்துடன் செயற்பட்டார் என்பதும் வரலாற்றில் பதிவான ஒன்று.

பின்னர் மாநாட்டுக்கு வருகை தந்திருந்த வெளிநாட்டுப் பிரமுகர்களுக்கு பிரியாவிடை வழங்கும் நிகழ்ச்சியில் பொதுமக்கள் மீது சிங்களக் காவல்துறையினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதில் 9 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். சிறிலங்கா காவல்துறையின் இந்த மிலேச்சத்தனமான படுகொலையை நேரில் கண்ட சிவகுமாரன் கொதித்தெழுந்தார். அப்படுகொலைக்கு உடந்தையாகவிருந்த உதவிக் காவல் அதிகாரி சந்திரசேகராவைப் பழிவாங்குவதற்கு கடுமையான முயற்சிகளை மேற்கொண்டார்.

சிவகுமாரன் விடுதலை என்ற உன்னத இலட்சியத்திற்காக உண்மையான அர்ப்பணிப்புடனும் தொலைநோக்குடனும் செயற்பட்டவர். தமிழ் மக்களின் விடியலுக்காக போராடிய தியாகி பொன்.சிவகுமாரன் அவர்கள் களச்செயற்பாட்டில் ஈடுபட்டிருந்த தருணத்தில் எதிரிகளால் சுற்றிவளைக்கப்பட்ட போது, எதிரிகளிடம் உயிருடன் பிடிபடக்கூடாது என்ற உயர்ந்த இலட்சியத்தைத் தாங்கி சயனைட் அருந்தி தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முதல் தற்கொடையாளனாய் 1974ம் ஆண்டு யூன் 5ம் நாள் தியாகி பொன் சிவகுமாரன் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

தமிழீழ தாயக விடுதலைக்காகவும் தமிழீழ மக்களின் விடிவுக்காகவும் களமாட புறப்படும் போது எதிரியின் சுற்றி வளைப்பில் அகப்பட்டு நஞ்சருந்தி வீரச்சாவை அணைத்துக் கொண்ட எங்கள் தியாகி பொன்.சிவகுமாரனுக்கு எங்கள் வீர வணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம். இதே நாளில் வீரச்சாவடைந்த ஏனைய போராளிகளுக்கும் எங்கள் வீர வணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம்.

தமிழீழம் கிடைக்கும் வரை உங்களை நிச்சயம் தொடர்வோம்.

Image Hosted by ImageShack.us

பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

சனி, 2 ஜூன், 2012

இஸ்ரேலிடம் இருந்து ஈழத் தமிழர்கள் கற்றுக்கொள்ள வேண்டியவைகள்: [பாகம் 06]

கிறிஸ்வர்கள் என்கின்ற சக்திவாய்ந்த பாதுகாப்பு வலயத்தை தன்னைச்சுற்றி அமைத்துக்கொண்டதன் ஊடாக, இஸ்ரேலியர்களால் ஒரு விடுதலையைப் பெற முடிந்தது என்று கடந்த வாரம் இந்தத் தொடரில் ஆராய்ந்திருந்தோம்.

கிறிஸ்வர்கள் என்கின்ற நட்பு வலயத்தை இஸ்ரேலியர்கள் அமைத்துக்கொண்டதால் ஒரு விடுதலையைப் பெற முடிந்தது மாத்திரம் அல்ல, அவர்கள் பெற்ற அந்த விடுதலையை தொடர்ந்து பாதுகாத்துக்கொள்ளவும் அவர்களால் முடிகின்றது.

‘கிறிஸ்தவர்கள் இஸ்ரேலுக்காக இரங்கவேண்டும், ஜெருசலேமின் சமாதானத்திற்காகப் பிராத்தனை செய்யவேண்டும்” என்பது, பைபிளில் கூறப்படுகின்ற முக்கியமான கட்டளைகளுள் ஒன்று. ‘ஒருவன் எருசலேமை மறப்பதென்பது அவனது வலதுகை தன் தொழிலை மறப்பதற்கு சமமானது” என்று பைபிள் கூறுகின்றது. ‘இஸ்ரேலை நேசிப்பவர்கள், இஸ்ரேலுக்காக பிரார்த்தனை செய்பவர்கள் சுகித்திருப்பார்கள்” என்று கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிள் கூறுகின்றது.

இதில் குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால், கிறிஸ்தவ குழுமங்கள் மற்றும் நாடுகளின் பைபிள் நம்பிக்கைகளைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்வதில் இஸ்ரேல் வெற்றி பெறுவதுதான்.

