thalaivan

thalaivan

வெள்ளி, 26 ஏப்ரல், 2013

புலிகளின் வீரத்தை உணரமுடிகிறதேயொழிய உற்றுப் பார்க்க முடியவில்லை...

2000 ம் ஆண்டு,ஏப்ரல் இதே மாதத்தில் புலிகள் ஒரு பாரிய போரியல் வெற்றியை ஈட்டி இருந்தார்கள்.2002 இல் வந்த சமாதான ஒப்பந்தத்துக்கு சிங்களத்தை இறங்கிவரப்பண்ணி இருந்த அந்த ஏப்ரல் 25 தொடக்கம் 28 வரையான 3 நாட்கள் போரில் சிங்களம் மனோரீதியாகவும், ஆளணி, படைவலு ரீதியாகவும் புலிகளிடம் பலமாக அடிவாங்கி இருந்தது.


ஆம்,அதுதான் லங்கா ராணுவம் வலிந்து புலிகளை அழிக்க முன்னெடுத்த பாரிய ராணுவ நடவடிக்கை 'அக்னி கீல'(தீச்சுவாலை)மூன்றுநாள் சமரின் முடிவில் பெரும் இழப்புக்களோடு சிங்களப்படை பின்வாங்கி ஓடியது. ஏராளம் ஆயுத தளபாடங்கள் புலிகளால் கைப்பற்றபட்டது. இந்த சமரில் அறுபது வீதம் பெண் புலிகளே பங்கு பற்றி எண்ணிப் பார்க்கவும் முடியாதபடி வீரச்சமர் புரிந்து மாவீரர்கள் ஆகினர்.

புலிகள் யாழ். குடாநாட்டின் கணிசமான பகுதிகளைக் கைப்பற்றி கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த காலம். சாவகச்சேரி, கைதடி அரியாலை என்று அவர்கள் கைப்பற்றி யாழ் நகர்ப்பகுதியிலிருந்து வெறும் 3 மைல் தொலைவில் நின்றிருந்த நேரம். அந்த நேரம் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த பகுதிகளை வரைபடத்தில் பார்த்தால், இந்தா யாழ்ப்பாணம் இன்னும் ரெண்டு நாளில விழுந்திடும் என்ற நிலை தான். அதை விட யாழின் எந்த மூலைக்கும் தமது எறிகணைகளைச் செலுத்தக்கூடிய நிலைக்கு புலிகள் வந்துவிட்டிருந்தார்கள்.

இந்த நிலையில் யாழ் இராணுவத்தை எப்படிக் காப்பாற்றுவது என்று தான் எல்லோருக்கும் கவலை. நாங்களும் எப்படா யாழ். கைப்பற்றப்படும் எண்டு பாத்துக்கொண்டு இருந்தம். ஆனா அப்பிடி இப்பிடியெண்டு இழுபட்டு கடைசியா புலிகளின் அணிகள் மீதே தாக்குதல் தொடங்கி விட்டது.

இந்த நிலையில் டிசெம்பர் 24 ஆம் திகதி 2000 ஆம் ஆண்டு புலிகளால் ஒரு தலைப் பட்சமான யுத்த நிறுத்தம் அறிவிக்கப்படுகிறது. ஆனால் அரசு அதை ஏற்காமல் தொடர்ச்சியாகத் தாக்குதல்களை நடத்தியது. புலிகளும் அப்பகுதிகளில் இருந்து இழப்புக்களுடன் பின்வாங்கி விட்டார்கள்.

அதன் பிறகும் ஆனையிறவு நோக்கி தை மாதம் நடுப்பகுதியில் ஓர் இராணுவ நகர்வு நடத்தப்பட்டு முகமாலையில் இப்போது காவலரண்கள் இருக்கும் இடம் வரை இராணுவத்தால் கைப்பற்றப்பட்டது. ஆனால் புலிகள் மாதா மாதம் யுத்த நிறுத்தத்தை நீடித்து அறிவித்துக்கொண்டே இருந்தார்கள். இந்த நிலையில் ஆனையிறவு நோக்கி பெரியளவில் ஒரு முன்னேற்ற முயற்சிக்கு இராணுவம் தன்னைத் தயார்ப்படுத்தியது. 4 மாதத் தொடர்ச்சியான யுத்த நிறுத்த அறிவிப்புக்குப் பின் ஏப்ரல் 24 உடன் தாம் யுத்த நிறுத்தத்தை முடித்துக் கொள்வதாகப் புலிகள் அறிவித்தார்கள். இந்த 4 மாத காலப்பகுதியிலும் புலிகள் நூற்றுக்கணக்கான போராளிகளை இழந்திருந்தார்கள்.

