thalaivan

thalaivan

செவ்வாய், 30 ஆகஸ்ட், 2011

செங்கொடியின் 'தீ நாக்கில் எரிகிறது' அஹிம்சையின் பெருநெருப்பு!!


உள்ளெரிந்த நெருப்பில்
ஒரு துளி போர்த்தி வெந்தவளே,
உனை நெருப்பாக்கி சுடப் போயி
எம் மனசெல்லாம் எரிச்சியேடி..

மூணு உயிர் காக்க உடம்பெல்லாம்
தீ மையிட்டுக் கொண்டவளே,
தீ'மையில் உன் விதியெழுதி - எம்
பொய்முகத்தை உடச்சியேடி..

விடுதலை விடுதலைன்னு
வெப்பம்தெறிக்க கத்துனியா?
அதை கேட்காத காதெல்லாம்
இப்போ உன் மரணத்தால் திறந்துச்சேடி..

செத்தா சுடுகாடு, சும்மா இருந்தா
நீதி ஏதுன்னு; ஒரக்கக் கத்திப் போனவளே,
நீ நெருப்போட புரண்டபோதே
தமிழன் வரலாறே கருகுச்சேடி...

பாரதத் தாய் அஹிம்சை நெருப்பில்
உன் உயிர்பட்டுத் துடிதுடிக்க -
உன் ஒருத்தி மரணம் போதும் போதும்
உலக கண்ணெல்லாம் ரத்தமேடி..

இப்படி கெட்ட பேரு வாங்கிவர
மரணம் தான் சொல்லுச்சாடி ?
இந்த சின்னவயசு கனவுகளை
வரலாற்றில் எரிச்சியேடி..

இனி கத்தியழ யாரிருக்கா 
இப்படி ஒன்னொன்னா போச்சுதுன்னா?
நாளை குரல்கொடுக்க யாரிருக்கா
நீயெல்லாம் எரிந்துப்போனா?

உன்னொருத்தியோட நிருத்திக்கடி
வேண்டாமே இனி ஓரிழப்பு
போராட்ட குணத்திற்கு -
தற்கொலைதான் பேரிழப்பு;

நீ விட்ட உயிரு மீட்டிடாத
கண்ணீர் - மனசின் பெருநெருப்பில் பொசுங்குதேடி
இனி மொத்த நாடும் சேருமோ இல்லையோ
சேரா தமிழ் ஒற்றுமைக்கு செங்கொடியே காவலடி!!


நன்றி:வித்யாசாகர்

Image Hosted by ImageShack.us


வியாழன், 25 ஆகஸ்ட், 2011

ராஜிவ் காந்தி கொலை – புலிகள் சிக்கியது எப்படி? விறு விறுப்பு தொடர் அத்தியாயம்-06

அத்தியாயம்-06


கொலை நடைபெற்ற நிமிடத்தில், முக்கியஸ்தர்கள் யாரும் அருகில் இல்லை!
குண்டு வெடிப்பால் அந்தப் பகுதியில் ஏற்பட்ட கரும் புகை தணியத் தொடங்கியது.  அங்கு பீதியும், குழப்பமும் காணப்பட்டன. குண்டு வெடிப்பதற்குமுன் அங்கு இருந்த கூட்டம் வெகுவாகக் குறைந்துவிட்டது. காரணம்,  ஏராளமான கட்சித் தொண்டர்களும், பொலிசாரும் அச்சத்தால் அங்கிருந்து ஓடிப்போய்விட்டனர்.

அங்கு விபரீதமாக ஏதோ நடைபெற்று விட்டது என்பதைப் புரிந்துகொண்டு,  அச்சத்தில் அந்த இடத்தைவிட்டு ஓடியவர்கள் அவர்கள்.  கடமையில் இருந்த போலீஸாரில் சிலரும் அங்கிருந்து ஓடியவர்களில் அடக்கம் என்பது மறுநாள் விசாரணையில் தெரியவந்தபோது, தமிழக போலீஸ் தலைமை அதிர்ந்து போனது.

ஆனாலும், கட்சித் தொண்டர்கள் சிலரும், பொலிசார் சிலரும் குண்டு வெடிப்பின் பின்னரும் அந்த இடத்தைவிட்டு அகலாமல், அங்கேயே இருந்தனர். தமிழக காங்கிரஸ் கட்சியின் இரு தலைவர்களான ஜி.கே. மூப்பனாரும், வாழப்பாடி ராமமூர்த்தியும்அங்கேயே இருந்தனர்.

இவர்கள் இருவரும் அவசர அவசரமாக, ராஜிவ்காந்தி எங்கே எனத் தேடினர்.

குண்டுவெடிப்பு நடைபெற்ற நிமிடத்தில், தமிழக காங்கிரஸின் பிரதான தலைவர்கள் இருவருமே,  ராஜிவ் காந்திக்கு அருகில் இருக்கவில்லை – வெடிகுண்டு பாதிக்கும் தொலைவில்கூட இருக்கவில்லை – என்பது ஆச்சரியமான உண்மை.

வாழப்பாடி ராமமூர்த்தி, ராஜிவ்காந்தி  மேடையை நோக்கி நடந்து வரும்போதே அவரில் இருந்து விலகி, முன்னே சென்று விட்டார்.  ராஜிவ் காந்தியை சூழ்ந்த ஆதரவாளர்களை விலக்கியபடி முன்னேறிச் சென்ற அவர், பொதுக்கூட்ட மேடையில் ஏறி, அங்கே காத்திருந்தார் .

