thalaivan

thalaivan

திங்கள், 28 பிப்ரவரி, 2011

ஸ்ரீலங்கா அரசின் மற்றும் ஓர் போர்க்குற்றம் சம்மந்தமான ஆதாரம் ஒன்று வெளியாகி இருக்கின்றது.

வன்னியில் இறுதிக்கட்ட போரின் போது ஸ்ரீலங்கா இராணுவத்திடம் சரணடைந்த போராளிகளை கொலை செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் தினம் தினம் வெளியாகிய வண்ணம் உள்ளன. இப்பொழுதும் புதிய புகைப்பட ஆதாரம் ஒன்று வெளியாகி இருக்கின்றது. 
 இந்த புகைப்படத்தில் ஒரு சில போராளிகளை இராணுவம் சுட்டு வாகனத்தில் போட்டு இருக்கின்றது.
ஒரு சில போராளிகள் இராணுவத்தினரால் வீசப்பட்ட எரி குண்டுகளால் வீர்சாவடைந்து இருக்கிறார்கள்.
 தற்பொழுது இந்த புகைப்படங்கள் அதிர்வு இணையத்தளம் வெளியிட்டு இருக்கின்றது.





வரலாறு படைத்த எம்மின தலைவன் பிரபாகரன்.

 மறப்பேனோவேலுப்பிள்ளை பிரபாகரன் தந்த பதிலை? 2002-ம் ஆண்டு நேர்காணலில் நான் கேட்ட 62-வது கேள்வி அது. ""உங்களுக்கு கடும் கோபம் வர வேண்டுமென்றால் நான் என்ன செய்ய வேண்டும்?'' அதற்கு அனிச்சை செயல் வேகத்தோடு அவரிடமிருந்து வந்த பதில்: ""என் தமிழ் இனத்தின் எதிரியாக இருந்து பாருங்கள். அப்ப தெரியும் என்ட கோபம்!''

வலியது வாழும். நியாயம், நீதி, உணர்வுகள், ஒழுக்கம், விழுமியங்கள் எவை பற்றியும் அதிகம் அலட்டிக் கொள்ளாத இயற்கையின் நியதி இது. ஆம், வலியது வாழும். போரின் கொடுமையோ அதனிலும் பெரிது. வெற்றி பெற்றவன் அனைத்தையும் எடுத்துக் கொள்வான், வரலாறு உட்பட. தோற்றுப் போனவன் தலைகுனிந்து குறுகி நிற்க வேண்டும். வேலுப்பிள்ளை பிரபாகரனும், தமிழீழ விடுதலைப்புலிகளும் விட்ட பிழைகளையும், செய்த தவறுகளையும்தான் இனி பலரும் அதிகமாகப் பேசப்புறப்படுவார்கள்.

தமிழீழ விடுதலைப் புலிகள் தவறிழைக்காத தேவ தூதர்கள் இல்லைதான். அவர்கள் செய்த குற்றங்களை, குற்றமென்று உரைக்கும் ஒழுக்க நிலை நமக்கு இருந்தால் மட்டுமே அவர்கள் முன்னெடுத்த விடுதலைப் போராட்டத்தை போற்றி, தொடர்ந்து அப்போராட்டத்தின் அரசியல் இலக்குகளை அம்மக்களுக்கு உறுதி செய்யும் செயற்பாடுகளை நாம் மேற்கொள்ள முடியும்.

மாற்றுக் கருத்துடைய பலரை அரசியல் களத்திலிருந்து அகற்றியது, உலக அளவிலான அரசியல் தலைமைத் துவங்களை உருவாக்காதது, "போர் வெற்றி' தொடர்பான மிகைப்படுத்தப்பட்ட நம்பிக்கைகளை மக்களிடையே உருவாக்கி தங்களை மக்களின் "பந்தயக் குதிரைகளாக' நிறுத்தி -மக்களை அரசியல்மயப்படுத்த தவறியது, ராஜீவ்காந்தி படுகொலையில் சம்பந்தப்பட்டது -அல்லது சம்பந்தப்படவில்லை யென்றால் அதனை சரிவர விளக்காதது... என தமிழீழ விடுதலைப்புலிகள் விட்ட பிழைகள் பல உண்டு.