பைபிளில் உள்ள வார்த்தைகளின் அடிப்படையில் வாழ்ந்துவருகின்ற கிறிஸ்தவக் குழுமங்கள் தாமாகவே முன்வந்து இஸ்ரேலியர்களுக்கு வழங்கும் உதவி ஒத்தாசைகளைப் பெற்றுக்கொண்டு தன்னை ஸ்திரப்படுத்திக்கொள்வதில் இஸ்ரேல் மிக மிக நுணுக்கமாகத், திறமையாகச் செயற்பட்டு வருகின்றது. இன்று இஸ்ரேலால் உலகில் வீறுநடை போட்டு வலம் வர முடிகின்றதென்றால், அதற்கான காரணங்களில் முக்கியமானது கிறிஸ்தவர்களிடம் காணப்படுகின்ற இந்த நம்பிக்கை என்றால் மிகையாகாது.

இஸ்ரேல் தொடர்பான கிறிஸ்தவர்களின் நம்பிக்கையும், கரிசனையும் இஸ்ரேலை யாருமே நெருங்கமுடியாதவாறான ஒரு பாரிய அனுகூலத்தை இஸ்ரேல் தேசத்திற்குப் பெற்றுக்கொடுத்து வருகின்றது.

இஸ்ரேல் தொடர்பான கிறிஸ்தவர்களின் நம்பிக்கை எப்படி இஸ்ரேலை பாரிய அச்சுறுத்தலில் இருந்து காப்பாற்றியது என்பதற்கு மற்றுமொரு உதாரணத்தை இன்று நாம் பார்க்க இருக்கின்றோம்.

1973ம் ஆண்டு அக்டோபர் மாதம 6ம் திகதி இஸ்ரேலிய சரித்திரத்தில் மறக்க முடியாத ஒரு நாள்.

சுதந்திரம் பெற்ற நாள் முதலாக தொடர் வெற்றிகளை மாத்திரமே பெற்றுவந்த இஸ்ரேல் தேசம் ஒரு மிகப் பெரிய தோல்வியின் விளிம்புக்குச் சென்றிருந்த நாள். இஸ்ரேலிய வரலாற்றிலும், உலக வரலாற்றிலும் முக்கியமாகக் குறிப்பிடப்படுகின்ற யொம் கிப்பூர் யுத்தம் (Yom Kippur war) ஆரம்பமான தினம்தான் அது.

அன்றைய தினம் யூதர்களுக்கு ஒரு புனித நாள். யோம் கிப்பூர் என்கின்ற யூதர்களின் முக்கிய பண்டிகையை இஸ்ரேலியர்கள் கொண்டாடிக்கொண்டிருந்த நேரம்.

மறுபக்கம் இஸ்லாமியர்களும் ரமழானை அனுஷ்டித்துக்கொண்டிருந்தார்கள்.

ஒரு சண்டை ஏற்படுவதற்கான சந்தர்ப்பமே இல்லா தினம் அது.

ஆனால் திடீரென்று ஒரு பெரிய யுத்த மேகம் இஸ்ரேலை சூழ ஆரம்பித்தது.

யூதர்கள் மத அனுஷ்டானங்களுடன் அன்றைய தினத்தைக் கழித்துக்கொண்டு இருக்க, திடீர் என்று குண்டுச் சத்தங்கள் கேட்க ஆரம்பித்தன. ஒன்றல்ல இரண்டல்ல ஆயிரக்கணக்காண குண்டுகள் இஸ்ரேலின் கட்டுப்பாட்டிலிருந்த பல பிரதேசங்கள் மீது தொடர்சியாகப் பொழிய ஆரம்பித்தன.

என்ன அங்கு நடக்கின்றது என்று சிந்திப்பதற்குக்கூட நேரம் கொடுக்காதபடி அரபு உலகம் இஸ்ரேல் மீது ஒரு திடீர் தாக்குதலை ஆரம்பித்திருந்தது.

இஸ்ரேல் மீது தொடர் குண்டுத்தாக்குதல் நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற நேரத்தில் எகிப்து நாட்டின் 600 யுத்தத்தாங்கிகள் சுவிஸ் கால்வாயைக் கடந்து இஸ்ரேலின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த சீனாய் தீபகத்திற்குள் நுழைந்தன. பெரிய சண்டைகள் எதுவும் இன்றி எல்லைகளில் காவல்கடமைகளில் ஈடுபட்டிருந்த இஸ்ரேலிய இராணுவத்தினரை அழித்துக்கொண்டு அந்தப் பகுதிகளை ஆக்கிரமித்தது எகிப்து.