ராஜிவ் காந்தி மேடையை நோக்கி வருவதற்குமுன், இந்திரா காந்தி சிலைக்கு மாலை அணிவித்தார் என்று எழுதியிருந்தோம் அல்லவா? அப்போது ராஜிவ்காந்தியுடன் நின்றிருந்தார் மூப்பனார். இந்திரா காந்தி சிலைக்கு மாலை அணிவித்தபின்  ராஜிவ் காந்தி மேடையை நோக்கி நடக்கத் தொடங்கியபோது, அவருடன் செல்லாமல் பின்தங்கி, ஒரு மரத்தடியே  நின்று விட்டிருந்தார் மூப்பனார்.

இவர்களது இந்த நடவடிக்கைகள், பின்னாட்களில் சில கேள்விகளை எழுப்பியது.  குண்டு வெடிப்பில் ராஜிவ் காந்தி கொல்லப்பட்டபோது,  தமிழக காங்கிரஸ் பிரமுகர்களில் யாருக்குமே, எந்தப் பாதிப்பும் ஏற்படாதது எப்படி? குண்டு வெடித்த நிமிடத்தில், எந்தவொரு தமிழக காங்கிரஸ் பிரமுகரும் ராஜிவ் காந்திக்கு அருகில்கூட நிற்காமல் போனது எப்படி? என்ற கேள்விகள் பின்னாட்களில் எழுந்தன. அவற்றுக்கான பதில்கள், கடைசிவரை கூறப்படவில்லை!

குண்டு வெடித்த உடனேயே அந்த இடத்தை நோக்கி வாழப்பாடி ராமமூர்த்தியும், மூப்பனாரும் ஓடிச்செல்வதைக் காணக்கூடியதாக இருந்தது. அங்கு கரும்புகை அடங்கத் தொடங்கியபோது,  தரையில் தங்கள் தலைவர் ராஜிவ் காந்தியின் சிதைந்துபோன உடலைத்தான் அவர்களால் காணமுடிந்தது.

ராஜிவ்காந்தி அணிந்திருந்த ‘லோட்டோ ஷுக்கள்’தான் அவரது உடலை எளிதாக அடையாளம் காண உதவின.

ராஜிவ்காந்தியின் உடலைத் தனது கைகளால் தூக்க மூப்பனார் முயன்றபோது, சதைப் பிண்டங்கள்தான் கைகளில் வந்தன.

தரையில் வீழ்ந்திருந்த ராஜிவ் காந்தியின் உடல், முகம் தரையை நோக்கி இருக்கும் விதத்தில் குப்புற வீழ்ந்திருந்தது.  குண்டு வெடிப்பால் ஏற்பட்ட பள்ளத்தில் அவரது முகம் தரையிலுள்ள மண்ணில் ஓரளவுக்குப் புதைந்திருந்தது. இதனால், மூப்பனாரும் மற்றையவர்களுமாகச் சேர்ந்து,  அவரது  உடலை முகம் தெரியும் வகையில்  திருப்பிப் போட்டனர்.

அதன்பின், ராஜிவ் காந்தியின் உடல் மீது, சால்வை ஒன்றைப் போர்த்தினார் மூப்பனார்.

இதெல்லாம் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில், குண்டு வெடித்ததால் ஏற்பட்ட தாக்கம் அந்த இடத்தில் இருந்தது. வெடிமருந்தின் மணம் அந்த இடத்தைச் சூழ்ந்திருந்தது.  காற்று அவ்வளவாக அடிக்காத காரணத்தால், கரும் புகை முழுமையாக அகலவில்லை.  ராஜிவ் காந்தியின் உடல் கிடந்த சிவப்புக் கம்பள விரிப்பின் ஒரு பகுதியில் தீ எரிந்து கொண்டிருந்தது.

அப்போது அந்த இடத்துக்கு ஓடிவந்த போலீஸ் ஐ.ஜி. ராகவன்,  அந்தத் தீயை அணைத்தார்.

இதற்கிடையே தகவல் தெரிவிக்கப்பட்டு, ஒரு ஸ்ட்ரெச்சர் கொண்டுவரப்பட்டிருந்தது. அதில் வைக்கப்பட்ட ராஜிவ் காந்தியின் உடல், பிரதேப் பரிசோதனைக்காக  சென்னையில் உள்ள அரசாங்கப் பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவரது உடல், பொலிஸ் வாகனம் ஒன்றிலேயே கொண்டு செல்லப்பட்டது.

இதையடுத்து, குண்டு வெடிப்பில் கொல்லப்பட்ட மற்றையவர்களது உடல்களையும், காயமடைந்தவர்களையும் அங்கிருந்து அகற்றும் பணிகள் தொடங்கின. மற்றவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக அகற்றப்பட்ட போது, ஹரிபாபுவின் உடலின்மீது வீழ்ந்து கிடந்தது, அவர் இறுதியாகப் பயன்படுத்திய ‘சினான்’ காமெரா.

காமெராவைக் கவனித்த பொலிஸ் ஐ.ஜி. ராகவன், அதை எடுத்துப் பத்திரப் படுத்துமாறு உத்தரவிட்டபின், அதைப்பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளாமல், மற்றைய பணிகளில் மூழ்கிவிட்டார்.

குண்டு வெடிப்பு நடைபெற்ற பகுதியில், பல பொருட்கள் சிதறிக் கிடந்தன. அங்கிருந்து ஓடியவர்கள் விட்டுச் சென்ற ஏராளமான செருப்புகள், ஹேன்ட்-பேக்கள், பைகள் என்று தரையெங்கும் பல பொருட்கள் சிதறிக் கிடந்தன.

அந்தப் பொருட்களைப் போல ஒரு பொருளாகவே, இந்த   சினான்  காமெராவும், பத்தோடு பதினொன்றாக சேகரிக்கப்பட்டது. எவ்வித உயர் பதவியிலுமில்லாத சாதாரண பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரால் இந்த காமெரா பத்திரப்படுத்தப் பட்டது.