எனினும் தமிழீழ விடுதலைப்புலிகள் இல்லாத தமிழ் வரலாறும், அவர்தம் வரலாற்றோடு தொடர்பற்ற தமிழர் எதிர்கால எழுச்சியும் இல்லை என்பதே நிதர்சனம். தமிழர் வரலாற்றின் அகற்றமுடியா ஆதர்சமாகவும் வரலாற்றுப் பிரமாண்டமாகவும் வேலுப்பிள்ளை பிரபாகரன் நிலைபெற்று விட்டார் என்பதுதான் உண்மை. எனவேதான் அவரைப் பற்றின சரியான புரிதல் தமிழ் நாட்டுத் தமிழர்களாகிய நமக்கும் முக்கியமானதாகிறது. தமிழர்களாகிய நமது எதிர்கால எழுச்சிக்கும் அது முக்கியம்.

உலகின் ஒரு மூலையில் மிகச்சிறியதோர் தமிழ்க் கூட்டத்திலிருந்து முன்னுதாரணமான தோர் விடுதலைப் போராட்டத்தை கட்டி யெழுப்பியவர் வேலுப்பிள்ளை பிரபாகரன். அந்தப் போராட்டம் நமது இனத்தில் பிறந்த தென்பது, உணர்வுகளைத் தவிர வேறெதுவும் பெரிதாகப் பங்களிக்காத நமக்கும் பெருமையே.

நாற்புறமும் நீர்சூழ்ந்த சிறியதோர் நிலப்பரப்பில், இலங்கையோடு சுற்றியிருக்கும் பெரிய நாடுகளான இந்தியா, பாகிஸ்தான், சீனா நாடுகளினது நெருக்குவாரங்களுக்கு ஈடுகொடுத்து, மரபுவழித் தாக்குதல் படை யணிகள், சிறப்புப் படை பிரிவுகள், பீரங்கிப் பிரிவு, கடற்படை, உலக உளவு அமைப்புகள் மெச்சும் மிகத்திறன் கொண்ட புலனாய்வுத் துறை, 70-க்கும் மேலான கப்பல்களை கொண்ட அனைத்துலக ஆயுத கொள்வனவுப் பிரிவு, அரை உரிமை கொண்ட ஒரு செயற்கைக்கோள் -இவற்றிற்கெல்லாம் மகுடம் வைத்தாற்போல் 2002-முதல் ஓர் அரசுக்கு இருக்க வேண்டிய துறைசார் அலகுகளுடன் கூடியதோர் நடை முறை அரசை உருவாக்கி பல உலக நாடுகளை விடவும் நேர்த்தியான முறையில் அதனை நிர்வகிக்கும் திறனும், கண்ணியமும், ஒழுக்கமும் கொண்ட நிர்வாக ஏற்பாட்டையும் உருவாக்கி சாதனை செய்தவர் வேலுப்பிள்ளை பிரபாகரன். உலகெங்கும் யூதர்கள் இருந்தாலும் இஸ்ரேல் அவர்களது உரிமை பூமியாய் இருப்பதுபோல் உலகெங்குமுள்ள எட்டு கோடித் தமிழர்கள் தம் இனத்திற்கும் ஒரு நாடு இருக்கிறது என்று பெருமையுடன் பேசும் நிலைக்கு வெகு அருகில் தமிழினத்தை கொண்டு வந்தவர் அவர்.



அவற்றிற்கெல்லாம் மேலாய் இயல்பாகவே தாழ்வு மனப்பான்மை, இலக்கு நோக்கிய விடாப் பிடியான உறுதியின்மை, அதிகாரவர்க்கத்தை கண்டு அஞ்சுதல் போன்ற குணாதியங்களைக் கொண்ட தமிழ் இனத்தினது மனவெளியில் கண்ணுக்குப் புலப்படாத போராட்டமொன்று நடத்தி, நம்பிக்கை ஊட்டி, துணிவுடன் நிமிர வைத்து, பிறர் வாழ தம் உயிரை மனமுவந்து ஈகம் செய்யும் தலைமுறை ஒன்றினை புடமிட்டு, நானும் பிறந்து பாக்கியம் பெற்ற இத்தமிழினத்தின் சிந்தனை இயக்கத்தையும் போக்கையும் மாற்றியமைத்ததுதான் வேலுப்பிள்ளை பிரபாகரன் படைத்த உண்மையான வரலாறு.

