thalaivan

thalaivan

வியாழன், 31 மார்ச், 2011

63 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக உறுமும் தமிழ் புலி சீமான்!

காங்கிரஸுக்கு இது போதாத காலம். ஏறக்குறைய, அந்தக் கட்சி போட்டியிடும் அனைத்துத் தொகுதிகளிலும் கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளர்களை எதிர்த்து, அதிருப்தி வேட்பாளர்கள் கோதாவில் குதித்துள்ளனர். இன்னொரு பக்கம், சீமானின் ‘நாம் தமிழர்’ கட்சி,
‘காங்கிரஸை வேரறுப்போம்!’ என்ற கோஷத்துடன் களம் இறங்கி இருப்பதால், வெலவெலத்து நிற்கிறார்கள் காங்கிரஸ் வேட்பாளர்கள்.

ஈழ மக்களின் நலனுக்கு எதிராக மத்தியில் ஆளும் காங்கிரஸ் செயல்பட்டதாகக் குற்றம் சாட்டும் தமிழ் அமைப்புகள், காங்கிரஸ் போட்டியிடும் 63 தொகுதி​களிலும் எதிர்ப் பிரசாரத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தன. அதையடுத்து, ‘நாம் தமிழர்’ கட்சி, பல்வேறு தமிழ் அமைப்புகளையும் ஒருங்கிணைத்துக் கச்சை கட்டி நிற்கிறது. நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் பிரசாரத்தைத் தொடங்கிய சீமானின் பேச்சில் ரௌத்ரம் தாண்டவமாடியது!

”இந்தத் தேர்தல், தமிழ்த் தேசிய இனத்தின் துரோகியான காங்கிரஸுக்கும் ‘நாம் தமிழர்’ இயக்கத்துக்கும் இடையே நடக்கும் அரசியல் யுத்தம். ‘இதில் நாங்கள் வெற்றி பெற வேண்டும்’ என்று உலகம் முழுவதும் பரவிக்கிடக்கும் அனைத்துத் தொப்புள்கொடி உறவுகளும் வாழ்த்துகின்றன. அதனால்தான், ‘வெள்ளையனே வெளியேறு’ என்று வீர முழக்கமிட்டு, இந்தியச் சுதந்திரத்துக்கு முதல் குரல் கொடுத்த நெல்லை மண்ணில் இருந்து… பூலித்தேவன் மண்ணில் இருந்து காங்கிரஸை வேரறுக்கும் இந்த அரசியல் யுத்தத்தைத் தொடங்கி இருக்கிறோம். திசையன்விளையில் தொடங்கப்பட்டு இருக்கும் இந்தத் ‘தொடக்கம்’… காங்கிரஸுக்கு ‘அடக்கம்’!

சொந்தக் கட்சிக்காரர்களே காங்கிரஸை வீழ்த்தத் துடிக்கிறார்கள். ஜி.கே.வாசன், ஈ.வி.கே.எஸ்.இளங்​கோவன், ப.சிதம்பரம், அவர் செல்ல மகன் கார்த்தி என்று பல கோஷ்டிகளாகப் பிரிந்து, ஒருவருக்கு ஒருவர் குழி பறிக்கிறார்கள். அதனால், இந்த முறை எங்களுக்கு அதிக வேலை இல்லை. நாங்கள் சுற்றுலா செல்வதுபோல சும்மா அனைத்துத் தொகுதிகளுக்கும் சென்று வந்தாலே போதும்… மீதியை அவர்களாகவே முடித்துக்கொள்வார்கள். காங்கிர​ஸின் தோல்விதான் ‘நாம் தமிழர்’ இயக்கத்தின் வெற்றி!


இப்போது இருக்கும் காங்கிரஸுக்கும், காமராஜருக்கும் ஒரு சொட்டுகூட தொடர்பு இல்லை. காமராஜர் இறந்ததுமே காங்கிரஸும் செத்துவிட்டது. மக்களுக்காக காங்கிரஸ் கட்சி என்றைக்காவது வீதிக்கு வந்து போராடி இருக்கிறதா? இப்போது இருக்கும் காங்கிரஸ், பிழைப்புவாதிகளின் கூடாரம்!
தமிழக மீனவர்கள் 539 பேர் சிங்களக் கடற்படையால் கொல்லப்பட்டார்களே… அதனைக் கண்டித்து அந்தக் கட்சி ஓர் அறிக்கைவிட்டதா? பி.ஜே.பி-யின் சுஷ்மா சுவராஜ்கூட ஓடி வந்து பாதிக்கப்பட்ட மீனவக் குடும்பத்தைச் சந்தித்து ஆறுதல் சொன்னாரே! காங்கிரஸ் சார்பில் சோனியா, ராகுல்கூட வர வேண்டாம்… ஆனால், இங்கே இருக்கும் எந்த காங்கிரஸ் தலைவராவது அந்த மீனவக் குடும்பத்தினரை சந்தித்து எட்டணா தந்திருக்கிறீர்களா?!

காவிரியில் எங்களுக்கு உள்ள உரிமைக்காக வாதாடி இருக்கிறீர்களா? கேரள அரசாங்கம் முல்லை பெரியாறில் எங்களுக்கு உரிய பங்கைத் தராமல் இருப்பதைக் கேள்வி கேட்டு இருக்கிறீர்களா? எங்களது உரிமையைக் கேட்டு வாங்கித் தர முன்வராத உங்களுக்கு, எங்களுடைய ஓட்டு மட்டும் வேண்டுமா? என் வாழ்க்கை முக்கியம் இல்லை… ஆனால், என் வாக்கு மட்டும் உங்களுக்குத் தேவை என்பது என்ன நியாயம்? அட்டைப் பூச்சியாக எங்களுடைய ரத்தத்தையும் வேர்வையையும் உறிஞ்சி வாழும் காங்கிரஸை விரட்டி அடிப்பதுதான் நமது முதல் வேலை.

தேர்தல் அறிக்கையில் இலவசங்களை அறிவித்துத் தமிழர்களை மானம் இல்லாத கேவலமான சமூகமாக்கிவிட்டார்கள்! நாட்டில் எங்கும் ஊழல்… விலைவாசி விண்ணை முட்டுகிறது. மின்சாரமே இல்லை… ஆனால் கிரைண்டர், மிக்ஸி, டி.வி., லேப்டாப் தருகிறார்களாம்! ஜனநாயகம் பணநாயகமாக மாறிவிட்டது. ஈழ மண்ணில் நடந்த யுத்தத்துக்குப் பழிக்குப் பழி தீர்க்கும் அரிய வாய்ப்பு, உன்னத சந்தர்ப்பம் இது!

நாம் பட்ட வலிக்குப் பழிதீர்க்கும் வகையில், ‘கை’ சின்னத்தைப் பார்த்தால் காறித் துப்பித் தோற்கடியுங்கள். தமிழர் ரத்தத்தில் மூழ்கியுள்ள அந்தக் கட்சியைக் கொன்று ஒழிக்காமல், தமிழர் விடுதலையை வென்று எடுக்க முடியாது!”

நன்றி
ஜூனியர் விகடன்.

Image Hosted by ImageShack.us

செவ்வாய், 29 மார்ச், 2011

காங்கிரசை நாம் ஏன் வீழ்த்த வேண்டும் ? – நாம் தமிழர் பரப்புரை காணொளி. (காணொளி இணைப்பு)

தமிழகத்தில் நடைபெறவிருக்கிற எதிர் வரும் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியை வீழ்த்த வேண்டும் என்ற உறுதியோடு காங்கிரஸ் கட்சி போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் அக்கட்சியை எதிர்த்து நாம் தமிழர் கட்சி களமாடி வருகிறது.
இதனையடுத்து காங்கிரஸ் கட்சி மேற்கொண்ட தமிழின படுகொலையை தமிழக மக்களுக்கு எடுத்துக்காட்டும் விதமாக இந்த காணொளியின் வாயிலாக நாம் தமிழர் கட்சியினர் மக்களிடையே கருத்து பரப்பு மேற்கொண்டு வருகின்றனர்.

நாம் தமிழராய் உருவெடுப்போம் காங்கிரசை கருவருப்போம் ...




இருப்பாய் தமிழா நெருப்பாய். 


நாம் இருந்தது போதும் அடுத்தவர் காலுக்கு செருப்பாய். 

இணையம் ஊடாக நாம் தமிழர் கட்சியில் உறுப்பினராக இணைந்து கொள்ள இங்கே அழுத்தவும்.
"நாம் தமிழர்"


Image Hosted by ImageShack.us

திங்கள், 28 மார்ச், 2011

தமிழீழத்தின் வரலாற்று சிறு குறிப்பு.

தற்காலத்தில் இலங்கை என அழைக்கப்படும் தீவு பழங்காலத்தில் ஈழம் என அறியப்பட்டது. பழந்தமிழ் இலக்கியங்களில் காணப்பட்ட 'ஈழத்துணவு', 'ஈழத்துப் பூதந்தேவனார்' போன்ற சொற்கள் மேற்படி தீவின் தொடர்புகளைக் காட்டி நின்றன. பழந் தமிழ் மன்னர்களால் வெளியிடப்பட்ட சாசனங்களும் ஈழம் அல்லது ஈழ மண்டலம் என்ற பெயரைப் பயன்படுத்தின.



பொருளடக்கம் 

1 பெயர்த் தோற்றம்

2 'தமிழு'ம் 'ஈழ'மும்

3 தற்காலத்தில் 'ஈழம்'

4 வெளி இணைப்புகள்


பெயர்த் தோற்றம்


ஈழம் என்ற பெயர்த் தோற்றம் பற்றிப் பொதுக் கருத்து இல்லை இது பற்றிய வாதங்களும், எதிர் வாதங்களும் இன்னும் தொடர்ந்து வருகின்றன. ஈழம் என்ற பெயர் இத்தீவைக் குறிக்கும் பாளிமொழிச் சொல்லான 'சிஹலம்' என்பதிலிருந்து திரிந்தது எனக் கிருஷ்ணசாமி ஐயங்கார் போன்றவர்கள் கருதினார்கள். வேறு சிலரோ ஈழம் என்ற சொல்லே 'சிஹலம்' என்று திரிபடைந்தது என்பர். இந்த நூற்றாண்டின் தொடக்கத்திலேயே நிலை இப்படியாயின், இவ்வாறான ஆய்வுகள் அரசியல் பின்னணியால் பாதிக்கப்படுகின்ற தற்காலத்தில் முரண்பாடுகள் குறையும் வாய்ப்பு இல்லை.