இந்த காமெராவுக்கு உள்ளேயுள்ள பிலிம் ரோலில்தான், மனித வெடிகுண்டாக வந்து ராஜிவ் காந்தியைக் கொன்ற பெண்ணின் உருவமும், அவருக்கு துணையாக வந்திருந்த மற்றையவர்களின் உருவங்களும், குண்டு வெடிப்பைத் திட்டமிட்டுக் கொடுத்தவரின் உருவமும், வெவ்வேறு பிரேம்களில் பதிவாகியிருந்தன.

இந்த ஒற்றைக் காமெரா மாத்திரம் புலனாய்வாளர்களின் கைகளில் கிடைக்காதிருந்தால்,  ராஜிவ் காந்தியை கொன்றது யார் என்பது, இன்றுவரை கேள்விக் குறியாகவே இருந்திருக்கும்!

*  *  *

ராஜிவ்காந்தியின் உடல் சென்னையிலுள்ள பொது மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தது.  அவர் மரணமடைந்து விட்டார் என்பது அங்கு வைத்து அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டது. பிரேதப் பரிசோதனைகள் செய்யப்பட்டன. அதன்பின் அவரது உடல், மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

இதற்கிடையே ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட சேதி, டில்லிக்கு அறிவிக்கப்பட்டு, அவரது குடும்பத்தினருக்கும் சொல்லப்பட்டது. டில்லியிலிருந்து சென்னை செல்வதற்காக, இந்திய விமானப் படைக்குச் சொந்தமான  சிறப்பு விமானம் ஒன்றை மத்திய அரசு வழங்கியது. அதில், ராஜிவ் காந்தியின் மனைவி சோனியா காந்தி, மகள் பிரியங்கா ஆகியோர் சென்னை வந்து சேர்ந்தனர்.

மீனம்பாக்கம் விமான நிலையத்தில் சில நிமிடங்களே நின்றிருந்த அந்த விமானத்தில், ராஜிவ் காந்தியின் உடல் ஏற்றப்பட, அந்த விமானம்  டில்லிக்கு புறப்பட்டுச் சென்றது. அப்போது மே 22ம் தேதி, அதிகாலை நேரம்.

*  *  *

ராஜிவ் காந்தி படுகொலைச் சம்பவம் நடந்த நேரத்தில், தமிழகத்தில் அரசியல் நிலை குழப்பத்தில் இருந்தது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி நடைபெறவில்லை. கவர்னர் ஆட்சி (மத்திய அரசின் நேரடி ஆட்சி) நடந்து கொண்டிருந்தது. அப்போது தமிழக கவர்னராக இருந்தவர்,  பீஷ்மநாராயண சிங்.

ராஜிவ் கொலை நடப்பதற்கு சில மாதங்களுக்கு முன்புதான், தமிழகத்தில், சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து விட்டது என்ற காரணத்திற்காக  தமிழக அரசு கலைக்கப்பட்டிருந்தது.  கலைக்கப்பட்ட ஆட்சி, கருணாநிதி தலைமையிலான தி.மு.க. அரசு.

ராஜிவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட விஷயம், நள்ளிரவில் கவர்னரை தூக்கத்தால் எழுப்பிக் கூறப்பட்டது. அவர், டில்லியுடன் தொடர்பை ஏற்படுத்தி, அடுத்து, என்ன செய்வது என்று ஆலோசனையில் ஈடுபட்டார்.

தமிழகத்தின் ஆட்சி என்னதான் கவர்னரின் கைகளில் இருந்தாலும், அது ஒரு தற்காலிக ஏற்பாடுதான். ஆட்சியின் முழுமையான செயற்பாடுகளையும் கட்டுப்படுத்துவது கவர்னர் ஒருவரால் சாத்தியமில்லை. காரணம், எந்தத் துறைக்கும் – போலீஸ் துறை உட்பட – பொறுப்பு வகிக்கும் அமைச்சர்கள் கிடையாது.

சுருக்கமாகச் சொன்னால், போலீஸ் மெக்கானிசத்தை முழுமையாகச் செயற்படுத்த கவர்னரால் முடியாது.

டில்லியுடன் ஆலோசித்த கவர்னர் பீஷ்ம நாராயண சிங்,  ராஜிவ் காந்தி கொலை விசாரணை பற்றிய தனது பரிந்துரையை மத்திய  அரசுக்கு அனுப்பி வைத்தார். அதில் ராஜிவ் காந்தி படுகொலைச் சம்பவப் புலனாய்வுப் பணியை தமிழக போலீஸிடம் விட்டுவிடாமல், மத்திய புலனாய்வுத்துறையான சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க வேண்டும் என்று ரெக்கமென்ட் பண்ணியிருந்தார்.

“கவர்னரின் பரிந்துரை ஏற்கப்பட்டு, புலனாய்வுப் பொறுப்பு சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்பட்டது” என்று ஒற்றை வாக்கியத்தில் கூறிவிட்டு, செல்ல முடியாது. காரணம், சி.பி.ஐ.யிடம் ராஜிவ் கொலை கேஸ் ஒப்படைக்கப்படும் முன்னர், கொலை நடந்த மறுநாள் (மே 22ம் தேதி)  நடந்த சில சம்பவங்கள் பற்றிக் கூற வேண்டும்.