முல்லைத்தீவில் பல்லாயிரம் போராளிகளையும், பலநூறு கோடி ரூபாய் பெறுமதியுடைய ஆயுதங்களை யும் முற்றாக இழந்து ராணுவரீதியாய் நிர்மூலமாகி விட்டாலும்கூட -வேலுப்பிள்ளை பிரபாகரன் படைத்த இந்த மகத்தான வரலாற்றையும், கால் நூற்றாண்டிற்கு முன் தமிழர்கள் கற்பனைகூட செய்து பார்த்திராத அரசியல் உச்சநிலைக்கு தமிழினத்தை அவர் அழைத்து வந்துவிட்டதையும் தமிழர்களாகிய நாம் ஒவ்வொருவரும் உணர வேண்டும். ராஜீவ்காந்தி படுகொலையில் அவர் குற்றவாளியென்றால் அவ்வாறே இருக்கட்டும். தீர்ப்பு எழுதப்படட்டும், தண்டனையும் தரப்படட்டும். அதேவேளை சில குற்றங்களையும், சில தவறுகளையும் கடந்து அவர் படைத்த இவ்வரலாற்றினை பெருமையுடன் சுவீகரித்துக் கொள்ளும் உரிமை தமிழராகிய நமக்கு இல்லையென்று சொல்ல எந்த அரசுக்கும், அதிகார அமைப்புக்கும் உரிமையில்லை.

தனிப்பட்ட மனிதனாகவும், தன் வாழ்விலும் ஒரு இனத்தின் மாபெரும் நாயகனாகப் போற்றப்படும் இயல்புகள், ஒழுக்கங்கள் கொண்டிருந்தார் அவர் என்பதும் முக்கியமானது. ""தலையை குனியும் நிலையில் இங்கே புலிகள் இல்லையடா, எவனும் விலைகள் பேசும் நிலையில் எங்கள் தலைவன் இல்லையடா'' என அவர்கள் பாடும் பாடல் மிகவும் தகுதி யானதே. ""உலகத் தமிழ் மக்கள் உங்களை தேசியத் தலைவர் எனப் போற்றுகிறார்கள். இத்தகுதியை நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்?'' என்று 2002-ல் நான் கேட்ட கேள்விக்கு அவர் தந்த பதில் இவரைப் போலொரு நேர்மையான தலைவரை நாமறிந்த தமிழர் வரலாறு பெற்றிருக்கவில்லை என்ற உணர்வினை அன்றே என்னுள் உருவாக்கியது. 


இதோ அவர் சொன்ன அதே வார்த்தைகள்: ""என்னை நானே மிகைப்படுத்திக்கொள்ளும் எண்ணம் எனக்குக் குறைவு. இப்படி தகுதியையெல்லாம் அடைய வேண்டு மென நான் உழைத்ததை விட என் இனத்திற்கான கடமையை செய்ய வேண்டும், எனது மக்களின் விடுதலைக்காக நான் அர்ப்பணிப்போடு போராட வேண்டும் என்ற எண்ணம்தான் மேலோங்கியிருந்தது. கடமை உணர்வுதான் எனக்கு அதிகம். அதற்கு அப்பால் என்னை நானே பெரிதாக சிந்திக்கிற பழக்கம் எனக்கு இல்லை. என்னோடு கூட நிற்கும் தளபதியர், போராளிகள், அவர்களோடு போராட்ட சவால்களுக்கெல்லாம் ஈடுகொடுக்கும் எமது மக்கள் -எல்லோராலும்தான் போராட்ட சாதனைகள் உருவாக்கப்படுகின்றன''.

தொடர்ந்து நான் கேட்டேன், ""தமிழ் மக்கள் உங்களை அசாதாரணமான ஆற்றல்கள் கொண்ட ஒருவராகப் பார்க்கிறார்களே?'' -இக்கேள்விக்கு அவர் தந்த பதில் எனது வாழ்வில் பெற்ற நேர்காணல் பதில்களிலெல்லாம் அற்புதமானது. ""எல்லோரையும்போல் நானும் ஒரு சாதாரண மனிதன்தான். ஆனால் தமிழ் மக்களுக்கு ஒரு பலவீனம் உண்டு. ஒருவருக்கு பெரிய உருவம் கொடுத்து, தெய்வம் போன்ற மாயையை அவரைச் சுற்றி உருவாக்கி, எல்லா பொறுப்பையும் அவர் மீது போட்டு, தங்கள் கடமை முடிந்ததென்று ஒதுங்கிக் கொள்வார்கள். தமிழனாகப் பிறந்த ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய கடமைகளை நானும் செய்திருக்கிறேன். ஒவ்வொரு தமிழரும் தமிழரென்ற வகையில் தாம் செய்யவேண்டிய கடமைகளை செய்தார்களென்றால் என்னை சுற்றின இந்த பிரம்மாண்டம் இருக்காது. நான் தலைவராகவே உங்களுக்குத் தெரியமாட்டேன்''. என்னே தெளிவு. என்னே நேர்மை! என்னே தன்னம்பிக்கை!