'தமிழு'ம் 'ஈழ'மும்ஈழம் 


என்ற சொல்லுக்குப் பாளி அல்லது சிங்கள மூலம் காட்டுகின்ற அதேவேளை சில ஆய்வாளர் 'தமிழ்' என்ற சொல்லும் ஈழம் என்ற சொல்வழியாக, 'சிஹலம்' என்பதிலிருந்தே உருவானதாகக் காட்ட முயல்கின்றனர்.


தற்காலத்தில் 'ஈழம்'


இலங்கையில் இன முரண்பாடுகள் அதிகம் கூர்மையடையாதிருந்த காலத்தில் ஈழகேசரி, ஈழநாடு போன்ற பெயர்கள் செய்திப் பத்திரிகைகளின் பெயர்களாகப் பிரபலம் பெற்றிருந்தன. அரசியலில் இன வேறுபாடுகள் விரிவடைந்துவந்தபோது, அரசியல் அரங்கில், இலங்கையில் தமிழர் வாழும் பகுதிகளைக் குறிக்கத் 'தமிழீழம்' என்ற சொல்லைப் பயன்படுத்திவந்தனர். இலங்கையில் தமிழர்களுக்குத் தனி நாடு வேண்டுமென்ற கோரிக்கையைச் சில அரசியல் கட்சிகள் முன்வைத்தபோது, கோரப்பட்ட அந்நாட்டுக்கும் 'தமிழீழம்' என்ற பெயரையே பயன்படுத்தினார்கள். காலப்போக்கில், பேச்சு வழக்கிலும், சிங்கள இனத்தவர் மத்தியிலும் 'தமிழீழம்' சுருங்கி ஈழம் ஆகியது. ஒரு காலத்தில் முழு இலங்கைத் தீவையும் குறிக்கப் பயன்பட்ட சொல், இன்று அதன் ஒரு பகுதியை மட்டுமே குறிக்கும் சொல்லாக மாறியுள்ளது.


அரசியல் அமைப்பு


தமிழீழம் எனப்படுவது ஒரு நாடு அல்ல. இலங்கையில் தமிழர்கள், தாம் தாயகப்பிரதேசமாக கருதும் பிரதேசங்களில் ஒரு தனி நாட்டை அமைப்பதற்காக தெரிவு செய்த பெயர் தமிழீழம். தமிழீழம் ஓர் எண்ணக்கரு. இன்று தமிழீழ விடுதலைப்புலிகள் தமிழர் தாயகம் என கருதப்படும் பெரும்பகுதியைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்து ஒரு நிழல் அரசாங்கத்தை நடத்தி வருகிறார்கள். இந்த அரசாங்கம் சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்டதன்று. தமிழீழ பகுதியில் பெரும்பான்மை நிலப்பரப்பின் பகுதியின் நிர்வாகம், நீதிமன்றம், கட்டமைப்புகள் அனைத்தும் தமிழீழ விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டில் இருக்கின்றது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பகுதி பெரும்பாலான அம்சங்களுடன் செயல்பட்டுவருகிறது. இந்த பகுதிகள் இலங்கை அரசின் கட்டுப்பாட்டிலிருந்து இராணுவ, நிர்வாக அடிப்படையில் துண்டிக்கப்பட்டதாக அமைந்துள்ளது.


தமிழீழத்தில் முஸ்லீம்கள்


தமிழீழப் பிரதேசத்தை தமது தாயகப் பிரதேசமாக இலங்கை முஸ்லீம்கள் கருதுகின்றனர். இவர்களில் பெரும்பாலனவர்கள் தமிழையே தமது தாய் மொழியாகக் கொண்டிருந்தாலும் தனித்துவமான ஒரு முஸ்லீம் அரசியல் சமய அடையாளத்தை முன்னிறுத்துகின்றனர். இவர்களில் பெரும்பான்மையானவர்கள் அம்பாறை, மன்னார், புத்தளம், மட்டக்களப்பு, திருக்கோணமலை ஆகிய பிரதேசங்களில் வாழ்கின்றனர். யாழ் மாவட்டத்தில் கணிசமான முஸ்லீம்கள் வாழ்ந்து வருகிறார்கள்.


தமிழீழத்தில் சிங்களவர்


ஈழப்போராட்டத்தின் முன்னர் தமிழீழப் பிரதேசங்களில் அங்காங்கே பல சிங்களக் குடும்பங்கள் வசித்து வந்தன. போராட்டம் தொடங்கப்பட்ட பின்னர் வட மாகாணத்தில் இருந்து பெரும்பாலான சிங்களப் பொதுமக்கள் வெளியேறி விட்டார்கள். தமிழர்களின் தமிழீழத் தாயகக் கோரிக்கையைச் சிதைக்கும் நோக்குடன் இலங்கை அரசு பல சிங்களக் குடியேற்றங்களை மேற்கொண்டனர். இவற்றுள் வடக்கையும் கிழக்கையும் பிரிக்கும் மணலாற்றுச் சிங்களக் குடியேற்றங்கள் குறிப்பிடத்தக்கவை. கிழக்கு மாகாணத்தில் தார்மீக ரீதியாகவும் திட்டமிடப்பட்ட சிங்கள குடியேற்றங்களினாலும் ஏறக்குறைய மூன்றில் ஒரு பங்கு சிங்களவர்களே வசிக்கின்றார்கள். குறிப்பாக தமிழீழத்தின் தலைநகராகக் கருதப்படும் திருகோணமலையில் மூன்றில் ஒரு பங்கு சிங்கள மக்களே வசிக்கின்றார்கள்.


தமிழீழத்தில் மலையக தமிழர்களின் நிலை


இந்தியாவில் இருந்து பிரித்தானிய காலனித்துவ அரசால் தேயிலைத்தோட்டங்களில் வேலை செய்வதற்காக வருவிக்கப்பட்ட இந்தியத் தமிழ் மக்களை மலையக தமிழர் அல்லது இந்திய வம்சாவழித் தமிழர் என்று அழைப்பர். இவர்களில் கணிசமானவர்கள் வடக்கு - கிழக்கில் பல்வேறு காலகட்டங்களில் குடியமர்ந்தனர். பொதுவாக, வசதி படைத்த இலங்கைத் தமிழர்களின் வீடுகளில் கூலி வேலை செய்வதே இவர்களின் முதன்மைத் தொழில் மார்க்கமாக இருந்தது. இந்நிலை இன்று பெரும்பாலும் மாறி வருகின்றதெனலாம்.


தமிழீழ மொழிகள்


தமிழீழத்தில் தமிழே அனைத்து மட்டங்களிலும் (நிர்வாகம், கல்வி, வர்த்தகம்)பயன்படுகின்ற மொழியாக இருக்கின்றது. ஆங்கிலம் உலக மொழி போன்று செயல்படுவதால், ஆங்கிலம் பிரதான வெளி தொடர்பு மொழியாக இயங்குகின்றது. ஆங்கில பெயர்பலகைகள், வழிகாட்டல் ஆவணங்கள், கல்லூரிகள், மேல்நிலைக் கல்வி ஆகியவை ஆங்கிலத்தின் தேவையை நன்கு உணர்த்தி நிற்கின்றன. சிங்கள மக்களும், அவர்களுடையான வர்த்தக பண்பாட்டு அரசியல் தொடர்புகளும் தமிழீழத்தின் இருப்பிற்கு அருகிலானவை, இயல்பானவை, இன்றியமையாதவை. எனவே சிங்களமும் ஒரு முக்கிய மொழியாக தமிழீழத்தில் பயன்படும். மேலும், புலம்பெயர் தமிழர்கள் பல மொழி தளங்களில் இயங்குகின்றார்கள், அவர்களை உள்வாங்குவதற்கு ஒரு பல்மொழி அணுகுமுறையும் தேவையாக இருக்கும்.


தமிழீழத்தில் சமயங்கள்


தமிழ் மக்களில் பெரும்பாலானவர்கள் சைவ இந்துக்கள் ஆவர். முருகன், ஐயனார், சிவன், அம்மன், பிள்ளையார் போன்ற கடவுளர் பெரும்பாலும் வழிபடப்படுகின்றனர். தமிழர்களில் கணிசமான தொகையினர் கிறிஸ்தவ சமயத்தைப் பின்பற்றுகின்றனர். தமிழ்க் கிறிஸ்தவர்களின் ஈழப் போராட்டத்துக்கான பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. தமிழீழத்தில் இஸ்லாம் முஸ்லீம் மற்றும் பெளத்தம் சிங்கள மக்களால் பின்பற்றப்படுகின்றன.


கல்வி


தமிழீழ மக்கள் கல்விக்கு மிக முக்கித்துவம் தருகின்றார்கள். இவர்களின் கல்வியறிவு 90% இற்கும் மேலானது. பல தரமான கல்லூரிகளைத் தமிழீழம் கொண்டுள்ளது. யாழ் பல்கலைக்கழகம், கிழக்குப் பல்கலைக்கழகம் ஆகியவை இங்கு இயங்கும் இரு பல்கலைக்கழகங்கள் ஆகும்.


பொருளாதாரம்


தமிழீழ மக்கள் பெரும்பாலும் உழவையும், மீன்பிடித்தலையுமே பிரதானமாக மேற்கொள்கின்றனர். தற்சமயம் ஈழப்போராட்டம் காரணமாக புலம்பெயர்ந்த மக்கள் அனுப்பும் பணமும் தமிழீழ பொருளாதாரத்துக்கு மிக முக்கியமாகின்றது. இங்குப் பொருள் உற்பத்தித் துறை, உயர் தொழிநுட்பத் துறை போன்றவை மந்தமாகவே பங்களிக்கின்றன.