சி.பி.ஐ. இந்த கேஸை எப்படி எடுத்துக் கொண்டது, அவர்களது புலனாய்வுக்குழு யாருடைய தலைமையில், எப்படி அமைக்கப்பட்டது என்பதைப் புரிந்து கொள்ள அந்தச் சம்பவங்களைத் தெரிந்து கொள்வது அவசியம். புலன் விசாரணை தொடர்பாக இந்திய அதிகாரிகளிடையே நடைபெற்ற முக்கியமான தொலைபேசிக் கலந்துரையாடல்களைத்தான் இங்கு நாம் குறிப்பிடுகிறோம்.

(7ம் அத்தியாயம் தொடரும்… அடுத்த வாரம்)







நன்றி
விறுவிறுப்பு.கொம்


செவ்வாய், 23 ஆகஸ்ட், 2011

கரும் புலிகள்


கலங்காத நெஞ்சோடு 
கனவினை மனதில் சுமந்துகொண்டு 
கால தேவன் மடியில் 
கண் துயிலும் தியாக சுடர்களே!

அச்சம் என்பது மனத்திலின்றி 
ஆடைகளாய் வெடிகுண்டு சுமந்து
அந்நியன் கேள்விகளுக்கு 
உயிராயிதமாய் பதில் கொடுத்தவர்களே!

ஆர்பரிக்கும் அலைகடல் நடுவினிலே 
அக்கினி குழம்பாய் வெடித்து சிதறி 
அலையோடு அலையாய் 
அணைந்த வீர மறவர்களே!

தாயக நினைவினை மனதேந்தி 
தலைவனவன் வழிநின்று 
தமிழினம் காத்திடவே 
தம்முயிர் கொடுத்த சரித்திர நாயகர்களே!

சாவினை தாமறிந்தும் 
தளராது எதிரி பாசறை புகுந்து
தரைமட்டம் செய்தனரே 
பகைவன் இருப்பிடத்தினை!

அண்ணன் சொல்லே வேதமென 
மில்லர் வழி சென்று 
தம்முயிரை மெழுகாய்
உருக்கிய தனை வீரர்களே!

தமிழன் வளர்ச்சிக்கும் -எம் 
தமிழீழ விடுதலைக்கும் 
தணலோடு சேர்ந்தவர்களை 
மனம் நிறுத்தி மௌன அஞ்சலி செய்திடுவோம்....


Image Hosted by ImageShack.us

நன்றி 
கவிஞர்:வேலணையூர் சசிவா

புதன், 17 ஆகஸ்ட், 2011

ராஜிவ் காந்தி கொலை – புலிகள் சிக்கியது எப்படி? விறு விறுப்பு தொடர் அத்தியாயம்-05

அத்தியாயம் 05


ராஜிவ் காந்திக்கு முன் வெடித்தது குண்டு!


பொதுக்கூட்ட மேடைக்கருகே இன்னமும் சிறிது நேரத்தில் ராஜிவ் காந்தி வந்துவிடுவார் என்பதற்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கின. ராஜிவ் காந்தியை சந்திக்கும் நேரம் நெருங்கி விட்டதால், லதா கண்ணனும், அவருக்குப் பின்னால் நின்றிருந்த அவரது மகள் கோகிலாவும் பரபரப்பாக காணப்பட்டனர்.

அனுமதிக்கப்பட்டவர்களின் கூட்டத்தில் அவர்கள் முன் வரிசையில் நின்றிருந்தனர். அவர்களுக்கு அருகே, கண்ணாடி அணிந்த சல்வார் கமீஸ் பெண் நின்றிருந்தார். அவரது கையில் ராஜிவ் காந்திக்கு அணிவிப்பதற்காக ஒரு சந்தன மாலை காணப்பட்டது.

இப்போது இந்தக் காட்சி வித்தியாசமாகத் தென்படவில்லை.

சரியாக ஒழுங்கு படுத்தப்படாத அந்தக் கூட்டத்தில், ராஜிவ் காந்தியை நேரில் பார்ப்பதற்காக நெருக்கியடித்துக் கொண்டிருந்த மற்றையவர்களில் ஒருவராகவே அந்த சல்வார் கமீஸ் பெண் காணப்பட்டார்.  சக்தி வாய்ந்த வெடிகுண்டு ஒன்று அவரது உடலில்  பொருத்தப்பட்டிருந்த விபரம் யாருக்கும் தெரியாதவரை, அவருக்கும் மற்றையவர்களுக்கும் இடையே எந்த வேறுபாடும் இல்லை.

அப்போது நேரம் இரவு 10.10 மணி.

ராஜிவ் காந்தி மேடையை நோக்கி வருவது தொலைவில் தெளிவாகத் தெரிந்தது.  மேடையை நோக்கி நடக்கத் தொடங்கியிருந்த ராஜிவ்காந்தி பொதுமக்களை நோக்கி கை அசைத்தார். அவருடன் காரில் வந்திருந்த இரு வெளிநாட்டுப் பத்திரிகை நிருபர்களுக்கு வழி ஏற்படுத்திக் கொடுத்தார் வாழப்படி ராமமூர்த்தி.

வாழப்படி ராமமூர்த்தி, ராஜிவ் பயணம் செய்த காரில் வந்திருக்கவில்லை. ராஜிவ் வந்த காருக்கு பின்னால் வந்த ஜீப்பில், ஒரு விடியோ கிராபருடன் வந்திறங்கியிருந்தார். ராஜிவ் காந்திக்கு கூட்டத்தில் வழியேற்படுத்திக் கொடுத்துவிட்டு, அங்கிருந்து அகன்று மேடையருகே சென்ற வாழப்படி ராமமூர்த்திதான், முதல் ஆளாகப் பொதுக்கூட்ட மேடையில் ஏறினார்.