அதேவேளை சீரியாவின் நூற்றுக்கும் அதிகமான மிக் மற்றும் சுக்காய் ரக குண்டுவீச்சு விமானங்கள் இஸ்ரேலின் கட்டுப்பட்டுப் பிரதேசமான கோலன் கைட்ஸ் (G0lan Heights) பகுதிகள் மீது குண்டுகளை வீசி வான் முற்றுகையை மேற்கொண்டன.

இஸ்ரேலின் இரண்டு திசைகள் மீது ஒரே நேரத்தில் இரண்டு நாடுகள் எதிர்பாராதவிதமாக மேற்கொண்ட திடீர் தாக்குதல் அது.

அதிர்ந்துவிட்டது இஸ்ரேல் தேசம்.

அடுத்து என்ன செய்வது?

அணுஆயுதத் தாக்குதலைச் செய்வதைத் தவிர வேறு வழியில்லை என்று இஸ்ரேல் நாடாளுமன்றம் தீர்மானம் எடுத்தது.

மறுபக்கம் சீரியாவுக்கு அதிக அளவில் இராணுவ ஒத்தாசைகளை வழங்கிக்கொண்டிருந்த சோவியத் யூனியன், இஸ்ரேல் அனு ஆயுதங்களைப் பாவிக்கும் சந்தர்ப்பத்தில் சிரியாவுக்கும் எகிப்துக்கும் அணுவாயுதங்களை வழங்கும் சாத்தியங்களும் தென்பட்டது.

ஒரு அழிவின் விளிம்புக்கு மத்திய கிழக்கு மாத்திரம் அல்ல முழு உலகுமே சென்றுவிட்டிருந்த ஒரு சூழ்நிலை உருவானது..

அந்த நேரத்தில் இஸ்ரேலின் பிரதமராகப் பதவி வகித்தவர் ஒரு மூதாட்டி. அவரது பெயர் கோல்டா மேயர் அம்மையார் (Golda Meir).

இஸ்ரேலின் அணு ஆயுதங்களைத் தயார் நிலையில் வையுங்கள் என்று இஸ்ரேலியப் படைகளுக்கு உத்தரவை வழங்கிவிட்டு, அவரச அவசரமாக அமெரிக்காவைத் தொடர்புகொண்டார் கோல்டா மேயர்.

அமெரிக்கா தமக்கு உதவாவிட்டால் இஸ்ரேல் அழிவதை யாராலும் தடுக்கமுடியாது என்று கூறிய கோல்டா மேயர் அம்மையார், அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆயுத தளபாடங்களைத் தந்து உதவவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

அந்த நேரத்தில் அமெரிக்காவின் அரச தலைவராக ரிச்சரட் நிக்சன் (Richard Nixon) பதவி வகித்தார். நிக்சன் ஒரு நல்ல மனிதர் என்று பெயர் எடுத்தவர். சொல்லுக்கும் செயலுக்கும் வித்தியாசம் காண்பிக்காத ஒரு நல்ல அரசியல்வாதி என்று மக்களால் வர்ணிக்கப்பட்டவர். அதற்கும் மேலாக நல்ல கடவுள் பக்தி மிக்கவர். சிறுவயது முதலே அவர் தாயின் பிள்ளை. தாயை மிக அதிகமாக நேசித்து வளர்ந்தவர்.

சிறு வயது முதலே அவரது தாயார் ஒரு காரியத்தை நிக்சனுக்கு அடிக்கடி கூறி வந்துள்ளார். அதாவது, இஸ்ரேலுக்கு உன்னால் முடிந்த உதவிகளைச் செய்யவேண்டும். நீ அப்படிச் செய்வதை கடவுள் விரும்புகிறார். இஸ்ரேலுக்கு நீ உதவினால் கடவுள் உன்னை ஆசீர்வதிப்பார் என்று கூறி வந்துள்ளார்.

அமெரிக்காவிடம் உதவி கோரிய இஸ்ரேலியப் பிரதமர் கோல்டா மேயரின் குரல் தனது தாயின் குரல் போன்று நிக்சனுக்கு தோன்றியது.

உடனே இஸ்ரேலுக்குத் தேவையான அனைத்து இராணுவ உபகரணங்களையும் சப்ளை செய்யுமாறு உத்தரவிட்டார் நிக்சன்.