உலகமயமாதல்


நவீன அரசியல், பொருளாதார, பண்பாட்டு, தொழில்நுட்ப, இயற்கை சூழ்நிலைகள் உலகின் ஒரு பிரதேசத்தை பிறவற்றுடன் பின்னி இணைத்துவருகின்றன. இப்படியான ஒரு இணைப்பை உலகமயமாதல் என்று சமூகவியலாளர்கள் குறிக்கின்றனர். ஈழப்போராட்டம், புலம்பெயர்வு, சுனாமி ஆகியவை உலகமயமாதலை தமிழீழ மக்களுக்கு நன்கு உணர்த்தியுள்ளது. தமிழீழத்தில் இயங்கும் பல்வேறு NGOs, நிகழும் அரசியல் திருப்பங்கள் மற்றும் பண்பாட்டு மாற்றங்களும் உலகமயமாதலின் எடுத்துக்காட்டுகளாக அமைகின்றன. பன்மொழி, பன்முக பண்பாடு, பல் சமய, திறந்த சந்தை உலகமயமாதல் சுழலில், தமிழீழ மக்கள் தமது தனித்துவங்களைப் பேணி, மனித உரிமைகளுடன் எப்படி தமது அரசியல் இருப்பை ஏற்படுத்திகொள்ளப்போகின்றார்கள் என்பதுவே தமிழீழ மக்களின் சவாலாகும்.


எதிர்காலம்


தமிழீழத்தின் எதிர்காலம் அதன் அரசியல் நிலைமைகளிலேயே தங்கியுள்ளது. இனப்பிரச்சினைக்கு ஒரு சுமூகமான தீர்வு கிடைத்தால் தமிழீழம் ஒரு வளர்ச்சிமிக்க சமூகமாக பரிணமிக்க சந்தர்ப்பம் உண்டு.

Image Hosted by ImageShack.us

ஞாயிறு, 27 மார்ச், 2011

மறக்க முடியுமா… காங்கிரசின் அரை நூற்றாண்டு தமிழின துரோகத்தை ! – காணொளி இணைப்பு

நாம் தமிழர் கட்சியினால் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக ஒரு பிரச்சார காணொளி வெளியிடப்பட்டுள்ளது. மறக்க முடியுமா… காங்கிரசின் அரை நூற்றாண்டு தமிழின துரோகத்தை !
–  தமிழர்கள் அனைவரும் தங்களது தமிழக உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் இக்காணொளியை காண பரிந்துரைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். மேலும் தங்களால் இயன்றவரை பிரதி எடுத்து காங்கிரசு கட்சி போட்டியிடும் இடங்களில் பரப்புரை செய்யுமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

நாம் தமிழராய் உருவெடுப்போம் காங்கிரசை கருவருப்போம் ..


இருப்பாய் தமிழா நெருப்பாய். 


நாம் இருந்தது போதும் அடுத்தவர் காலுக்கு செருப்பாய். 

இணையம் ஊடாக நாம் தமிழர் கட்சியில் உறுப்பினராக இணைந்து கொள்ள இங்கே அழுத்தவும்.
"நாம் தமிழர்"


Image Hosted by ImageShack.us





சனி, 26 மார்ச், 2011

தமிழீழ வான்புலிகளின் வீரம்.

வான்புலிகள் (Tamileelam Air Force - TAF) தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வான்படைப் பிரிவாகும். இப்பிரிவு ஆங்கிலத்தில் Air Tigers, Flying Tigers, Sky Tigers என்று பலவாறு குறிக்கப்படுவதுண்டு.


வான்புலிகள் மார்ச் 26, 2007 அன்று கொழும்பில் உள்ள கட்டுநாயக்க விமானப் படைத்தளத்தின் மீது தாக்குதலை நடத்தியதன் மூலம் வெளியுலகுக்கு தங்கள் இருப்பை உறுதி செய்தனர். இவர்கள் இளநீல வரிப்புலி சீருடையும், 'வானோடி' என்ற வாசகம் குறிக்கப்பட்ட சின்னத்தையும் அணிந்திருப்பர்.




வான்புலிகள் வரலாறு 85, 86 காலப் பகுதிகளிலேயே புலிகள் விமானங்களை கட்டுதல் தொடர்பாக கவனம் எடுக்க தொடங்கி விட்டார்கள்.


செப்டம்பர் 27, 1998 - 1998ம் ஆண்டு மாவீரர்தின உரையின்போது விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் வான்புலிப் படைப்பிரிவு தொடர்பான முதல் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார். அந்நிகழ்வின்போது வான்புலிகளுக்கு சொந்தமான வான்கலத்திலிருந்து பூக்கள் தூவப்பட்டதாக நேரில் பார்த்தவர்களுடைய அனுபவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.


2000 - 'வான்புலிகள் ஆண்டு' என தமிழீழ விடுதலைப் புலிகளால் அறிவிக்கப்பட்டது கேணல் சங்கர்.

கேணல் சங்கர் 
கேணல் சங்கர் என்று அழைக்கப்பட்ட வித்தியாலிங்கம் சொர்னலிங்கம் தலைமையில் வான்புலிகள் பிரிவு தொடங்கப்பட்டது. டிசம்பர் 2001 அவர் கொல்லப்படும் வரை வான்புலிகள் பிரிவின் தலைவராக செயற்பட்டார்.

ஜனவரி 26, 2005 - இரணைமடு விமான ஓடுதளம் பற்றிய இலங்கை இராணுவ அறிக்கை



ஆகஸ்டு 11, 2006 - யாழ்ப்பாணத்திலுள்ள பலாலி வான்படைத்தளம் (இலங்கை இராணுவத்தினருக்கு சொந்தமானது) வான்புலிகளால் வான்கலங்களை பயன்படுத்தித் தாக்கப்பட்டிருக்கக்கூடும் என்ற ஊகங்களை உருவாக்கும்படியான செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

மார்ச் 26, 2007 - அதிகாரப்பூர்வமாக விடுதலைப்புலிகளால் உரிமை ஏற்கப்பட்ட முதலாவது வான் புலித் தாக்குதல் 26ம் திகதி மார்ச் 2007 இல் இலங்கை கட்டுநாயகா விமானப்படைத்தளத்தின் மீது நடத்தப்பட்டது.



ஏப்ரல் 24, 2007: பலாலி இராணுவத்தளம் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் விமானங்கள்வெற்றிகரமான தாக்குதலை நடத்தின.





ஏப்ரல் 29, 2007: வான்புலிகளின் இரண்டு வான்கலங்கள் கொழும்புக்கு வடக்கே 3மைல் தொலைவில் உள்ள கொலன்னாவை எண்ணெய் குதங்களையும் 10 மைல் தொலைவில் உள்ள கெரவலப்பிட்டி எண்ணெய் குதங்களையும் குண்டு வீசி தாக்கின.

அக்டோபர் 22, 2007 - எல்லாளன் நடவடிக்கை 2007: அநுராதபுரம் வான் படைத்தளத்தின் மீது அதிகாலை வான், மற்றும் தரை என நடத்திய இரு முனைத் தாக்குதலில் 8 வானூர்திகள் அழிக்கப்பட்டு 13 படையினர் கொல்லப்பட்டனர்.



வான்புலிகள் நடத்திய தாக்குதல், வெளியிடப்பட்ட தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் ஆகியவை அடிப்படையில் புலிகளிடம் 2-5 இலகுதர வான்கலங்கள் உண்டு எனக்கருதப்படுகிறது.

இவை செக் நாட்டு இசட்-143 வகை விமானங்களாக இருக்கலாம் என்று இலங்கை அரசு கருதுகின்றது. இவைதவிர வான்புலிகளிடம் தாக்குதலுக்கு பயன்படுத்தக்கூடிய பிற வான்கலங்களும், உலங்குவானூர்திகளும் இருக்கலாம்.

முதல் தாக்குதலில் வான்கலங்களேடு பொருத்தப்பட்ட சில இணைப்புப் பாகங்கள், விமான ஓட்டிகளின் கட்டுப்பாட்டில் இயங்கும் இலத்திரனிய குண்டு விடுவி மற்றும் குண்டுகள் ஆகியவை உள்ளூர் தயாரிப்புக்கள்.

இவை விமானங்கள் பற்றிய தொழில்நுட்ப வளம் புலிகளிடம் இருப்பதைக் காட்டுகின்றது. கட்டுநாயக்கா விமான நிலையத்தின் மீது வீசப்பட்ட 4 குண்டுகளில் 1 வெடிக்கவில்லை வெடிக்காத ஒன்றை ஆராய்ந்த இலங்கை அரச தரப்பினர் இவற்றில் பல நூற்றுக்கணக்கான உருக்கு உருளைகள் கொண்ட உள்ளூர்த் தயாரிப்பென சண்டே ரைம்ஸ் பத்திரிகையில் இராணுவப் புலனாய்வு ஆசிரியர் இக்பால் அத்காஸ் தெரிவித்தார்.

வான்கலத்தை இரவில் ஓட்டிச் சென்று ஓர் இலக்கை அழிக்கும் திறன் இலகுவில் பெறக்கூடிய செயற்திறன் இல்லை. மாறாக, நீண்ட கால படிப்பறிவும், பட்டறிவும் தேவை. வான்புலிகளின் இத்திறன் கட்டுனாயக்க விமானத்தளத் தாக்குதலுக்கு அடுத்து நிரூபிக்கப்பட்டிருக்கிறது.



தொடக்கத்தில், வான்புலிகள் யப்பானிய கமிகாச en:Kamikaze போன்று தற்கொலைத் தாக்குதல்கள் நடத்தலாம் என்று இராணுவ ஆய்வாளர்களால் தெரிவிக்கப்பட்டது. எனினும் தமது முதல் தாக்குதலில் இரவில் சென்று ஒரு இலக்கை தாக்கி மீண்டதன் மூலம் இவர்களின் தாக்குதல் திறனும் முறையும் தற்கொலைத் தாக்குதல்களாக மட்டுமே அமையும் என்ற கருத்தை பொய்ப்பித்துள்ளது.