வாழப்படி ராமமூர்த்தி மேடையிலிருந்து பார்த்தபோது, சற்றுத் தொலைவில் சவுக்குக்கட்டைத் தடுப்பு வேலி அருகே ராஜிவ் காந்தி செல்வது தெரிந்தது. தடுப்பு வேலிக்கு அப்பாலுள்ள பொதுமக்கள் சிலருடன் ராஜிவ் கை குலுக்குவதும் தெரிந்தது.

வயதான மரகதம் சந்திரசேகரால், காரிலிருந்து சற்று மெதுவாகத்தான் இறங்க முடிந்தது.

அதற்குள் காரிலிருந்து இறங்கி சில மீட்டர் தொலைவுக்கு ராஜிவ் காந்தி நடந்து சென்றுவிட்டார். எனினும், வேக நடையில் ராஜிவ் காந்தி அருகே நெருங்கிவிட்ட மரகதம் சந்திரசேகர், தனது தொகுதி ஆதரவாளர்களை ராஜிவ் காந்தியிடம் அறிமுகப்படுத்த முயன்றார்.

கூட்டத்தினர் மரகதம் சந்திரசேகரை நெருக்கியடித்துக் கொண்டிருந்தனர். லோக்கல் கட்சித் தொண்டர் ஒருவர், ராஜிவ்காந்திக்கு சால்வை அணிவித்துவிட்டு போட்டோவுக்கு ‘போஸ்’ கொடுத்தார். அப்போது அந்தத் தொண்டர் தம் இரு கைகளினாலும் ராஜிவ் காந்தியை பிடித்துக் கொண்டிருந்தார்.

இதைக் கண்ட மரகதம் சந்திரசேகர், அந்தத் தொண்டரைத் தள்ளிவிட முயன்றபோது, .நிலைதடுமாறி கீழே விழ இருந்தார். அருகிலிருந்த மற்றையவர்கள் அவரைத் தாங்கிப் பிடித்தனர்.

இந்த நிமிடத்தில் யார் பேசுவதும் யாருக்கும் கேட்காத வகையில் ஒரே இரைச்சலாக இருந்தது. யார் பொதுமக்கள், யார் கட்சித் தலைவர்கள், யார் அனுமதி பெற்றவர்கள், யார் அனுமதி பெறாதவர்கள் என்றல்லாம் கண்டுபிடிக்க முடியாத நிலை.

ராஜிவ் காந்தியை சுற்றிலும் சீருடை அணியாத பொலிசார் பாதுகாப்பு வளையம் அமைத்திருந்தனர். ஆனால், மக்களின் நெரிசலிலிருந்து ராஜிவ் காந்தியை பாதுகாப்பதே அவர்களுக்கு பெரிய பிரச்சினையாக இருந்தது.

கட்சித் தொண்டர்களும் பொதுமக்களும் சூழ மேடையை நெருங்கிவிட்டார் ராஜிவ்காந்தி.

விடியோ கிராபர்களுக்கு, பிரதான மேடைக்கருகே சிறியதாக ஒரு மேடை போடப்பட்டிருந்தது. ஓரளவு உயரமான இடத்தில் இருந்துதான் வீடியோ எடுக்க முடியும் என்பதால்தான் அப்படி ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டிருந்தது. இந்தக் கூட்டத்தை கவர் பண்ண வந்திருந்த வீடியோ கிராபர்கள் அனைவரும் அந்தச் சிறிய தற்காலிக மேடையில் நின்றிருந்தனர்.

அவர்கள் அனைவரும் ஒரே இடத்தில் நின்றிருந்ததற்கு மற்றொரு காரணமும் இருந்தது. விடியோ கேமெராக்களுக்கான மின் இணைப்பு, அந்த ஓரிடத்திலிருந்துதான் கிடைத்தது.(தற்போது இருப்பது போன்ற பாட்டரி பவர் காம்பாக்ட் வீடியோ கேமெராக்கள் அந்த நாட்களில் கிடையாது.  அந்த நாளைய பரொஃபெஷனல் வீடியோ கேமராக்களுக்கு மின் இணைப்பு அவசியம்)

கட்டுப்பாடு இல்லாமல் கூட்டம் அலை மோதியதில், இந்த சிறிய மேடையிலும் பொதுமக்கள் வந்து ஏறத் தொடங்கினர்.  ஊடகவியலாளர்கள்  பொதுமக்களைத் துரத்தினர். இந்த இழுபறியில் எல்லா வீடியோ கேமராக்களும்  ஒரே நேரத்தில் திடீரென  ஷட்-ஆஃப் ஆகின.

காரணம், அந்தச் சிறிய மேடையில் ஏராளமானோர் முண்டியடித்துக்கொண்டு ஏறி இறங்கியதால், விடியோ கேமெராக்களுக்கு வழங்கப்பட்ட மெயின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. (இதனால்தான், ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட நிமிடத்தில் எடுக்கப்பட்ட வீடியோ பதிவுகள் ஏதும் கிடையாது. வெறும் ஸ்டில் போட்டோக்கள் மாத்திரமே இன்று உள்ளன)

மேடையை நோக்கி நடந்துவந்த ராஜிவ் காந்தி, முதலில் ஆண்கள் இருந்த பகுதிக்குச் சென்றார்.

ஆண்கள் பகுதியிலிருந்த கட்சித் தொண்டர்களைப் பார்த்த பின், பெண்கள் பகுதிக்கு வந்த ராஜிவ்காந்தியை அங்கிருந்த கட்சியின் பெண் நிர்வாகிகள் சிலர் வணங்கி வரவேற்றனர்.ராஜிவ் பதிலுக்கு வணக்கம் செலுத்தினார்.