உலக வரலாற்றில் மேற்கொள்ளப்பட்ட மிகப் பொரிய இராணுவ உதவி என்று போரியல் ஆய்வாளர்களால் கூறப்படுகின்ற இராணு உதவியை இஸ்ரேலுக்கு அமெரிக்கா செய்தது.
1973ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 14ம் திகதி முதல் நவம்பர் மாதம் 14ம் திகதி வரை அமெரிக்க விமானப்படையினால் மேற்கொள்ளப்பட்ட இஸ்ரேலுக்கான அந்த வான் வழி ஆயுத வினியோகத்தை அமெரிக்கா ஒரு ஒப்பரேஷனாகவே செய்திருந்தது. அந்த ஆயுத வினியோக நடவடிக்கைக்கு ஒப்பரேசன் நிக்கல் க்ராஸ் (Operation Nickel Grass) என்று அமெரிக்கா பெயரிட்டிருந்தது.

இந்த நடவடிக்கையின் பொழுது சுமார் 22,325 தொன் ஆயுத தளபாடங்களை அமெரிக்கா இஸ்ரேலுக்கு வழங்கியிருந்தது. யுத்தத் தாங்கிகள், ஆட்டிலறிகள், வெடிபொருட்கள் என்று ஒரு யுத்தத்திற்குத் தேவையான அனைத்து யுத்த தளபாடங்களையும் அமெரிக்கா இஸ்ரேலுக்கு வழங்கியது.

அமெரிக்கா வழங்கிய அந்த ஆயுத தளபாடங்களின் உதவி கொண்டு அரபு நாடுகளுகளின் படையெடுப்புக்கு எதிராக மிகப் பொரிய வெற்றியை பெற்றது இஸ்ரேல்.

இஸ்ரேலின் இந்தப் பாரிய யுத்த வெற்றிக்குப் பின்னால் இருந்தது றிச்சர்ட் நிக்சன் என்ற ஒரு மனிதனின் கிறிஸ்தவ மத நம்பிக்கைதான். (இஸ்ரேலுக்கு உதவி வழங்கியதன் காரணமாக அமெரிக்காவில் பாரிய அரசியல் நெருக்கடியை நிக்சன் சந்திக்கவேண்டி இருந்தது என்பது வேறு விடயம்)

தம்மைச் சுற்றி ஒரு நட்பு வலயத்தை வைத்துப் பேணுவதன் மூலம் எப்படியான அனுகூலங்களை ஒரு தேசத்தால் பெறமுடியும் என்பதற்கு, இஸ்ரேல் -கிறிஸ்தவ நம்பிக்கை ஒரு சிறந்த உதாரணம்.

அடுத்ததாக, இந்த இஸ்ரேல்- அமெரிக்க நட்பை ஒட்டியதான மற்றொரு விடயத்தைப் பற்றி இந்தச் சந்தர்ப்பத்தில் பார்ப்பது நல்லது என்று நினைக்கின்றேன்.

ஒரு சந்தர்ப்பத்தில் உலகில் இருந்த பெரும்பாலான நாடுகள் இஸ்ரேல் மீது விரோதம் பாராட்டியிருந்த நிலையில், இஸ்ரேல் எவ்வாறு அந்த நாடுகளைச் சமாளித்தது என்பதும், அதற்கு அமெரிக்கா எவ்வாறு உதவி செய்தது என்றும் நிச்சயம் நாம் ஆராய்ந்துதான் ஆகவேண்டும்.

அதற்கு, இலங்கைத் தீவினுள் இஸ்ரேல் எவ்வாறு உள் நுழைந்தது, அதற்கு அமெரிக்கா எவ்வாறு காரணமாக இருந்தத என்கின்ற வியடம் ஒரு சிறந்த உதாரணமாக இருக்கும் என்று நினைக்கின்றேன்.

சிறிலங்கா–அமெரிக்கா-இஸ்ரேல் என்கின்ற நாடுகளுக்கிடையிலான நப்பு, அந்த நட்பின் பின்னணி, அவற்றில் இருந்து ஈழத் தமிழர் கற்றுக்கொள்ளக்கூடிய பாடங்கள் என்பன பற்றி அடுத்த வாரம் விரிவாக ஆராய்வோம்.
தொடரும்…


நிராஜ் டேவிட்
nirajdavid@bluewin.ch
Image Hosted by ImageShack.us

பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

Get this widget