விமானம் வாங்குவதில் இருக்கும் செலவு, விமான ஓட்டிகளாக பயிற்சி பெறுவதில் இருக்கும் சிரமம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு தற்கொலைத் தாக்குதல்கள் கடைசி கட்ட நடவடிக்கைகளாகவே இடம்பெறலாம் என்று தற்போது கருத்துக்கள் மீளாய்வு செய்யப்பட்டுள்ளன.



எதிர்காலத்தில் பிளிற்ஸ்கிறீக் en:Blitzkrieg முறையான தாக்குதல் நடவடிக்கைகளிலும் வான்புலிகள் ஈடுபடலாம் என்று கருதப்படுகின்றது.

விமானவியல் தொழில்நுட்பமும் விமான ஓட்டுனர் பயிற்சியும்.


வான்புலிகளின் தோற்றத்துக்கு தலைமை ஏற்றவராக கருதப்படும் கேணல் சங்கர் "சென்னையில் உள்ள இந்துஸ்தான் பொறியியல் கல்லூரியில், ஏரோநாட்டிக்ஸ் பிரிவில் பி.இ. படித்தார். அதன் பின்னர் கனடா சென்ற அவர், அங்கு ஏர் கனடா விமான நிறுவனத்தில் பொறியியல் பிரிவில் பணியாற்றியுள்ளார்."

வான்புலிகள் பிரான்சிலும் ஐக்கிய இராச்சியத்திலும் ஓட்டுனர் பயிற்சியைப் பெற்றிருக்கலாம் என்று பிரபல இராணுவ ஆய்வாளர் இக்பால் அதாஸ் "Intelligence sources" முன்வைத்து கருத்து தெரிவித்திருக்கின்றார்.

இந்த தொழில் நுட்பத்தை மலேசியாவில் இலங்கைத் தமிழ் பின்புலத்தைக் கொண்டவரால் இயக்கப்படும் ஒரு விமான பராமரிப்புப் பயிற்சி கல்லூரியிலும் விடுதலைப் புலிகள் பெற்றிருக்கலாம் என கருத்துப்பட The Island பத்திரிகையும் Asia Tribune தகவல்கள் வெளியிட்டுள்ளன

இரணைமடு பகுதியில் பெரிய விமானங்களும் வந்து இறங்கக் கூடிய அளவு ஓடுதளம் ஒன்று இருப்பதை செய்மதிப் படங்கள் மூலம் உறுதி செய்யக்கூடியதாக உள்ளது. இந்த விடயம் 2005 ஆண்டளவில் தெரியவந்தது. சிறிய ஓடுதளம் முல்லைத்தீவின் வேறு பகுதிகளிலும் இருக்கலாம்.

வான்புலிகளின் முதல் உருவாக்கம் தேசியத் தலைவர் -காணொளியில்.



வான் புலிகளின் பாடல் 




Image Hosted by ImageShack.us

பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

யார் இந்த தமிழின தலைவன் பிரபாகரன்.

தமிழன் யார் என்பதை அகிலமே திரும்பிப் பார்க்க வைத்தவர் ஒரு நாட்டின் வரலாற்றை மாத்தரமல்ல உலகின் பெரும் பகுதி வரலாற்றையே தலைகீழாக புரட்டிப் போட்ட ஈழப் போராட்டத்தின் நாயகன் பெயர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உலகத் தமிழினத்தின் எண்ணம், சொல், செயல், மாற்றமடையக் காரணமானவர் பிரபாகரன்.

தமிழர்களுக்கு தமிழுணர்வை ஊட்டியவர். சோம்பிக் கிடந்த இனத்தைத் தட்டியெழுப்பினவர் என்பதோடு நிறுத்த முடியாது. பூமிப் பரப்பெல்லாம் தமிழின் விதை விதைக்கக் காரணமானவர் அவர்தான.; சென்ற இடத்தில் மறைந்து வாழ்ந்த தமிழர்களை நான் தமிழன் என்று துணிந்து சொல்ல வைத்தவர் பிரபாகரன் தான் .

இனித் தமிழர் வரலாறு தூக்க நிலைக்குத் திரும்ப வாய்ப்பில்லை அவர் அடியெடுத்த போராட்ட மரபு தொடரும். கூலிகள் என்றும் வந்தேறு குடிகள் என்றும் நாதியற்றவர்கள் என்றும் தூற்றப்பட்ட உலகத் தமிழர்களை வலிமை பெற்று உரிமை கோர வைத்தவர் தலைவர் பிரபாகரன்.

இணையத்தில் தமிழ் உலகின் முக்கிய மொழிகளில் ஒன்றாகத் திகழக் காரணமானவர் தமிழியலுக்கும் தமிழ் வளர்ச்சிக்கும் ஊக்கு கருவியாகத் திகழ்பவர் தமிழ் இலக்கியம், தமிழ்ப் பண்பாடு, தமிழன் தோற்றம், வளர்ச்சி பற்றிய ஆய்வுக்குத் தோன்றாத் துணையாக நிற்பவர்.

பலரை வரலாறு படைக்கின்றது ஒரு சிலர் வரலாற்றைப் படைக்கிறார்கள் அந்தச் சிலரில் ஒருவர் பிரபாகரன். மிக விரைவில் பிரபாகரன் யுகம் தோன்றும் அப்போது உலகம் நினைத்துப் பார்க்காத உயரத்திற்க்குத் தமிழினத்தைப் பிரபாகரன் தூக்கிச் சென்று நிறுத்தியதைத் தமிழினம் உணரும்.


அன்று தொட்டு இன்று வரை தமிழரின் போரட்டம் அற வழியைத் தழுவி நிற்கின்றது அகிம்சை வழியிலும் சரி, ஆயுத வழியிலும் சரி தமிழர் வரித்துக் கொண்ட போராட்டம் தர்மத்தின் நியமத்தில் நெறிப்பட்டு நிற்கின்றது அவர் நடத்திய ஈழவிடுதலைப் போர் தார்மீக அடிப்படையிலானது. அது தமிழர்களின் ஆன்மபலமாகவம் இருந்து வருகிறது.

சிங்களவர்கள் உண்மையான புத்த மதத்தினராக இருந்தால் தமிழீழ விடுதலைப் போருக்கான அவசியம் இராது சமாதானப் பேச்சென்றாலும் சரி, போர் என்றாலும் சரி, சிங்களவர்கள் நேர்மை, நிதானம், காருண்யம் அற்றவர்களாக வெளிப்படுகிறார்கள் சிங்களப் பயங்கரவாதம் ஈழத் தமிழர்களின் தேசிய ஆன்மாவில் விழுத்திய வடுக்கள் என்றுமே மாறப்போவதில்லை.

விடுதலைப் போராட்டம் என்பது இரத்தம் சிந்தும் புரட்சிகர அரசியல் பாதை’ என்று பிரபாகரன் மிகச் சுருக்கமாகக் கூறியிருக்கிறார். அவர் தொடர்ந்து பேசுகிறார் விடுதலை என்ற இலட்சியத்தை நாம் இலகுவாகத் தேர்ந்தெடுக்கவில்லை. வரலாறுதான் அதை எம்மிடம் வலுக்கட்டாயமாகக் கையளித்துள்ளது சுதந்திரம் வேண்டுவதைத் தவிர வேறு வழி எதையும் வரலாறு எமக்கு விட்டு வைக்கவில்லை.

தமிழர்களை ஏமாற்றுவதும் அடிமை கொள்ளும் நோக்குடன் இன அழிப்புச் செய்வதும் சிங்கள தேசத்தின் பாரம்பரிய நடைமுறை. தற்காக புத்த மதத்தைத் துணைக்கு அழைக்க அவர்கள் தயங்கியதில்லை சிங்கள மக்களின் பாலி மொழி இதிகாசமான மகாவம்சத்தின் நாயகனான துட்ட காமினி போர் மரபை மீறீத் தமிழ் மன்னன் எல்லாளனை வஞ்சகமாகக் கொன்றான் பல்லாயிரம் தமிழர்களையும் அதே போரில் அவன் கொன்றான்.

இரத்த வெறி அடங்கியபிறகு அவன் சோர்வடைந்து மாளிகை உப்பரிகையில் படுத்திருந்தான் உயிர்ப்பலி அவனை துயரடையச் செய்ததாக மாகவம்சம் கூறுகிறது அவனுக்கு ஆறதல் மொழி கூறுவதற்காக எட்டு புத்த பிக்குகள் வான் மூலம் பறந்து அவனிடம் வந்து சேர்ந்தனர்.

புத்த மதத்தைச் செராதவர்களைக் கொல்வதில் பாவமில்லை என்ற ஞான உபதேசத்தை பிக்குகள் மன்னனுக்கு வழங்கி அவனுக்குப் புத்துணர்ச்சி ஊட்டியதாக மகாவம்சம் கூறுகிறது அண்மையில் புத்த பிக்கு ஒருவர் வெளியிட்ட ஆங்கில ஆய்வு நூலில் சிங்கள தேசியத்தின் அதியுச்சம் துட்டகாமினியின் தமிழ்ப் படுகொலைகளின் போது எட்டப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சிங்கள பௌத்தம் என்ற புதிய மதத்தைச் சிங்களப் பேரினவாதிகள் உருவாக்கியுள்ளனர் திவ்வியஞான சபையைச் சேர்ந்த (Theosophical society ) காலஞ்சென்ற கிருஷ்ணமூர்த்தி கொழும்பு வந்த போது இதைக் கடுமையாகச் சாடியுள்ளார் .