ராஜிவ் காந்தியை வரவேற்க வரிசையாக நிற்க வைக்கப்பட்டிருந்த பெண்களில், முன்வரிசையில் தனது தாயுடன் நின்றிருந்தார் கோகிலா. ராஜிவ் காந்தி அவரை நெருங்கியபோது, “ஒரு கவிதை வாசிக்க வேண்டும்” என்று ஹிந்தியில் தெரிவித்தார் கோகிலா.

புன்சிரிப்புடன் ராஜிவ் காந்தி அந்த இடத்தில் தாமதிக்க, தனது ஹிந்தி, மொழி பெயர்ப்புக் கவிதையை ராஜிவ்காந்தியிடம் வாசித்துக் காண்பித்தார் கோகிலா.

அவரது கவிதை முடியும் நேரத்தில்-

கோகிலாவுக்கு பின்னால் நின்றிருந்த கண்ணாடி அணிந்த சல்வார் கமீஸ் பெண், ராஜிவ்காந்தியை நோக்கி அடியெடுத்து வைத்தார்.

வரிசையில் நிற்காமல், பின்னாடி நின்றிருந்த பெண் ஒருவர் மாலையுடன் முன்னே வருவதைக் கவனித்து விட்டார் சப் இன்ஸ்பெக்டர் அனுசுயா. உடனே வேகமாகச் செயற்பட்ட சப் இன்ஸ்பெக்டர் அனுசுயா, கண்ணாடி அணிந்த சல்வார் கமீஸ் பெண்ணைத் தடுக்க முயன்றார்.

சப் இன்ஸ்பெக்டர் அனுசுயா செய்ய முயன்றதைச் செய்திருந்தால், அன்று கதையே மாறியிருக்கும். ஆனால், விதி வேறு விதமாக இருந்தது.

கண்ணாடி அணிந்த சல்வார் கமீஸ் பெண்ணைத் தடுக்க வேண்டாம் என ராஜிவ்காந்தி சைகை காட்டினார்.

ஒரு கணம் தாமதித்த அனுசுயா, ராஜிவ் காந்தியின் உத்தரவை ஏற்று, அந்தப் பெண்ணைத் தடுக்காமல்  இரண்டு அடிகள்  பின்னால் எடுத்து வைத்து,  நின்று கொண்டார்.

இப்போது கண்ணாடி அணிந்த பெண் நகர்ந்து சென்று ராஜிவ்காந்தி முன்னால் நின்றார்.

ராஜிவ்காந்தியின் கழுத்தில் சந்தன மாலையை அணிவித்தார். பின்னர் அவரது காலைத் தொட்டு வணங்குவதைப் போல அந்தப் பெண் கீழே குனிந்தார்.

இது நடந்தது ராஜிவ்காந்தி குண்டு துளைக்காத காரிலிருந்து இறங்கிய 10 நிமிடங்கள் கழித்து. அப்போது நேரம் இரவு 10.20 மணி.

கண்ணாடி அணிந்த பெண் கீழே குனிந்தவுடன், அவரது உடலில் பொருத்தப்பட்டிருந்த வெடிகுண்டு ட்ரிக் செய்யப்பட்டது. ட்ரிக் செய்யப்பட்ட கணத்திலிருந்து சரியாக இரண்டு விநாடிகளில்-

அந்தக் குண்டு பெரிய சத்தத்துடன் வெடித்தது.

அப்போது வெடித்தது கண்ணாடி அணிந்த சல்வார் கமீஸ் பெண்ணின் உடலில் இருந்த குண்டு மாத்திரம் அல்ல. ஈழத் தமிழரின் 30 ஆண்டுகால ஆயுதப் போராட்டமும், அந்தஒற்றை வெடிகுண்டால் வெடித்துச் சிதறியது.
ராஜீவ் காந்தியை அன்று உயிருடன் விட்டிருந்தால் இன்றைக்கு ஈழத்தமிழன் என்று சொல்ல ஒரு தமிழனும் இருந்திருக்க மாட்டன் இதை முக்கியமாக தமிழக மக்கள் அறிந்திருக்க வேண்டும்.

ராஜிவ்காந்தி நின்றிருந்த இடத்தில் தீயுடன் 20 அடி உயரத்துக்குக் கரும்புகை காணப்பட்டது. புகை தணிந்ததும் பார்த்தால், ராஜிவ்காந்தி நின்றிருந்த இடத்தில் எவரும் உயிருடன் இருந்த அறிகுறியே இல்லை. எங்கு பார்த்தாலும் இரத்தமும், சதைத் துணுக்குகளும் சிதறிக் கிடந்தன.

கண்ணாடி அணிந்த சல்வார் கமீஸ் பெண், லதா கண்ணன், கோகிலா, ஹரிபாபு, ராஜிவ்காந்தியின் தனிப் பாதுகாப்பு அதிகாரி உட்பட 15 பேர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் மூவர் வைத்தியசாலையில் இறந்தனர்.

இறந்தவர்களில் மாவட்ட பொலிஸ் கண்காணிப்பாளர் முகமது இக்பால் உட்பட 9 பொலிசாரும் அடங்குவர். 44 பேர் காயமடைந்தனர். இவர்களில் 20 பேருக்குப் பலத்த காயம்.

ராஜிவ்காந்தியின் கடைசி நிமிடங்களைப் படம் பிடித்த காமெரா, அதை இரவல் வாங்கிவந்த போட்டோகிராபர் ஹரிபாபுவின்  உடல்மீது,  ‘மௌனமாக சாட்சியாக’க் கிடந்தது.