முல்லைத்தீவு பேரழிவிலிருந்து தங்களையும் விடுதலைப் போராட்டத்தையும் தற்காத்துக்கொள்ள ஒரே ஒரு வாய்ப்பு தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு இருந்தது. கடந்த ஜனவரி 24 அன்று வன்னிப்பரப்பிலுள்ள கல்மடு குளத்தை புலிகள் உடைத்துவிட நூற்றுக்கணக்கான ராணுவத்தினர் பலியான செய்தியை நக்கீரன் வாசகர்கள் அறிந்திருப்பீர்கள். கல்மடு குளத்தைவிட பன்மடங்கு பெரியது இரனைமடு ஏரி. இரனைமடு ஏரியை உடைத்திருந்தால் ஊழிப்பெருக்குபோல் பெருவெள்ளம் புறப்பட்டு வன்னிப் பரப்பு முழுதையும் விழுங்கி பூநகரி வரையுள்ள மரம், செடி, உயிர் அனைத்தையும் அழித்துத் தீர்த்திருக்கும். மிகக் குறைந்தபட்சம் 40,000 சிங்கள ராணுவத் தினர் செத்து மிதந்திருப்பர். அவர்தம் பல்லாயிரம் கோடி பெறுமதியுடைய ஆயுதங்கள், ராணுவ கட்டுமானங்களும் புதையுண்டு போயிருக்கும். இந்த மரண அடியிலிருந்து அடுத்த பத்து ஆண்டு களுக்கு சிங்கள ராணுவம் எழும்பியிருக் காது.


ராஜபக்சே சகோதரர்களின் அரசியலும் முடிந்திருக்கும். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க தளபதிகள் இறுதி அஸ்திரமாக இரனைமடு ஏரியை உடைக்கும் ஆலோசனையை முன்வைத்தபோது யோசனைகளுக்கு இடம் கொடுக்காமலேயே பிரபாகரன் சொன்னாராம், ""நீங்க சொல்றது சரிதான். இரனை மடுவெ உடைச்சா சிங்கள ஆர்மிகாரனுக்கு மரண அடி கொடுக்கலாம். ஆனால் வன்னியின்றெ பொருளாதாரமும் அதோட போகும். அடுத்த நூறு ஆண்டுக்கு அந்த மண்வளத்தையும் விவசாய பொருளாதாரத்தையும் ஒருத்தராலயும் மீட்டெடுக்க முடியாது.

நம் வன்னி சனம் எத்தனையோ கஷ்டங்கள்பட்டு விடுதலைப்போராட்டத் தோடு நிக்கிறாங்கள். அந்த சனத்துக்கு நாம் இப்படியொரு துரோகம் செய்ய ஏலாது.'' பேரழிவு நெருங்கிவந்த பொழுதில்கூட தனது மக்களின் வாழ்வுக்கான ஆதார வளங்களை அழித்து தன்னையும் இயக்கத்தையும் பாதுகாக்க மறுத்த இந்த மாமனிதனா பயங்கரவாதி? ஐயப்படும் அன்பர்களுக்கும், ஆங்கில ஊடகத்து அந்நியர்களுக்கும் இவற்றையெல் லாம் எடுத்துரையுங்கள். அவர்கள் வனைவு செய்த பயங்கரவாத வர்ணஜாலங்களுக்கு அப்பால் இதயம் கொண்டதொரு மனி தன் பிரபாகரன் என்பதை உரத்துச் சொல்லுங்கள்.


Image Hosted by ImageShack.us

ஞாயிறு, 27 பிப்ரவரி, 2011

புலியை வளர்த்த குயில் விண்ணுலகம் சென்றுவிட்டது சிறப்புக்கட்டுரை.

பார்வதி... பார்வதிப் பிள்ளை... பார்வதி அம்மா... அண்ணையின் அம்மா... அன்னை... இப்படி ஒன்றுக்கு மேற்பட்ட அடைமொழி களால் அழைக்கப்பட்ட தமிழ் ஈழத் தாய் எங்களைவிட்டுச் சென்றுவிட்டார். இவரது பிள்ளைகளில் ஒருவரான, தலைவர் பிரபாகரனின் தாயார் என்ற அறிமுகமே உலகம் முழுக்க இந்த வயதான பெண்ணை அடையாளம் காட்டுகிறது!