சிறிலங்கா தனது அரசியல் சாசனத்தின் மூலம் புத்த மதத்திற்கு மேலிடம் வழங்கியுள்ளது புத்த மதத்தைத் பாதுகாத்தல் அரசின் பொறுப்பு என்று அரசியல் சாசனம் இடித்துரைக்கிறது. சிறிலங்கா மதச் சார்புள்ள நாடு. படிப்படியாகப் பிற மதங்களின் சுதந்திரம் பறிக்கப்படுகிறது

தமிழ் நாட்டிலும் தமிழீழத்திலும் தமிழர் மத்தியில் புத்த மதம் முன்னர் செழித்தோங்கி இருந்தது 7ம் நூற்றாண்டில் தொடங்கிய சிவ மதத்தின் மறுமலர்ச்சிக்குப் பிறகு இரு பகுதிகளிலும் புத்த மதம் மங்கிவிட்டது ஆனால் வரலாற்றுச் சின்னங்கள் கிடைக்கின்றன.

ஈழத் தமிழர் வாழும் பகுதிகளில் புத்த சின்னங்களும், புத்த கோயில்களின் எச்சங்களும் காணப்படுகின்றன இவை சிங்கள பௌத்தத்தின் அடையாளங்கள் என்று சிங்கள பௌத்த பேரினவாதிகள் புதிய வரலாறு படைக்கின்றனர் யாழ் கந்தரோடையிலுள்ள புத்த மத இடிபாடுகள் சிங்கள பௌத்தத்திற்கு உரியவை என்ற வாதம் நிறுவப்படுகிறது.

கந்தரோடை இடிபாடுகளுக்கு சிங்களப் பெயர் சூட்டப் பட்டுள்ளதோடு சிங்களப் புத்த பிக்குகளும் அங்கு நிலைகொண்டுள்ளனர் பிக்குகளின் பாதுகாப்பிற்காக சிங்கள இராணுவ அணி நிறுத்தப்பட்டுள்ளது பாலஸ்தீன அரபு மக்களின் பூர்வீக நிலத்தை ஆக்கிரமிக்கும் யூத அரசு போலி வரலாற்று செய்திகளைக் கூறுவது வழமை.

பழைய ஏற்பாட்டில் இருந்து எடுக்கப்பட்ட பெயர்களை ஆக்கிரமிப்புச் செய்த நிலத்திற்குச் சூட்டியபின் அது புராதான கால யூத நிலம் என்று உரிமை கோருவது இஸ்ரேலிய நடைமுறை இதைச் சிங்கள அரசும் பின்பற்றுகிறது சிறிலங்கா சுதந்திரம் பெற்ற நாட்தொட்டுத் தமிழர் நிலத்தில் சிங்களக் குடியேற்றங்கள் இடைவிடாது நடக்கின்றன.

எந்தக் கட்சி ஆட்சியைப் பிடித்தாலும் வெப்ப வலய மேம் பாட்டுத் திட்டம் என்ற பெயரில் சிங்களக் குடியேற்றம் தமிழர் எதிர்ப்பையும் மீறி முன்னெடுக்கப் படுககின்றது இராணுவம் மற்றும் விசேட அதிரடிப்படை தமிழர்களை விரட்டுவதற்கும் குடியேற்ற வாசிகளுக்குப் பாதுகாப்பு வழங்குவதற்கும் பயன்படுத்தப்படுகிறது.

தமிழர் நிலத்திற்க்குப் புதிய சிங்களப் பெயர் சூட்டும் செயற்பாடு இன்னுமோர் பக்கத்தில் நடக்கிறது பெயர் மாற்றம் செய்யப்பட்ட தமிழ் மண்ணின் பட்டியல் மிக நீளமானது மிக அண்மையில் முல்லைத்தீவு மூலதூவ என்றும் கிளிநொச்சி கிரானிக்கா என்றும் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இனப் படுகொலையின் அங்கமாகவும் சிங்களக் குடியேற்றத்தை பார்க்கலாம் மணலாறில் வாழ்ந்த தமிழ்க் குடும்பங்கள் nஐனரல் ஐhனகா பெறேரா தலைமையிலான இராணுவத்தால் சுட்டும் வெட்டியும் கொன்று விரட்டப்பட்டுள்ளன.

ஓரு தமிழ்க் கிராமத்திற்கு ஐhனகாபுர என்று தன்னுடைய பெயரை அவர் சூட்டியுள்ளார் குடியேற்றத்தின் மூலம் தமிழர்கள் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, மணலாறு ஆகிய பகுதிகளில் சிறுபான்மையினராக ஆக்கப்பட்டுள்ளனர் இப்போது வடக்கில் குடியேற்றம் தொடங்கிவிட்டது.

குடியேற்றத்தின் மூலம் இனப் பிரச்சனைக்குத் திர்வு காணமுடியும் என்று கூறும் புவியியல் ஆய்வு நூல்கள் வெளிவந்துள்ளன. வடக்கு கிழக்கில் தமிழர் வாழும் நிலம் சிங்களவருடைய நிலம் என்று வாதிடும் சிங்களப் பேரினவாதிகள் ஒரு நூற்றாண்டுக்கு மேலாக இலங்கையில் நிலவிய சோழர் ஆட்சியின் போது தாம் அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்டதாகக் கூறுகிறார்கள்

தாம் குடியேறும் நிலத்திற்கு தாமே சொந்தக்காரர்கள் தமிழர்கள் அல்லவென்றும் வாதிடுகிறார்கள். இது போதாதென்று 1956 தொடக்கம் காலத்திற்கு காலம் அரசு ஆதரவு பெற்ற சிங்களக் காடையர்கள் இராணுவ மற்றும் பொலிஸ் பாதுகாப்புடன் தமிழர் மீது தாக்குதல் நடத்தினார்கள். உயிரிழப்புக்களையும் சொத்திழப்புக்களையும் தமிழர்கள் சந்தித்தனர் 1983ல் இது உச்சம் அடைந்தது.

பாதிக்கப்பட்ட தமிழர்கள் வெளிநாடுகடுளுக்குத் தப்பியோடும் நிர்ப்பந்தம் ஏற்பட்டது தமிழ் டயஸ் போறா எனப்படும் புலம்பெயர் தமிழர் சமூகம் அனைத்துலக மட்டத்தில் தோன்றியது உலகத் தமிழர் என்றால் புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்கள் என்ற கருத்து நிலவுவதற்கு இது தான் காரணம்

தமிழர் தாயகம் மனிதப் புதைகுழிகள் நிறைந்த பூமி மட்டு அம்பாறைத் தமிழுறவுகள் கொடுத்த விலை மிக அதிகம் கொக்கட்டிச் சோலையிலே தமிழர் வீடுகள் குடிசைகள் தோறும் எண்ணற்றோர் உயிரிழந்துள்ளனர் வடக்கில் செம்மணி, வயாவிளான் என்பன கொன்று புதைக்கப்பட்டவர்களுக்குச் சாட்சி பகர்கின்றன இறுதியாக இப்போது முள்ளிவாய்க்காலில் மீண்டும் புதைகுழி.

வரலாறு எமது வழிகாட்டி என்று சொன்ன தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் சிங்களப் பயங்கரவாதம் எமது தேசிய ஆன்மாவில் விழுத்திய வடுக்கள் என்றுமே மாறப் போவதில்லை ‘என்று அடித்தக் கூறியுள்ளார் .

பிரபாகரனின் தனிப்பெரும் பண்புகளை இங்கு எடுத்துக் காட்டலாம் குறைந்த பேச்சு, நிறைந்த கேள்வி, தனித்த சிந்தனை, கருத்தில் தெளிவு சாதனைக்கு மதிப்பு எனலாம் அவர் மேடை போட்டு முழங்கியதில்லை. வேட்டி சால்வை அணிந்து அரசியல்வாதி வேடம் தரித்ததில்லை தந்தவனுக்கே திருப்பி கொடு இது தான் அவருடைய செய்தி அடித்தவனைத் திருப்பியடி என்பது இந்தச் செய்தியின் சாரம்சம் அறிவு ரீதியாகவும் விஞ்ஞான ரீதியாகவும் தமிழீழனம் வளர வேண்டுமென்டு ஆசைப்பட்டு அதற்காக உழைத்தவர் விடுதலைப் பெற்ற தமிழீழம் பொருளாதார சுபீட்சம் காணவேண்டுமென்டு திட்டமிட்டார்.

சாதி ஒழிப்பிற்கு அவர் முன்னுரிமை அளித்தார் சீதனக் கொடுக்கல் வாங்கலைத் தடைசெய்தார் மதச் சமத்துவத்தைப் பேணினார் தமிழீழ காவல்துறையை உருவாக்கி சட்ட ஒழுங்கை அமுலாக்கினார் ; எல்லாவற்றிக்கும் மேலாக அவர் பெண்கள் வாழ்வில் புரட்சிகர மாற்றத்தைத் ஏற்படுத்தினார் ஒரு புதுமைப் பெண்னை, புரட்சிகரப் பெண்னை தமிழீழ விடுதலைப்புலிகள் உருவாக்கினார்கள் அதன் தாக்கம் நிரந்தரமானது.

தேசியத் தலைவர் அவர்கள் ஒரு சந்தர்ப்பத்தில் மகளீர் படையணினின் தோற்றமும் வளர்ச்சியும் எழுச்சியும் எமது இயக்கம் படைத்த மாபெரும் சாதனைகளில் ஒன்று என்று சொன்னார்.

தன்னாட்சி பெற்ற தமிழீழத்திற்கான அரசியல் சாசனத்தை உருவாக்குவதற்காக உலகின் தலைசிறந்த அரசறிவியல் பேராசியர்களையும் புலிகள் அமைப்பில் உறுப்பியம் பெற்ற வல்லுனர்களையும் ஒன்றிணைத்து ஒரு வரைவைத் தயாரித்தார் சாசனவியலாளர்களால் அந்த வரைவு போற்றி பாதுகாக்கப்படுகிறது.

ஒடுக்கப்பட்ட இனம் தொடர்ந்து ஒடுங்கியிராது என்பதற்கு பிரபாகரன் தொடுத்த விடுலைப் போர் சாட்சியாக அமைகிறது பிரபாகரன் நேத்தாஜி சுபாஸ் சந்திரபோசை நேசித்தார். அவரைப் போலவே பிரபாகரன் தூய்மையாக வாழ்ந்தார் நேத்தாஜியின் போராட்டப் பங்களிப்பு இன்னும் சரிவர கணிப்பிடப் படவில்லை. மழங்ககடிக்கப் படுகிறது என்று கூடச் சொல்லலாம்.