(6ம் அத்தியாயம் தொடரும்… அடுத்த வாரம்)






நன்றி
விறுவிறுப்பு.கொம்





வியாழன், 4 ஆகஸ்ட், 2011

ராஜிவ் காந்தி கொலை – புலிகள் சிக்கியது எப்படி? விறு விறுப்பு தொடர் அத்தியாயம்-04

அத்தியாயம் 04


வெடிகுண்டுடன் கூட்டத்துக்கு வந்திருந்த ஐவர் அணி!

சென்ற அத்தியாயத்தில் நாம் குறிப்பிட்ட லதா கண்ணன், பொலிசாரின் அனுமதிபெற்ற மற்றையவர்களோடு சேர்ந்து கொள்ளச் சென்றார். அந்தப் பகுதியை நோக்கி அவர் நடந்து சென்றபோது, அவரைப் பின் தொடர்ந்து கனத்த  கண்ணாடியுடன் ஆரஞ்சு மற்றும் பச்சை நிற சல்வார் கமீஸ் அணிந்து, சந்தன மாலையுடன் ஒரு பெண்ணும் கூடவே சென்றார்.

இந்தப் பெண்ணை கூட்டத்துக்கு வந்திருந்த பலர் கவனித்திருந்தனர். சில நொடிகளுக்கு முன்தான் லதா கண்ணனுடன் அந்தப் பெண் பேசிக்கொண்டிருந்தார். அவருடன் ஹரிபாபு என்ற புகைப்படக்காரரும் காணப்பட்டார். ஹரிபாபு என்ற பெயர் அங்கிருந்த சிலருக்குத் தெரிந்திருந்தது. காரணம், அங்கிருந்த பல பத்திரிகையாளர்களுக்கும் புகைப்படக்காரர்களுக்கும் அறிமுகமான நபர் அவர்.

இவர்களுடன் சேலை அணிந்த இரு பெண்களும், வெள்ளை குர்தா பைஜாமா அணிந்து முகத்தில் தடித்த கண்ணாடி அணிந்த ஆண் ஒருவரும் காணப்பட்டனர்.

இவர்களுக்கும் லதா கண்ணனுக்குமிடையே எப்படிப் பரிச்சயம்? அதைத் தெரிந்துகொள்ள சில நிமிடங்கள் பின்னோக்கிச் செல்லவேண்டும்.

தாஸிடம் அனுமதி பெறுவதற்காக லதா கண்ணன் காத்திருந்தார் அல்லவா? அப்போதுதான் இந்த ஐவர் அணி அவரை அணுகியது. அங்கு கூடியிருந்த கட்சிப் பிரமுகர்களிடையே மிக எளிதாக லதா கண்ணன் நடமாடுவதை அவர்களால் காண முடிந்தது.

லதா கண்ணனுக்கு லோக்கல் காங்கிரஸ் ஆட்களிடையே செல்வாக்கு இருப்பதையும் புரிந்துகொள்ள முடிந்தது.

அதைத் தெரிந்துகொண்டபின், சேலை அணிந்த இரு பெண்களில் ஒருவர் லதா கண்ணனை முதலில் அணுகினார். “என்னுடன் வந்துள்ள நண்பர் ஒருவர், ராஜிவ்காந்திக்கு மாலை அணிவிக்க விரும்புகிறார். நீங்கள்தான் அதற்கு அனுமதி பெற்றுத் தரவேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

இவர் நண்பர் என்று குறிப்பிட்டது, கண்ணாடி அணிந்த சல்வார் கமீஸ் பெண்ணைத்தான்.

“சரி. உங்க நண்பரை எனக்கருகே நிற்கச் சொல்லுங்க. நான் ட்ரை பண்ணுகிறேன்” என்றார் லதா கண்ணன்.

இந்த கண்ணாடி அணிந்த பெண் நண்பரின் உடலில்தான் வெடிகுண்டு இருந்த விஷயம் லதா கண்ணனுக்குத் தெரிந்திருக்கவில்லை!

லதா கண்ணனும், கோகிலாவும் சற்று தொலைவில் மற்றவர்களுடன் காத்திருந்தபோது கண்ணாடி அணிந்த பெண்ணும் அவர்களுடன் சேர்ந்துகொண்டார். அவருடன் வந்த மற்ற இரு பெண்களும், இந்தப் பெண்ணருகே நிற்காமல் விலகிக் கொண்டனர். அந்த இரு பெண்களும், அங்கிருந்து விலகி, மேடையருகே சென்றனர். அங்கு பெண்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த இடத்தில் போய் உட்கார்ந்து கொண்டனர்.

இவர்களுடன் வந்திருந்த புகைப்படக்காரர் ஹரிபாபு, தனது கமெராவை எடுத்தார். பொதுக்கூட்ட நிகழ்ச்சியைப் படம் எடுப்பதற்காக வேறொருவரிடமிருந்து இரவல் வாங்கி வந்திருந்த ‘சினான்’ காமெரா அது.

இந்தக் கட்டத்தில், ஹரிபாபு தனது கமெராவை இயக்கி, முதல் போட்டோவை எடுத்தார்.

இந்த நேரத்தில், வெள்ளை குர்தா பைஜாமா அணிந்த ஆண், சற்றுத் தள்ளி நின்றுகொண்டார். அவரது கையில் சிறிய நோட்டும் பேனாவும் வைத்திருந்தார். பார்ப்பதற்கு இவரும் அங்கு வந்திருந்த மற்றய பத்திரிகை நிருபர்களில் ஒருவரைப் போலவே காணப்பட்டார்.

ஹரிபாபு, பெண்கள் அமர்ந்திருந்த பகுதியை நோக்கிப் படம் எடுத்தார். அவருக்கு அறிமுகமான, சேலை அணிந்த இரு பெண்களையும் போட்டோ எடுத்தார். அவர்கள் அணிந்திருந்த சேலைகளின் கலரால் அடையாளம் காணும் வகையில், பெண்கள் பகுதியில் ஒரு மூலையில் உட்கார்ந்து இருந்தனர்.