2009ஆம் ஆண்டு வைகாசி மாதம் 16ஆம் நாள் வட்டுவாகல் பாலத்தை வேலுப்பிள்ளையும் பார்வதி அம்மாவும் கடந்தார்கள்.

மெனிக்பாம் முகாமில் கண்ணீரும் கம்பலையுமாக நின்ற எம் மக் களைப் பார்த்து, ‘பிரபாகரனின் தந்தை நான்’ என்று வெண்கலக் குரலில் வேலுப்பிள்ளை சொன்னார். ‘நான் தான் அவர் அன்னை’ என்று மெல் லிய குரலால் சொன்னார் பார்வதி. பரபரத்த இராணுவம், அவர்கள் இரு வரையும் பனாகொடைக்கே கொண்டு போய் ஏழு மாதங்கள் வைத்திருந்தது. எப்படி எல்லாம் அன்னையும் தந்தையும் துன்பம் அனுபவித்தனர் என்பதை அவர்கள் இருவர் மட்டுமே அறிவார்கள். அந்த சோகம்கூடச் சொல்ல முடியாமல் வேலுப்பிள்ளை மரணித் தார். அடுத்ததாக, இதோ அம்மாவும் சென்றுவிட்டார்.

வல்வெட்டித்துறை வல்லிபுரம் சின்னம்மா தம்பதியினரின் மகள், இந்தப் பார்வதி. சின்ன வயதில் இவரைக் ‘குயில்’ என்றுதான் கூப்பிடுவார்கள். 16 வயதில் வல்வெட்டித்துறை திரு மேனியார் குடும்பத்தைச் சேர்ந்த திருவேங்கடம் வேலுப்பிள்ளையைத் திருமணம் செய்துகொண்டார். மூத்த மகன் மனோகரன், அடுத்த மகள் ஜெகதீஸ்வரி, இளைய மகள் விநோதினி ஆகிய மூவரையும் பெற்ற இந்தத் தம்பதியினர் அனுராதபுரம் புத்தளம் வீதியில் குடியிருந்தார்கள். அந்த வீட்டுக்குப் பக்கத்தில்தான் எல்லாளன் நினைவுத் தூவி இருக்கும். தூபியைச் சுற்றிய புல்வெளியில் ஐந்து வயதான மனோகர னும் நான்கு வயதான ஜெகதீஸ்வரி யும் ஓடியாடி விளையாட, கைக்குழந் தையான விநோதினி அம்மா மடியில் தவழ்ந்துகொண்டு இருப்பார். எல்லா மாலை நேரங்களும் அவர்களுக்கு அப்படித்தான் கழியும். இந்த வேளையில் தான் புதிய கரு உண்டானது. ஈழத்தை ஆண்டதால் ஈழாளன் என்றும், அதுவே காலப்போக்கில் எல்லாளன் என்று மருவியதாகச் சொல்வார்கள்.

அந்த ஈழாளனின் வீரக் கதையை மற்ற பிள்ளைகளுக்கு பார்வதித் தாய் சொல்ல... கருவில் இருந்த குழந்தையும் கேட்டது. அந்தக் கரு... பிரபாகரனாக வளர எரு போட்டது பார்வதித் தாய்! பார்வதிக்கு நெருக்கமான பெண்களில் ஒருவர் ராசம்மா. இனவாதக் கொடுமைகளை நேரடியாக அனுபவித்தவர் இந்த ராசம்மா என்ற ஆசிரியை. இவரது கணவரான ஆசிரியர் செல்லத்துரை, சுட்டுக் கொல்லப்பட்டார். கணவனை இழந்ததால் தான் பட்ட துன்பங்களையும் இதே மாதிரி தமிழர்கள் அனுபவிக்கும் தொல்லைகளையும் பார்வதியிடம் ராசம்மா சொல்ல... அதை சிறுவனாக இருந்த பிரபாகரன் காது கொடுத்துக் கேட்பார். பத்திரிகையாளர் அனிதா பிரதாப்புக்கு வழங் கிய பேட்டியில் பிரபாகரனே இந்த சம்பவத்தைக் குறிப்பிட்டு தன்னுடைய வாழ்க்கைப் பாதையைத் திருப்பிய சம்பவமாக இதையே குறிப்பிட்டார்.