எல்லோரும் எதிர்பார்த்தது போலவே ஏப்ரல் 25 அதிகாலை ஆனையிறவு நோக்கி “அக்கினி கீல” அதாவது ‘தீச்சுவாலை’ என்ற பெயரில் அரச படை தனது நடவடிக்கையைத் தொடங்கியது. மிக ஆழமான திட்டம். ஏற்கெனவே வெற்றி உறுதி என்று தீர்மானிக்கப்பட்ட திட்டம். தென்னிலங்கைப் பத்திரிகையாளர்களை பலாலிக்குக் கூட்டி வந்திருந்தார்கள் தமது வெற்றியை உடனுக்குடன் அறிவிக்க. இராணுவ வல்லுநர்கள் பலர் கூடி ஆராய்ந்து தயாரித்த திட்டம். ஏறத்தாழ இருபதினாயிரம் இராணுவத்தினர் நேரடியாக ஈடுபடுத்தப்பட்ட நடவடிக்கை. 3 நாட்களில் ஆனையிறவைக் கைப்பற்றல் என்பதுதான் அத்திட்டத்தின் குறிக்கோள். நடவடிக்கை தொடங்கியதுமே கடுமையான சண்டை மூண்டது. சண்டை நடந்த பகுதி வெறும் 6 கி.மீற்றர் அகலத்தைக் கொண்ட முன்னணிக் காவலரண்பகுதி. அதற்குள்தான் அவ்வளவு சண்டையும். முதன்மையாக 3 முனைகளில் உடைத்துக்கொண்டு வந்த இராணுவத்தை எதிர்கொண்ட அந்தச்சண்டை முழுமையாக 3 நாள் நீடித்தது. காவலரணை இராணுவம கைப்பற்றுவதும் பிறகு அதைப் புலிகள் மீட்பதும் என்று மாறி மாறி நடந்தது. சில இடத்தில் புலிகளின் காவலரண்களைக் கைப்பற்றி 2 கி.மீற்றர் வரை கூட இராணுவம் முன்னேறியது. ஆனால் ஒரேநேரத்தில் அவர்களின் முழுக்காவலரணையும் படையினரால் கைப்பற்ற முடியாமற் போனது.

புலிகளின் பீரங்கிச்சூட்டு வலிமை அரசபடைக்கும் வெளியுலகுக்கும் – ஏன் தமிழ் மக்களுக்கும் கூட தெரிந்தது அச்சண்டையில்தான். 3 நாட் சண்டையிலும் களத்திற்கு அண்மித்த இராணுவக் கட்டளை நிலையங்களைச் செயலிழக்கச் செய்திருந்தது புலிகளின் பீரங்கியணி. சிறிலங்கா வான்படையின் அட்டகாசம் அந்த 3 நாட்களிலும் உச்சமாக இருந்தது. பகல் நேரத்தில், எந்தநேரமும் வானில் ஆகக்குறைந்தது 2 போர் விமானங்கள் வட்ட மிட்டபடி இருக்கும். அப்போது கட்டுநாயக்கா மீதான தாக்குதல் நடத்தப்படவில்லையாதலால் வான்படை வலிமை நன்றாகவே இருந்தது. விமானங்கள் மாறி மாறி வந்து குண்டுகளைப் பொழிந்த வண்ணமே இருந்தன. சண்டையணிகளை விட பின்தளங்களை நிர்மூலப்படுத்துவதே அவற்றின் நோக்கம். புலிகளின் பீரங்கித்தளங்களை இலக்கு வைத்துக் குண்டுகளைப் பொழிந்தன. முக்கியமாக வழங்கல் பாதைகளையும் வழங்கல் வாகனங்களையும் அழிப்பதில் ஈடுபட்டன. காயக்காரரை ஏற்றிச் செல்லும் வாகனங்களைத் தாக்கவென்றே ஆனையிறவு வெட்டையில் சுற்றிக்கொண்டிருந்தன.