இந்த ஐந்து பேர் அணி துல்லியமான திட்டத்துடனே வந்திருந்தனர். அவர்களது திட்டப்படி, வெவ்வேறாகப் பிரிந்து, வெவ்வேறு இடங்களில் பொசிஷன் எடுத்திருந்தனர்.

வெடிகுண்டை உடலில் அணிந்திருந்த பெண் மேடைக்கு அருகே, ராஜிவ் காந்தி நடந்து வரப்போகும் பாதையருகே நின்றிருந்தார். மற்றைய மூவர், அந்தப் பெண்ணிடமுள்ள வெடிகுண்டு வெடித்தால், அதனால் பாதிப்பு ஏற்படாத அளவான தூரத்தில் நின்று கொண்டனர். போட்டோகிராபர் ஹரிபாபு மாத்திரம் இங்கும் அங்கும் நகர்ந்து போட்டோ எடுத்துக் கொண்டிருந்தார்.

இவர்கள் இப்படி பொசிஷன் எடுத்து நின்றுகொண்டதை, கூட்டத்திலிருந்த யாரும் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை…
கூட்டத்தில் கலந்திருந்த உளவுப் பிரிவினர் உட்பட!

இப்போது, ராஜிவ் காந்தி மேடைக்கு வரும் நேரம் நெருங்கிவிட்டது. சப் இன்ஸ்பெக்டர் அனுசுயா சிவப்புக் கம்பள விரிப்புப் பகுதியில் நின்றிருந்தார். அவரைச் சுற்றி, மற்றைய பெண் பொலிசார் நின்றிருந்தனர். இவர்கள் நின்றிருந்த இடத்துக்கு அருகே கூட்டம் நிரம்பி வழிந்தது.

கட்சித் தொண்டர்கள் கடைசி முயற்சியாக தாஸிடம் கெஞ்சிக்கொண்டிருந்தனர். தங்களையும் ராஜிவ் காந்தி அருகில் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று ஆளாளுக்கு தாஸை நச்சரித்துக் கொண்டிருந்தனர்.

தாஸால் ஏற்கெனவே அனுமதி அளிக்கப்பட்டவர்கள், மேடைக்கு அருகில் கும்பலாக நின்றிருந்தனர். அனுமதிக்கப்பட்டோர் பட்டியலை வைத்திருந்த பொலிசார், ஒரு சிலரை மட்டுமே வெடிகுண்டு டிடெக்டர் கருவியால் சோதனை செய்தனர். அதுவும் ஆண்களை மாத்திரமே!

கூட்டம் நெருக்கித் தள்ளிக் கொண்டிருந்தது. கூட்டத்தோடு கூட்டமாக, அனுமதி அளிக்கப்படாத நபர்களும் சிவப்புக் கம்பள விரிப்புப் பகுதியில் நிற்பது தெளிவாகத் தெரிந்தது.

அனுமதி அளிக்கப்படாத நபர்களை அங்கிருந்து அகற்ற வேண்டியது கூட்ட அமைப்பாளரின் (தாஸின்) பொறுப்பு என பொலிசார் கருதினர். ஆனால், கட்சி விவகாரங்களில் மூழ்கியிருந்த தாஸ், அனுமதிக்கப்பட வேண்டியோர் பட்டியலை பொலிசாரிடம் கொடுத்துவிட்டதோடு தனது வேலை முடிந்துவிட்டது என்று நினைத்தார்.

பட்டியலில் இல்லாதவர்களை அப்பகுதியிலிருந்து அப்புறப்படுத்த வேண்டியது பொலிசாரின் பொறுப்பு என்றும் நினைத்திருந்தார் அவர்.

இப்படியான இழுபறி நேரத்தில்தான், அந்த இடத்துக்கு ராஜிவ் காந்தி வந்து இறங்கினார். மேடை இருந்த திசையை நோக்கி நடந்து வரத் தொடங்கினார்.

ராஜிவ்காந்தி வந்துவிட்டார் என்றதும் இசைநிகழ்ச்சி முடிவுக்கு வந்தது.

“ராஜிவ்காந்திக்கு அருகே செல்ல பர்மிஷன் எடுத்தவங்க, இந்தப் பக்கமா வாங்க. மேடைக்கு அருகே சிவப்புக் கார்ப்பெட் பகுதியில் உங்களுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் வந்து நில்லுங்க” என்று தாஸ் சத்தமாக அறிவித்தார். ஆனால் அவரது குரலையும் மீறி,  அந்த இடத்தில் ஒரே இரைச்சலாக இருந்தது.

மேடை இருந்த பகுதியருகே குழப்பமாக இருந்தது. இதனால், அனுமதி பெறாதவர்களும் ராஜிவ் காந்தியை நெருக்கமாகப் பார்க்க நினைத்து, அப்பகுதியை நோக்கி நெருக்கியடித்துக் கொண்டு ஓடி வந்தனர்.

அவர்களைத் தடுப்பதற்கு அங்கிருந்த சொற்ப எண்ணிக்கையிலான போலீஸ், ரொம்பவும் சிரமப்பட வேண்டியிருந்தது.

சற்று தொலைவில் ராஜிவ் காந்தி தெரிவதை, மேடைப் பகுதியில் இருந்து பார்க்கக்கூடியதாக இருந்தது. அவர் மேடையை நோக்கி நடந்து வருவது தெளிவாகத் தெரிந்தது.

(5ம் அத்தியாயம் தொடரும்… அடுத்த வாரம்)






நன்றி
விறுவிறுப்பு.கொம்

Get this widget