வேலுப்பிள்ளையும் பார்வதியும் வல்வெட்டித்துறை ஆலடிப் பகுதியில் குடியிருந்தார்கள். அந்த வீட்டைத்தான் ராணுவம் இப்போது இடித்து நொறுக்கியது. இந்த வீட்டுக்கு இவர்கள் குடி வந்தபோது, ஏதும் அறியாத சிறுவன் தான் பிரபாகரன். ஆனால், 14 வயதில் அவரது நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டதை முதலில் கண்டுபிடித்தது பார்வதியே. சிறுசிறு போத்தல்களை எடுத்து வருவதும், பால்பேணிகளைக் கொண்டுவந்து காயவைப்பதும், பின்னர் அதை எடுத்துச் செல்வதை யும் பார்வதி பார்த்தார். சின்னச்சோதி, நடேசுதாசன் ஆகிய நண்பர்கள் வந்து போவதும், பிரபாகரனைவிட மூத்த குட்டி மணியின் நட்பும் அன்னையை யோசிக்கவைத்தது. மகனின் கையில் இருந்த மோதிரமும் வீட்டில் இருந்த காப்பும் காணாமல் போய் இருந்தது. மகனின் போக்கு பற்றி மெதுவாகச் சொன்னார் பார்வதி. “நாலு மொட்டை யர்களுடன் இணைந்து உன்னால் என்ன செய்ய முடியும்?” என்று வேலுப் பிள்ளை கேட்டார்.

“நாலு மொட்டை நாளைக்கு நாற்பது மொட்டை ஆகும். அது நானூறு மொட்டை ஆகும்” என்று சொல்லி விட்டுப் போன பிரபாகரனை இரு வரும் அவரது வழியில் விட்டுவிட்டார்கள். அதன் பிறகு வந்த பொலிஸ் நெருக்கடிகள் அனைத்தையும் மனதார ஏற்றுக்கொண்டார் பார்வதி. 1975 இல் தொடங்கி 2010 வரை ஒரு நிமிடம் கூட மனதால் வருந்தியிருக்கவே மாட்டார். மாறாக, பெருமையாகக் கழித்தார். 2000ஆம் ஆண்டில் பார்வதியின் கால்கள் பாரிசவாதம் காரணமாக நகர மறுத்தன.

இலங்கையிலும் சமாதானப் பேச்சுக்கள் தொடங்கிய தால் மகனுடன் இருக்கவே நினைத்தார் பார்வதி. 2003 இல் தாயகம் வந்தார்கள் இருவரும். சில வருடங்களில் சர்வதேச சமூகத்தின் சூழ்ச்சி வலையில் சின்னஞ்சிறு தமிழர் தேசம் சிக்கிக் கொண்டது. மக்களைப் பிரியா மன்னவனும்... மண்ணைப் பிரியா அன்னை அவளும் இருக்க... சொற்களால் சொல்ல முடியாத சோகம் அது! புலியை வளர்த்த குயில் பறந்து விட் டது. குயில் பாட்டும் புலிச் சீற்றமும் கேட்டுக்கொண்டே இருக்கும்!

நன்றி வலம்புரி

Image Hosted by ImageShack.us

பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

சனி, 26 பிப்ரவரி, 2011

ஈழத்தில்...


தந்தை இறந்தான் - தாய்
வாழ்வின்றி அழுதாள்!


தாய் இறந்தாள் - தங்கை
பாலின்றி அழுதாள்!

ஆனால்...
தாய் சுமந்த தங்கை-அன்பு
அண்ணன் மடியில்.

தன்...
தந்தை சுமந்த துப்பாக்கி-அந்த
அண்ணன் பிடியில்....

அண்ணன் 
இன்பத்திலும், துன்பத்திலும்,..


Image Hosted by ImageShack.us


பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

வெள்ளி, 25 பிப்ரவரி, 2011

ஈழப் போர்


நிலம் பிடித்தேன் என்பாய் தினமும் - எமது

பலம் ஒடித்தாயா என்றாவது.



நிலம் பிடித்தேன் என்பாய் தினமும் - எமது

பலம் ஒடித்தாயா என்றாவது.

இடம் பிடித்தேன் என்பாய் தினமும் - எமது

திடம் ஒடித்தாயா என்றாவது.

உயிர் அழித்தேன் என்பாய் தினமும் - எமது

படை ஒழித்தாயா என்றாவது.

ஆறு மாதம் என்பாய் தினமும் - ஆண்டுகள்

நூறு போனாலும் முடியுமா உன்னால்.

Image Hosted by ImageShack.us

வியாழன், 24 பிப்ரவரி, 2011

புலம்பெயர் தேசங்களில் வழங்கப்படும் துரோகி பட்டியலின் பின்னணி என்ன? இம்ரான் பாண்டியன் படையணியின் ஊடக அறிக்கை.