இந்த நேரத்தில் பொதுமக்களின் பங்களிப்பு அளப்பரியது.வாகன சாரதிகளாயிருந்தவர்களில் கணிசமானவர்கள் பொது மக்கள் தான்.வாகனங்களென்றால் கண்காட்சிக்குக் கூட வைக்க முடியாதவை. இடையில் நின்று போனால் தள்ளித்தான் ஸ்டார்ட் பண்ண வேண்டும். அவற்றில் காயக்காரரையும் போராளிகளையும் ஏற்றி இறக்கியவர்கள். ஆனையிறவு வெட்டையில் விமானங்களின் கலைப்புக்களுக்கும் குண்டு வீச்சுக்களுக்கும் ஈடுகொடுத்து காரியத்தைச் சரியாக செய்து முடித்தவர்கள். இதற்கிடையில் வான்படை பிரதான பாதைகளைக் குண்டுபோட்டுத் தடை செய்வதென்று முடிவெடுத்தது. அது வீசிய குண்டுகளில் ஒன்று மட்டுமே சரியாகப் பாதையில் விழுந்து பாதையைப் பாவிக்க முடியாதபடி தடை செய்தது. எனினும் பொதுமக்களின் உதவியுடன் விரைவிலேயே அது சீரமைக்கப்பட்டு பழையபடி வழங்கல்கள் நடந்தன.

இராணுவமும் தன் படைகளை மாற்றி மாற்றிக் களத்திலிறக்கிப் பார்த்தது. அவர்களால் புதிதாக எதையும் செய்ய முடியவில்லை. புலிகள் விடுவதில்லையென்பதில் உறுதியாக இருந்தார்கள். பலாலியில் இருந்த பத்திரிகையாளர்களுக்கு இராணுவத்தால் தமது வெற்றியைக் காட்ட முடியவில்லை. மாறாக தமது இழப்புக்களையே காட்ட முடிந்தது. ஏராளமான உயிரிழப்புக்களைச் சந்தித்த இராணுவம் சோர்ந்து போனது. இந்த நேரத்தில் 3 நாட்கள் தொடர்ச்சியான பறப்புக்களால் விமானப் படையும் செயற்பட முடியா நிலைக்கு வந்துவிட்டது. இந்த 3 நாட்களிலும் ஆகக் குறைந்தது 80 சோடிப் பறப்புக்களை வான்படை மேற்கொண்டிருந்தது. ஒவ்வொரு முறையும் ஆகக் குறைந்தது 250 கி.கி. கொண்ட 6 குண்டுகள் வீசப்பட்டால்…. இத்தோடு காயக்காரரைச் சமாளிப்பதில் பெரும் பிரச்சனையேற்பட்டது. அந்த நேரத்தில் கொழும்பில் இரத்ததான அறிவித்தல்களைக் கேட்டவர்களுக்குத் தெரிந்திருக்கும்.

3 நாள் முழுமையான சண்டையின் பின் இராணுவம் விட்டுவிட்டு ஓடிவிட்டது. இந்த முறியடிப்புக்கு புலிகளின் கண்ணிவெடிகள் முக்கிய காரணம். அதை அரச படைத்தளபதிகளே சிலாகித்துச் சொல்லியிருந்தனர். இராணுவம் பின்வாங்கிய பின் அந்த இடத்திற்குச் சென்று பாரத்தேன்.பூரணமாக இராணுவ உடல்கள் அகற்றப்படாத நிலையில் பாரத்தேன். அனுமதியில்லா விட்டாலும் எப்படியோ எல்லைப் படை என்ற பெயரில் போய்ப் பார்த்தேன். மறக்க முடியாத அனுபவம். அதுவும் லெப்.கேணல். சுதந்திரா என்ற பெண் தளபதியின் காப்பரணும் அதனைச் சூழக்கிடந்த ஏறத்தாழ இருபது இராணுவ உடல்களும். தாம் முற்று முழுதாகச் சுற்றி வளைக்கப்பட்டோம் என்று அறிந்தும் நிதானமாக, தீரமாகப் போரிட்டு இறுதியில் வீரச்சாவடைந்த அப்பெண்போராளிகளின் நெஞ்சுரம் என்னை வியக்க வைத்தது. பின்னொரு நாள் தளபதி கேணல் பால்ராஜ் சொன்னார்: அந்தச் சமரின் போது களத்தில் நின்றவர்கள் அறுபது வீதத்துக்கும் மேற்பட்டோர் பெண் போராளிகளே. அவர்களின் பங்களிப்பு மிகமிக முக்கியமானது.

அச் சமர்தான் புலிகளை இனி யுத்தத்தில் தோற்கடிக்க முடியாதென்பதை அரசுக்கும் குறிப்பாக வெளியுலகுக்கும் உணர்த்தியது. பின்னாளில் ஏற்படுத்தப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு முதன்மையான காரணமாக அமைந்தவை இரு தாக்குதல்கள். ஒன்று தீச்சுவாலை எதிர்ப்புச் சமர், மற்றயது கட்டுநாயக்கா விமானப்படைத்தள அழிப்புத் தாக்குதல்.























பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

செவ்வாய், 9 ஏப்ரல், 2013

கடற்புறா அமைப்பு எப்படி கடற்புலிகளாக மாறியது என்பது பற்றிய விளக்கம்.


ஆரம்பத்தில் கடற்புலிகள் அமைப்பை தேசிய தலைவர்கள் ஆரம்பித்த போது, அது ஒரு பலமிக்க அமைப்பாக இருக்கவில்லை. அந்த காலகட்டத்தில் புலிகளின் கடற்படை கடற்புலிகள் எனும் பெயரோடு அழைக்கப்படவில்லை. ஆரம்பத்தில் "கடற்புறா" எனும் பெயருடனேயே கடலில் போராளிகள் தமது நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.


அந்த காலகட்டத்தில் கடற்புறா அமைப்பின் பணி என்பது, எதிரிகளோடு போரிடுவது அல்ல, அந்த அளவுக்கு கடற்புறா பலமிக்க ஒரு அமைப்பாகவும் இருக்கவில்லை. அவர்களின் பணி, தமிழ்நாட்டில் புலிகளின் பயிற்சிப் பாசறைகள் இருந்த போது, ஈழத்தில் இருந்து போராளிகளை பயிற்சிக்காக தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைப்பதும், பின்னர் அங்கிருந்து அவர்களை மீள அழைத்து வருதல், புலிகளுக்கு தேவையான பெட்ரோல் போன்ற பொருள்களை ஈழத்துக்கு எடுத்து வருதல் என்று, மட்டுப்படுத்தப் பட்ட அளவிலேயே கடற்புறாவின் பணிகள் இருந்து வந்தன.

இந்த சூழ்நிலையில் தான் இந்திய அமைதிப்படை எனும் பெயரில், இந்திய அரக்கபடை ஈழத்தில் காலடி எடுத்து வைத்தது, புலிகளும் வேறு வழியின்றி இந்திய இராணுவத்தினருடன் போராட முடிவு எடுத்தனர். போராடினர்.

ஆசியாவின் பலமிக்க இராணுவமான இந்திய இராணுவம் ஒரு சிறிய போராட்ட அமைப்பான புலிகளை வெகு சுலபமாக தாக்கி அழித்து விடுவார்கள் என்றே அனைவரும் நம்பினர்.

ஆனால் என்ன நடந்தது என்பது இன்று வரைக்கும் வரலாற்று சாட்சியாய் உள்ளது. புலிகளை அழிக்க வந்தவர்கள், புலிகளின் முன்னாள் எலிகளைப்போல் தோற்றுப்போய் தோல்வியுடன் நாடு திரும்பினர்.

இந்த காலகட்டத்தில் சாதாரண அமைப்பாக இருந்து வந்த கடற்புறா அமைப்பு பலமிக்க ஒரு மாபெரும் படையாக வளர்ச்சி அடைந்து, தமிழீழ கடற்படை எனும் பெயரோடு, ஒரு பலமிக்க கடற்படையாக உருவெடுத்து.

இந்திய இராணுவம் திரும்பி சென்ற பின்னர், ஒரு ஊடகவியாளர் சந்திப்பில், தேசிய தலைவர் அவர்களிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது, "இந்திய அமைதிப்படை ஈழத்திற்கு வந்த போது இருந்த கடற்புறா அமைப்புக்கும், இந்திய அமைதிப்படை திரும்பி சென்ற சூழ்நிலையில் இருந்த கடற்புலிகள் அமைப்புக்கும் என்ன வித்தியாசம்?" என்பதே அந்த கேள்வி.

அதற்கு தேசிய தலைவர் அவர்கள் இப்படி பதில் கூறினார். இந்திய இராணுவம் ஈழத்திற்கு வரும் முன்னர் கடலில் போராளிகள் தமது வேகத்தை அதிகரிக்க வேண்டி இருந்த்தது. அது ஏனென்றால், எம்மை தாக்க வரும் எதிரிகளில் இருந்த தப்பிப்பதற்காக, இந்திய இராணுவம் திரும்பி சென்ற பின்னரும் கடலில் போராளிகள் தமது வேகத்தை அதிகரிக்க வேண்டி இருந்தது அது ஏனெனில், போராளிகளை கண்டு தப்பி செல்லும் எதிரிகளை துரத்திப் பிடிப்பதற்காக... 