தமிழினத்தை கடந்த முப்பதிற்கும் மேலான வருட காலம் வழிநடத்தி வரும் பிரபாகரன் அவர்களின் தாக்கம் உலகத் தமிழினத்தால் மிக நன்றாக உணரப்படுகிறது. உலக தமிழ்ச் சமுதாயத்தில் எது நடந்தாலும் அவருடைய தாக்கம் இல்லாமல் நடக்க முடியாதளவிற்கு அவர் முத்திரை பதித்துள்ளார்.



Image Hosted by ImageShack.us




சிங்கள பூமியாக மாற்றிவிட்டார்களே!:அந்தோணியார் கோயிலில் அழுத ஈழத் தமிழர்கள்!

இலங்கையில் போர் முடிந்து இரண்டு ஆண்டுகளாகப் போகிறது. ஆனா​லும், அங்குள்ள தமிழர்களின் இன்னல்கள் இன்னும் ஓயவில்லை. அதன் பிரதிபலிப்பு, இந்த ஆண்டு நடந்த கச்சத் தீவுத் திருவிழாவிலும் எதிரொலித்ததுதான் கொடுமை!

இந்தியா வசம் இருந்த கச்சத் தீவு, 1974-ல் இலங்​கைக்குத் தாரைவார்க்கப்பட்டது. ஆனாலும், அங்கு உள்ள புனித அந்தோணியார் கோயில் திருவிழாவில், இரு நாட்டு பக்தர்களும் தடைகள் இன்றிப் பங்கேற்றனர். 83-ல் தமிழர்கள் மீதான தாக்குதல் தீவிரம் அடைந்த நிலையில், இந்த விழா தடைப்பட்டது. அதன் பிறகு தமிழக பக்தர்கள் பங்கேற்க, இந்திய அரசு அனுமதிக்கவில்லை. கடந்த 2009-ம் ஆண்டு, புலிகள் இயக்கத்துடனான போர் முடிவுக்கு வந்ததும், சென்ற ஆண்டு கச்சத் தீவுத் திருவிழாவில் தமிழக பக்தர்கள் பெருமளவில் கலந்து​கொண்டனர். இந்த ஆண்டுக்கான திருவிழாவும் கடந்த 19, 20-ம் தேதிகளில் நடந்தது. அப்போது கச்சத் தீவு அந்தோணியாரிடம் தங்கள் துயரங்களை முறையிட வந்திருந்த ஈழத் தமிழர்கள் சிலரிடம் பேசினோம்.

ஊர்க் காவல் துறையைச் சேர்ந்த ஒரு மீனவர் நம்மிடம், ''பிரச்னை முடிஞ்சு பல காலமாகியும் எங்கட கஷ்டம் மட்டும் இன்னும் தீரலை. முள்ளி வாய்க்கால் சண்டையின்போது பிடி​பட்ட சனங்களில் பல ஆயிரம் பேர், இன்னும் முகாமில்தான் இருக்காங்க. விசாரணை என்ற பெயரில் எங்கட சகோதரர்கள் ஏராளமானோர் இன்னும் வதை முகாம்களில்தான் அடைபட்டு இருக்காங்க. ஆனா, உலக மக்களை ஏமாத்தும் விதமா, இலங்கையில் தமிழர்கள் சந்தோ​ஷமா இருப்பதாகப் பொய் பரப்பு​றாங்க. உண்மையில், இன்னும் நாங்க இரண்டாம் குடிமக்களாவே நடத்தப்​படுறோம். சண்டை முடிஞ்சு இவ்வள காலமாயிட்டதுதானே... இன்னும் எங்கட மக்களைத் தங்களோட சொந்த இடங்களுக்கு அனுப்பலையே... எங்கட இடத்துல எல்லாம் 'இது எங்கட பூர்வீக பூமி’னு சொல்லி சிங்கள மக்களைக் குடியமர்த்தும் வேலையை ஆர்மியும் அரசாங்கமும் நடத்துது. 
எதிர்த்துக் குரல் கொடுத்தா, ராத்திரியோட ராத்திரியா வீடு புகுந்து அந்த ஆளைப் பிடிச்சுட்டுப் போய், கொன்னு போட்டுடறாங்க!

டக்ளஸ், பிள்ளையான், கருணா போன்ற எங்கட ஆட்களோட, முஸ்லிம் காங்கிரஸ் எம்.பி-யான ரிசாட் பயதுல்லா மற்றும் மலையகத் தமிழாட்களையும் சேர்த்துக்கொண்டு எங்களுக்கு எதிரா இலங்கை அரசாங்கம் இயங்குது. சமீபத்தில் நடந்த உள்​ளாட்சித் தேர்தலிலும் இந்தக் கூட்டணி போட்டியிட்டது. இதுக்கு எதிரா தமிழர் கூட்டமைப்பு இயங்குது. ஆனா 'சைக்கிள் கொடுக்குறோம், தையல் மெஷின் கொடுக்குறோம், கடல் தொழில் பாக்க சிலிண்டர் கொடுக்குறோம்’னு சொல்லி ஓட்டு கேக்குறாங்க. ஏற்கெனவே எங்கட மக்கள் ஆர்மியோட தாக்குதல்ல கை, கால் இழந்துகிடக்காங்க. கை இழந்தவனுக்கு சைக்கிளையும், கால் இழந்தவங்களுக்கு தையல் மெஷினும் கொடுக்குறதால என்ன கிட்டும்? எங்கட கோரிக்கை எல்லாம் இப்ப இதுதான்... எங்கட மக்கள அவங்க சொந்த இடத்துல குடியேற அனுமதி கொடுக்கணும்! அவங்க ஆட்களுக்குக் கொடுக்​குற உரிமைகளையும் சலுகைகளையும் எங்கட மக்களுக்கும் கொடுக்கணும்! வதை முகாமில விசாரணைக் கைதியா இருக்கிறவங்களை (அவங்கள்ல எத்தனை பேர் இப்ப உயிரோட இருக்காங்கன்னே தெரியல) விடுதலை செய்​யணும். இது நடந்தாத்தான் எங்கட பிரச்னை தீர்ந்ததா சொல்ல முடியும்!'' என்றார் சோகமாக.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பற்றி அவர்களிடம் கேட்​டோம். ''பிரபாகரன் கொல்லப்பட்டார்னு இலங்கை ஆர்மி சொல்றதை ஏத்துக்க முடியாது. நேருக்கு நேர் சண்டை நடக்கும்போது எதிராளிகளை ஊடறுத்துச் செல்லும் வலிமைகொண்டவங்க விடுதலைப் புலிகள். அதனால், அரசியல் தீர்வுக்கான ஆட்களைக் களத்தில விட்டுட்டு, மறைவா இருக்கார் பிரபாகரன். அரசியல் தீர்வு கிட்டலைன்னா... நிச்சயம் ஆயுதப் போர் மீண்டும் நடக்கும்!'' என்றவர், ''என்னோட போட்டோவை மட்டும் போட்டுறாதிங்க!'' என்ற வேண்டுகோளுடன் முடித்தார்.


அந்தோணியார் திருவிழாவின்போது சிலுவைப்பாடு நிகழ்ச்சி நடந்தது. இதில் உரையாற்றிய இரு நாட்டுப் பங்குத் தந்தையர்கள் 'இழப்பு, துயரம், நம்பிக்கை’ போன்ற தலைப்புகளை மையமாகவைத்துப் பேசியது, இலங்கை மக்களின் மனநிலையைச் சொல்வதாகவே இருந்தது. இதுபற்றி நம்மிடம் பேசிய முன்னாள் முதன்மை குரு அமல்ராஜ், ''அரசுகளின் ஆதரவின்றி ஏதோ ஒரு குற்றச் செயல்போல் நடந்து வந்தது கச்சத் தீவுத் திருவிழா. தற்போது அந்த நிலை மாறி, இரு நாட்டு அரசுகளின் பங்களிப்புடன் இந்த விழா நடக்கிறது. திருப்பலியில் கலந்துகொண்ட ஈழத் தமிழர்கள் ஒருவித பயத்துடனேயே காணப்பட்டனர். இலங்கையில் இருந்து வந்திருந்த பங்குத் தந்தையர்கள் இரண்டு விஷயங்களை எங்களுடன் பகிர்ந்துகொண்டனர். முதலாவது, இன்னும் ஈழத் தமிழர்களுக்கான தீர்வு கிடைக்கவில்லை என்பது. இரண்டாவது, தமிழக மீனவர்களால் ஈழத்து மீனவர்களுக்கு ஏற்படும் தொழில் பாதிப்பு. இதை சரிசெய்ய வேண்டும். அப்போதுதான் ஈழத் தமிழர்களுக்கு நிம்மதி கிடைக்கும்!'' என்கிறார்.


புத்தனின் பூமியில் இருந்து... யேசுவின் திருவடியில் வைக்கப்படும் இந்தப் பிரார்த்தனைகள் நிறைவேறட்டும்!

நன்றி:விகடன்

வெள்ளி, 25 மார்ச், 2011

மேயர் தனுசனின் நினைவு நாள் இன்றாகும் அவனது வீர வரலாற்று குறிப்பு இணைப்பு.

மேயர் தனுசன்
தங்கராசா இலங்கேஸ்வரன்
தமிழீழம் (திருகோணமலை)
வீரப்பிறப்பு:25.11.1979
வீரச்சாவு : 26.03.2000

தமிழீழம் திருகோணமலையில் ஒவ்வொரு நாளும் துயரச் செய்தியோடு விடியும் கிராமங்களில் ஒன்றில்தான் தனுசன் பிறந்தான். நாளுக்கு நாள் சுற்றிவளைப்புக்கள், கைதுகள், சித்திரவதைகள் என்று அந்த ஊரிற்கே பழகிப்போன அவலங்கள் அது.