எனது உயிரிலும் மேலாக நான் நேசிக்கும் தமிழீழ மக்களுக்கும், அங்கிருந்து புலம்பெயர்ந்து பூமிப்பந்தெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கும் நாம் எமது விடுதலைப் போராட்டத்தின் ஒரு நெருக்கடி மிகுந்த வேளையில் ஏற்பட்டிருக்கும் முரண்பாடான கருத்துக்களையும், பரப்புரைகளையும் தவிர்க்கவும், மக்களுக்கு எமது நிலைப்பாடு பற்றி தெளிவான விளக்கங்களையும் கொடுக்க வேண்டியிருப்பதனால் இப்பதிவு  முக்கியம் பெறுகின்றது.

தனிப்பட்ட நபர்களைச் சாடுவதோ அல்லது தனிமைப்படுத்துவதோ எமது விடுதலைப் போராட்டத்தின் நோக்கம் அல்ல. இருந்தபோதும் கூட தற்போது ஏற்பட்டிருக்கும் தவறான பரப்புரைகளை தகர்க்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் முள்ளிவாய்க்காலில் எமக்கு ஏற்பட்ட இராணுவப் பின்னடைவு ஒட்டு மொத்த விடுதலைப் போராட்டத்திலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது உண்மைதான். அதற்காக விடுதலைப் போராட்டம் முடக்கப்பட்டு விடுமா என்ன?

எமது மண் மீட்பிற்கான போராட்டம் ஒரு போதும் தடைப்படப் போவதில்லை. ஆனால் தற்போது ஏற்பட்டிருக்கின்ற தமிழ்த் தேசிய இனத்தின் அரசியல் வெற்றிடத்தை நிரப்புவதற்கு சில குறுகிய சுயநல விரும்பிகள் முனைப்புக் காட்டுவது வெளிப்படையாகத் தெரிகின்றது. முள்ளிவாய்க்கால் போரின் இறுதிக்கட்டத்தில் வன்னிக்கும், புலம்பெயர் தமிழர் கட்டமைப்புக்குமான தொடர்புகள் சீரின்மையால் இதனைப் பயன்படுத்தி சில தனி நபர்கள் தன்னிச்சையான செயற்பாடுகளில் ஈடுபட ஆரம்பித்து இன்று அது விஸ்பரூபம் எடுத்திருக்கின்றது. 
  இதன் வெளிப்பாடுதான் ஐரோப்பிய நாடுகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் துரோகிகள் பட்டம் சூட்டும் நிகழ்வுகள். உண்மையில் துரோகிகள் யார் என்பதை அடையாளம் காணவேண்டிய பொறுப்பு மக்களுடையதே தவிர தனிநபர்களினதும், அவர்களினால் நடத்தப்படும் சில ஊடகங்களினதும் கடமையல்ல.


முள்ளிவாய்க்கால் பேரவல நாட்களில் அந்த மக்களையும், மண்ணையும் மீட்பதற்கு எம்முறவுகள் அள்ளிவழங்கிய பெருந்தொகை நிதி எங்கே போனது?. அந்நிதி தமிழீழத்தை நிச்சயமாகச் சென்றடையவில்லை. அப்படியாயின் அந்த நிதி தனி நபர்களிடம் எங்கோ முடங்கிக் கிடக்கின்றது.

அந்தநிதியை வெளியே காட்டாமல் பதுக்கி வைத்துக்கொண்டு இறுதிக்கட்டப் போரில் அநாதரவாக்கப்பட்ட மக்களுக்கோ, போராளிகளுக்கோ எந்தவிதமான உதவிகளையும் செய்யாமல் அவர்களுக்கான மறுவாழ்வுத் திட்டங்களுக்கான செயற்திட்டங்களை பேச்சளவில் கூட அறிவிக்காமல் கடந்த ஒன்றரை வருடங்களைக் காலங்கடத்தி. தமிழீழத் தேசிய நிதியைச் சூறையாடுவதையே குறிக்கோளாகக் கொண்டு தம்மை அனைத்துலக தொடர்பாளர்கள் என்று பறைசாற்றிக் கொண்டு. அதேநேரம் எமது தேசத்திற்காக ஏதாவது செய்ய முனைவோரையும், எமது போராட்டத்தின் அடுத்த படிநிலைச் செயற்பாடுகளைச் செய்ய முனையும் தேசாபிமானிகளையும், போராளிகளையும் துரோகிகள் பட்டம் சூட்டுவதிலேயே இவர்கள் குறியாக இருக்கின்றார்கள். 