ஆம், இதுதான் புலிகள், வேதனைகளையும், சோதனைகளையும் சாதனைகளாக மாற்றும் வித்தைதான் தலைவன் எமக்கு கற்றுக் கொடுத்த பாடம்.

அன்று, இந்திய இராணுவம் வந்து புலிகளுக்கு ஒரு நெருக்கடியை கொடுத்தான் காரணமாகதான், கடற்புறா அமைப்பு இன்று கடற்புலிகளாக மாபெரும் வளர்ச்சி அடைந்தது. இல்லையேல் இறுதிவரைக்கும் கடற்புறா அமைப்பாகவே இருந்து இருக்கும். அந்த சோதனையான காலகட்டத்தை தான் தலைவர் அவர்கள் சாதனையாக மாற்றி புது வரலாறு ஒன்றை எழுதினார்.

அந்த வரலாற்றை மீண்டும் ஒருமுறை புதுப்பிக்கும் காலம் வந்து இருக்கின்றது. இன்று இருக்கும் சோதனைகளையும் வேதனைகளையும் மாற்றி தமிழீழம் என்ற சாதனையாக மாற்ற தேசியத் தலைவர் அவர்களுக்கு தோள் கொடுப்போம் என்று உறுதி எடுப்போம்.....

"தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்"

பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

புதன், 3 ஏப்ரல், 2013

பதினெட்டு வயதில் ஒரு அரசாங்க படையையே எதிர்த்து போரிட்ட தமிழன்.

அந்த இளைஞன் ஒரு அரசாங்கத்தை எதிர்த்துப் போராடலாம் என்று முடிவெடுத்த போது அந்த இளைஞனின் வயது வெறும் பதினெட்டு தான். தான் எதிர்க்கப்போவது ஒரு தனி மனிதனையோ அல்லது சிறிய குழுக்களையோ அல்ல, தான் எதிர்க்கபோவது ஒரு நாட்டின் இராணுவத்தை என்று நன்றாக உணர்ந்திருந்த அந்த இளைஞன் அதற்காக வைத்திருந்த ஒரே ஒரு ஆயுதம் ஒரு பழைய துருப்பிடித்த கைத்துப்பாக்கி மட்டுமே.

ஒரு பழைய துருப்பிடித்த கைத்துப்பாக்கியை மட்டுமே ஆரம்பத்தில் வைத்துக் கொண்டு, ஒரு நாட்டின் இராணுவத்தை எதிர்க்க துணியும் தைரியம் அந்த இளைஞனை தவிர வேறு யாருக்கும் வந்து இருக்காது.

அன்று அந்தப் பழைய துப்பாக்கியை மட்டுமே வைத்துக் கொண்டு, இரண்டு மூன்று நண்பர்களுடன் மட்டுமே தனது போராட்டத்தை ஆரம்பித்த அந்த இளைஞன், அன்றிலிருந்து சரியாக முப்பது வருடங்களின் பிறகு, தரைப்படை, கடற்படை, வான்படை என முப்படைகளையும் கொண்டு, முப்படைகளையும் கொண்ட ஒரு மரபு ரீதியான இராணுவமாக தனது படை பலத்தை யாருமே கற்பனை செய்து கூட பார்த்திராத அளவுக்கு மாற்றி காட்டினான்.

அன்று இலங்கை என்ற ஒன்றே ஒரு நாட்டிற்கு எதிராக போராட்டத்தை ஆரம்பித்த அந்த இளைஞன், அதன் பிறகு வந்த முப்பது வருடங்களில், நேரடியாக பதினாறுக்கும் மேலான நாடுகளையும், மறைமுகமாக முப்பதுக்கும் மேற்பட்ட நாடுகளையும் தனித்து எதிர்கொண்டு, யாருக்கும் தலை வணங்காது, யாருக்கும் அடிபணியாது வீரத்துடன் போராடி, வரலாற்றின் பக்கத்தில் தனது பெயரை ஆழமாக பதிவு செய்து கொண்டான்.

நாம் கதைகளில் மட்டுமே படித்த மாவீரர்களின் வீரத்தினை நமது கண் முன்னால், நிகழ்த்தி காட்டி இன்னும் ஆயிரம் வருடங்கள் கடந்தாலும் அழிக்க முடியாத வரலாறாக மாறி விட்ட அந்த வீரன் வேறு யாரும் இல்லை. தமிழர்களின் தலைவன். தமிழீழத்தின் புதல்வன், மேதகு வே. பிரபாகரன் அவர்கள்.




-ஈழமைந்தன்-

பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

Get this widget