நித்தம் ஒரு வீட்டில் ஒப்பாரி கேட்கும். சின்ன வயதில் காயங்கள் மேல் காயங்களாக அவனில் பதிந்த காட்சிகள் ஒவ்வொன்றும் மாறாத தளும்பாக என்றும் அவனின் நினைவில் இருந்தன. அந்த நினைவுகளிலிருந்து அவன் தன்னை மீட்டுக்கொள்ள முடியாதவனாய் அலைந்தான். அவன் சிந்திக்கத் தொடங்கியபோது அந்த நாட்கள் மிகக் கொடுமையானதாக இருந்தன. என்றாலும் அவனால் அம்மாவை மீறி எதையுமே செய்ய முடியாதவனாய் மனசிற்குள்ளேயே அடக்கிக் கொண்டான்.


அம்மாவிற்குத் தெரியாது மௌனமாய் ஒரு எரிமலை குமுறிக் கொள்வது. அவள் பாவம். எப்போதும் பிள்ளைகளுக்காகவே தன்னை தேய்ப்பதில் திருப்தி கண்டுகொண்டிருந்தாள். அவளைப் பொறுத்தவரை தன் எல்லாச் செல்வங்களும்
தன்கூடவே இருந்துவிட வேண்டும் என்றதுதான் ஆசை.
''என்ர குஞ்சுகள் எல்லாம் என் னோடயே இருக்கவேணும்" என்று அவள் அணைக்கிறபோது, அவளின் மனதிற்கள் ஓராயிரம் கனவுகள் சிறகு விரிக்கும். அவளைப் பொறுத்தவரையில் தன்னைவிட்டு பிள்ளைகள் பிரிந்துவிடக் கூடாது என்ற நினைப்பு மட்டுமே இருந்தது.
"அண்ணா ஊருக்குவாற இயக்க அண்ணாக்களோட கதைக்கிறான்" என்று அவளின் சின்னமகன் வியர்வை களைக்க ஓடிவந்து சொல்லுகின்ற பொழுதெல்லாம் அவள் பெரிதாகப் பதறுவதில்லை. "அவன் என்னை விட்டுட்டு போகமாட்டான்." என்று பிள்ளை மேல் அவள் வைத்த பாசத்தினாலும் நம்பிக்கையாலும் தம்பியை அமைதிப்படுத்துவாள்.

அவளைப் பொறுத்தவரை இப்போதும் அவன் சின்னப் பிள்ளையே. ஆனால், அவனின் செயற்பாடுகளோ வேறுவிதமாய் இருந்தது.
ஒழித்து ஒழித்து வரும் போராளிகளுக்கு சாப்பாட்டுப் பொதி எடுத்துச் சென்று கொடுப்பது, அவர்கள் ஊருக் குள் சேகரித்த அரிசி, பருப்புகளை சுமந்துகொண்டு அவர்களின் முகாம் வரை செல்வது, அவர்கள் வீதி கடக்க வேவுபார்ப்பது என்று அவனது ஒவ்வொரு செயற்பாடும் பெரிதாக, தேவையானதாக இருந்தது.
ஊருக்குள் சிறு காக்காய் குருவிக்குக் கூட இவனின் செய்கை எதுவும் புரியாது. மிக அமைதியானவன். அம்மா மீதும், சொந்தங்கள் மீதும், ஊரின் மீதும் அவனது உறவு வலுப்பெற வலுப்பெற அவனது போராட்டச் சிந்தனைகள் தீவிரமானது.

அவனது அப்பா, மரங்களை அறுத்துச் சீவி வியர்வை சிந்தும் தச்சுத் தொழிலாளி. அவரைச் சுற்றி வளைப்பொன்றில் இராணுவம் கைது செய்து கொண்டுபோனது. தங்கரா சாவை பிடிச்சுக்கொண்டு போட்டாங்களாம் என்ற சேதி அந்த ஊருக்கு வழமையான ஒன்றாய் போனாலும் அவனின் வீட்டில் அது பெரும் இடியானது. 
அன்றாடம் உழைத்து சரா சரியாக வாழ்ந்துகொண்டிருக்கும் எளிமையான குடும்பம் இந்தத் திடீர் இழப்பால் அவதியுற்றது.

வீட்டிலே அவனையும் தம்பி யையும் வைத்துக்கொண்டு அந்தச் சீருடையணிந்த மிருகங்களிடம் அம்மா இரந்து கேட்டபோதுகூட அவைகள் இரங்கவில்லை. அவளது கண்ணீரைப் போலவே கெஞ்சுதலும் வீணாய் சிந்தப்பட்டது.

அப்பாவைக் கொண்டுசென்று விட்டார்கள். உதைத்து அப்பாவை றக்கில் ஏற்றிய காட்சி கண் முன்னே நடந்ததால் சித்திரவதைகள் எப்பிடி இருக்கும்.... 
மனசு நினைவிழந்தது. அன்றிலிருந்து அந்த வீட்டில் நேரத்திற்கு அடுப்பு புகையவில்லை. அம்மா பிள்ளைகளோடு அவர்களின் முகாம்களுக்கு அப்பாவை விசாரித்து அலைந்தாள். எங்கேயும் இல்லை.

ஒவ்வொரு முகாம் வாசலாய் ஏறி இறங்குகின்ற அவர்களின் நம்பிக்கை இப்போதும் அப்பா இருக்கின்றார் என்றதுதான். அது உண்மையானபோது சந்தோசப்பட முடியவில்லை. அப்பா வெளவால் போல தலைகீழாக தூங்கிக்கொண்டிருந்தார். அடிகாயங்களில் இருந்து இரத்தம் கசிந்து காய்ந்து போயிருந்தது. அந்த வதைமுகாமின் சின்ன இடை வெளிக்குள்ளால் இது மட்டுமே அவனுக்குத் தெரிந்தது. அவன் அழுதான். அப்போது சின்னப் பெடியன்.

சிறிது நாட்களில் அப்பா வந்துவிட்டார். ஆனால் அப்பாவின் இயல்புநிலை இன்னும் வந்துசேரவில்லை. முன்போல வேலைசெய்ய இயலாமல் அவரின் உடல் அடி காயங்களால் நோய்வாய்ப்பட்டிருந்தது. "அம்மாவைப் பார்க்க அண்ணாக்கள் இருக்கிறார்கள். தம்பியும் வளர்ந்து அவனும் பார்ப்பான்தானே."

அவன் இயக்கத்திற்கு புறப்படத் தயாரான போது இப்படித்தான் அம்மாக்காக அழும் மனசை திடப்படுத்திக் கொண் டான். போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொள்ளவே அவனொரு போராட்டம் நடத்தவேண்டியிருந்தது. எந்த நாளும் கண்ணில் படுமளவிற்கு அங்கே போராளிகள் திரிவதில்லை. எப்பவாவது இடையிடையே அங்கே உலாவும் அவனிற்குத் தெரிந்த போராளிகளைக் கூட சில நாட்களாகக் காணவில்லை. அவனின் காத்திருப்பு பொறுமையின் எல்லைவரை கொண்டு சென்றது. அவனும் அவனோடு இன்னும் இருவரும் போராட்டத்தில் இணைவதற்காக ஊரின் ஒதுக்குப்புறத்தில் காட்டிற்குள் தெரிந்த போராளிகளின் பாசறை ஒன்றிற்குச் செல்வதற்கு புறப்பட்டார்கள். நீண்டதூரப் பயணம். இடையிடையே பயணத்தைக் குறுக்கிட்டு மூர்க்கத்தனமாக ஓடும் ஆறுகள். எல்லாம் சலிப்பில்லாமல் கடந்துவந்து அந்த காட்டுப் பாசறையில் தன்னைப் போராளியாக்கினான். ஏற்கனவே அப்பாவின் உடல்நிலையால் உடைந்து போயிருந்த அம்மாவிற்கு இவனின் பிரிவு தாங்கிக்கொள்ள முடியாததாக இருந்தது. அவள் எதிர் பார்க்கவே இல்லை இப்படி ஒரு பிரிவை. நாளும் நாளும் அம்மா தூஙகாமலேயே பிள்ளை வருவான் என்று விழித்திருந்தாள்.

எதை எதையோ வெல்லாம் நினைத்து மனதை வருத்திக் கொண்டிருந்தாள். ஒவ்வோரு நாளிலும் அவளின் செயற்பாடுகளில் ஒவ்வொன்று குறைந்தது. தன் கருமங் களை கவனிக்காமலேயே ஏதோ மனநோய் பிடித்தவளாய் அலைந்தாள். மகன் வருவான், வரு வான் என்றே சொல்லிக்கொண்டிருந்தாள். பொன்னம்மான் பயிற்சிப் பாசறையில் பயிற்சி முடித்து பாசறை விட்டு வெளியே வந்தபோது அவனிற் கும் அம்மாவின் சேதி அதிர்ச்சியாய் த்தான் இருந்தது.
"என்ர குஞ்சுகளெல்லாம் என்னோடையே இருக்கவேணும்" கட்டிப் பிடிச்சுக்கொண்டு அடிக்கடி அம்மா சொல்வது நினைவில் பாரமானது. ஆனால் ஓடிச்சென்று பார்க்கும் சந்தர்ப்பம் இருக்கவில்லை. வன்னிநோக்கி அவர்கள் வந்து பல மாதங்கள் ஆகியிருந்தது.

அவன் கிராமத்திற்குச் சென்று அம்மாவோடு சும்மா இருந்தால் இவனிற்கு பைத்தியம் பிடித்து விடும் போலிருந்தது. அம்மாமீது வைத்திருந்த பாசத்தை அடக்கி வீரமாக்கிக்கொண்டு அவன் நினைத்துவந்த காரியத்தைச் செய்துகொண்டிருந்தான்.

சாள்ஸ் அன்ரனி படையணியில்தான் அவனது பணிகள் அனைத்தும் ஆரம்பமானது. வன்னியில் முக்கிய ஒருசில தாக்குதல்களிற்குச் சென்றுவந்த பின் லெப். கேணல் ராகவண்ணையுடன் கட்டளை மையத்தில் அவனது போராட்டப்பணி தொடர்ந்தன.

அறிக்கை எழுதுவது, ஆயுத விபரம் எடுப்பது என்று களத்தினில் நிகழும் மாற்றங்களையும் இழப்புக் களையும் வெற்றிகளையும் ஆவணமாக்கும் முக்கியமான பணியது. அங்கேதான் ஆரம்பப் பயிற்சி முகாமிலேயே உறவான உறவொன்று தொடர்ந்துகொண்டே வந்தது.


பிரிவு என்பதில் நொந்துபோயிருந்தவனிற்கு அரவணைக்க அன்புசெய்ய சகோதரன் மாருதியனின் பாசமிருந்தது. முதலில் அவனுடனான பாசம் பின் அவர்களின் வீடுவரை சென்றது. அந்த வீடு, அம்மா, அப்பா சகோதரிகள் எல்லாம் அவனின் நெருங்கிய உறவுகளானது. தனுசனின் வீட்டார் அவனிற்கு கடிதம் அனுப்புவதென்றால் அங்கே தான் அனுப்புவார்கள். மாருதியன் தனக்கு உடுப்பெடுத்தால், தனுசனுக்கும் சேர்த்தே எடுப்பான்.

இப்படி அவனின் உறவுகள் வலுப்பெற்றுக் கொண்டிருக்க உள்ளத்தில் இழப்புக்கள் உருவாகிக்கொண்டிருந்தன. வீரச்சாவு விபரம் எழுதி அவனது கை வைரம் பெற்றது. அதுவும் அவனோடு கூட இருந்தவர்கள், ஒன்றாய் பழகியவர்கள். ஒவ்வொரு போராளிகளினதும்  பெயர்களும் நாளும் அவனின் மனதிற்குள் பெரும் எரிமலைகளை உருவாக்கிக் கொண்டிருந்தன.

இந்த நாட்களில்தான் அவனிற்குள் கரும்புலியாகச் செல்லவேண்டும் என்று முடிவெடுத்தான். தனது மனதிற்குள் இருந்தவற்றை தலைவனிற்கு எழுதி அனுமதி கேட்டான். 
தேசியத் தலைவர் அவர்களுடன் மேயர் தனுசன் 

அவன் போராட்டத்தில் இணைவதற்கு நிகழ்த்திய மனப் போராட்டங்களைப்போல கரும்புலி அணிக்கான அனுமதி கேட்டு காத்திருக்கும் நாட்கள் கடுமையானதாக இருந்தது. எந்த விடயத்திலும் அவன் கூடவே திரிந்து, என்ன செய்தாலும் அவனைப் போலவே செய்யும் மாருதியன் அப்போதுதான் தனுசனின் பிரிவை எதிர்கொண்டான்.
அன்று கரும்புலிகள் அணியில் இணைந்துகொள்வதறகு அனுமதி வந்தவர்களை எற்றிச் செல்வதற்கு வாகனம் வந்துநின்றது. பிரியப்போகும் அந்த இறுதி நிமிடங்களை ஒரே இடத்திலிருந்து சந்திக்கும் சக்தி இருவருக்கும் இருக்கவில்லை.
தனுசன் புறப்படப்போகின்றான் என்றதும் மாருதியன் முகாமைவிட்டு வெளியே சென்றான். முகாமில் இருந்து பிரிவதற்கான நிமிடங்கள் விரைவாகக் கழிந்தன. மாருதியன் அந்த வாகனம் புறப்பட்டிருக்கும் என்ற கணிப்பீட்டில் அந்த முகாம் வந்தபோது வாகனம் இன்னும் புறப்படவில்லை. அவன் எந்த நேரத்தில் நிற்கக் கூடாது என நினைத்தானோ அது நிகழ்ந்துவிட்டது. வாகனத்தை விட்டு தனுசன் வேகமாக இறங்கினான். இறுதியாக  அந்த இணைவில் அவர்கள் பேசிக்கொள்ள வார்த்தைகள் இருக்கவில்லை. கண்ணீர்தான் கதைத்துக் கொண்டது.
தனுசனின் வாழ்வில் அடுத்தடுத்து பிரிவுச் சுமைகள் பாரமாய் கனத்தன. அந்தச் சுமைகளோடும் தாயகக்கனவை முதன்மையாக்கிக்கொண்டான். கரும்புலிகள் அணிக்குள் அவன் சேர்ந்திருந்தபோது அவனிற்கு மாருதியன் வீரச்சாவு என்ற சேதி வந்தது.

மீண்டும் மீண்டும் அவனின் மனதில் ஏற்பட்ட இழப்புக்கள் அவனை இன்னும் இன்னும் வேகமாக்கியது. கரும்புலிகள் அணிப் பயிற்சி முடிந்தபோது ஓயாத அலைகள் மூன்றிற்கான ஆரம்ப ஏற்பாடுகள் நிகழ்ந்துகொண்டிருந்தது. ஓயாத அலைகள் வன்னியின் சமர்முனையில் உக்கிரமானபோது அவனும் கரும்புலிகள் அணியின் ஒரு அணிக்கு பொறுப்பாகச் சென்றான். இராணுவப் பிரதேசத்திற் குள்ளேயே தங்கி அவனிற்கும் அவனது சொத்துக்களிற்கும் இழப்புக்களை ஏற்படுத்துவதற்காக பைகளில் உணவுகளோடு பெரும் சுமைகளைச் சுமந்து கொண்டு இரவு பகல் நித்திரையில்லாது ஓய்வில்லாது தங்களிடம் இந்த தேசம் எதிர்பார்த்ததை செய்து முடித்திருந்தார்கள்.

அதேபோலதான் வட போர் முனையில் ஓயாத அலைகள் அடிக்க ஆரம்பித்தபோது ஆனையிறவு களத்தினுள் இராணுவத்தின் சில செயற்பாடுகளை முடக்கி வைத்திருப்பதில் அவனின் பங்களிப்பும் இருந்தது.

அந்தத் தாக்குதலிற்காய் அவன் செல்கின்றபோது லேசான காய்ச்சல் அவனது உடற் சுகயீனத்தினை காரணம் காட்டி அந்தத் தாக்குதலில் அவன் பங்குபற்றும் அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால் அவன் கேட்பதாக இல்லை. அவனும் செல்லப் போவதாக பிடிவாதம் பிடித்தான். அனுமதி பெறும் மட்டும் ஓயவில்லை. அதன் பின்னே திருப்தி.

தாக்குதலிற்காக நகர்ந்து தண்ணீரைக் கடக்கின்றபோது அவனின் உடல் குளிரால் நடுங்கத் தொடங்கியது. அவனின் மனது மட்டும் வைரமாய் இருந்தது. பொதிகளோடு நீந்துவதற்கு சிரமப்பட்டுக் கொண்டிருந்த இன்னொரு தோழனிற்கு உதவி செய்து அவனையும் அழைத்துச் செல்லும் மனத்திடம் அவனிடம் இருந்தது.

தாக்குதலிற்காகச் சென்று இடையில் வேறு வேலைக்காக இருவர் அவர்களை விட்டுப் பிரிந்து சென்ற போது அவர்களோடு இவர்களிற்கான உணவுப் பொதிகளும் சென்றுவிட்டது. திரும்பிவந்து எடுப்பதற்கோ வேறு எவர் மூலமாவது பெற்றுக்கொள்ள முடியாத சூழல். அவர்கள் இராணுவப் பிரதேசத்திற்குள் நுழைந்துவிட்டார்கள்.

இனி வெளியே வருவதென்றால் அவர்கள் தங்களிற்கான பணியினை முடித்துத்தான் வருவார்கள். சாப்பாட்டுப் பொதி இல்லாதபோதும் அவர்கள் தங்களிற்கான இலக்கு நோக்கிச் சென்றார்கள். அவர்களிற்கான பணியை முடித்தபோது பெரிதும் சோர்வுற்றுப் போயிருந்தார்கள். ஆனாலும் அவர்கள் தங்கள் பணி முடிந்தது என்ற திருப்தியோடிருந்தார்கள்.

அதே போலவே பளைப்பகுதியில் அமைந்திருக்கும் ஆட்லறித் தளம் மீது தாக்குதல் நடத்துவதற்குத் திட்டமிட்ட போது தனுசனும் ஓர் அணியோடு தெரிவு செய்யப்பட்டிருந்தான்.
26.03.2000 நள்ளிரவு பளை ஆட்டிலறித் தளப்பகுதி பெரும் வெடிச்சத்தங்களினால் அதிர்ந்து கொண்டிருந்தது. ஆட்டிலறிகளும் எறிகணைகளும் வெடித்துச் சிதறி எரிவது அந்த ஆட்லறித்தளம் நிர்மூலமாகி விட்ட சேதியை எடுத்துரைத்துக் கொண்டிருந்தது.

வானளாவ பரவிக் கொண்டிருந்த தீச்சுவாலைகளின் பிரகாசம் கரும்புலிகளின் வீரத்தையும் தியாகத்தையும் வானத்தில் பிரதிபலிக்கும்படி செய்து கொண்டிருந்தன. அந்த வீரமிகு சாதனையை நிகழ்த்தி விட்டு காவியமாகினர் இரண்டு கருவேங்கைகள். கரும்புலி மேஜர் தனுசன், அவனோடு
கரும்புலி மேஜர் சுதாஜினி. 


தனுசன், அவன் சுமைமீது சுமை வந்தபோதும் சோராது நடந்தவன். தினம்தோறும் வானில் வீரவரலாறு எழுதி நெருப்பாற்றைக் கடந்தவன்.

இந்த வீரமறவர்களின் வரலாறு எம் இனத்தின் ஒவ்வொரு தலைமுறையும் படிக்க தவறோம் தேசத்தின் விடியலுக்காக தங்கள் இன்னுயிரை அர்ப்பணித்த எங்கள் மாவீர செல்வங்களுக்கும் இதே நாள் வீரச்சாவடைந்த ஏனைய மாவீரர்களுக்கும் எங்கள் வீரவணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம்.

தமிழீழம் கிடைக்கும் வரை உங்களை நிச்சயம் தொடர்வோம்.

Image Hosted by ImageShack.us

பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

Get this widget