உருத்திரகுமார் துரோகி. விடுதலைப்புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர்கள் துரோகி. இடைக்கால தன்னாட்சியை உருவாக்கிய மதியுரைஞர் குழு துரோகி. இறுதிக்கட்டப் போரில் வெடிபொருட்கள் தீரும் வரை போராடி ஈற்றில் மக்களோடு மக்களாக வந்த போராளிகள் துரோகி. புலம்பெயர் தேசங்களில் ஒவ்வொரு நாட்டுக் கிளைகளாலும் சேகரிக்கப்பட்ட தமிழீழத் தேசிய நிதி சார்பான கணக்கறிக்கைகளைக் கேட்போர் துரோகி. உருப்படியான செயற்திட்டங்களைக் கொடுத்து இவர்களைச் செய்யச் சொன்னால் அவர்களும் துரோகி. இவர்கள் எதுவும் செய்யாதவிடத்து தாமே புதிய அமைப்புக்களை உருவாக்கி உருப்படியான தமிழர் நலத்திட்டங்களைச் செய்ய முனைவோரை அச்சுறுத்துவது, தடுப்பது அதுவும் சரிவராதவிடத்து அவர்களுக்குத் துரோகிப்பட்டம் கொடுப்பது. இதுதான் இவர்களது தேசியப்பணி ஆகிவிட்டது.

 இப்படியே எல்லாரையும் துரோகி என்றால் உண்மையில் யார் துரோகி. மக்களே சிந்தியுங்கள். இவர்கள் சொல்கின்ற துரோகிப் பட்டியலில் 98வீதான மக்கள் அடங்கிவிடுவர். அப்படியாயின் துரோகிகள் யார்? யார் மற்றவர்களைத் துரோகி என்கின்றானோ அந்த நபர்தான் உண்மையில் துரோகி. தம்முடைய இருப்பைத் தக்கவைக்கவும், தம்மைக் காத்துக் கொள்வதற்குமே இவ்வாறு எடுத்தவுடன் துரோகிகள் ஆக்கப்படுவதைக் காணமுடிகின்றது.  மக்களை முட்டாள்கள் ஆக்கியும், ஈழமக்கள் இரத்தம் சிந்தி உழைத்த தழிழீழத் தேசிய நிதியைச் சுருட்டி அதனூடே வாழ்பவர்கள் தண்டிக்கப்படவேண்டியவர்களே. இவர்களை மக்கள் இனங்காணாது விட்டால் இவர்கள் நினைப்பது போல் மக்களும் முட்டாள்கள் ஆகவே ஆகிவிட நேரிடும்.

  யாவரையும் துரோகிகள், சிங்களத்தின் புலனாய்வாளர்களாகச் செயற்படுகின்றனர் என மற்றவர்களுக்கு துரோகிகள் பட்டம் வழங்கி அறிக்கைகள் விட்டுக் கொண்டிருக்கும் புலிகளின் அனைத்துலக தொடர்பகம் என்று தம்மைத் தாமே அழைத்துக் கொண்டு அதனைச் செயற்படுத்திக் கொண்டிருக்கும் நந்தகோபன் என்ற நபர் யார்? கேட்டுக் கொள்ளுங்கள் குறிப்பை.

 நந்தகோபன் வன்னியில் மூத்தபோராளி கஸ்ரோவின் உதவியாளர் மாத்திரமே. இறுதிக்கட்ட யுத்தம் வரை இவர் களமுனைகளுக்குச் சென்றதே கிடையாது. இராணுவத்துக்கெதிராக துப்பாக்கி ஏந்தி ஒரு ரவைகூட சுடாதவர். மூத்தபோராளி கஸ்ரோ அவர்களின் உதவியாளனாக மட்டும் நின்ற இவர் புலம்பெயர் தேசத்தில் வந்து எப்படிப் பெரும்புலியானர்?.

  மற்றும் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இராணுவத்திடம் சரணடைந்த நந்தகோபன் எப்படி வெளியே வந்தார்?. மூத்த உறுப்பினர்கள் முதல் இறுதிக்கட்டச் சண்டை நடக்கும் போது போராட்டத்தில் இணைந்தவர்கள் வரை அனைவரையும் தனியாகப் பிரித்தெடுத்து, வெவ் வேறு இடங்களில் அடைத்து வைத்து சித்திரவதைகளுக்குள்ளாக்கி வரும் சிறிலங்கா அரசபடைகளும், சிங்கள அரசும் எவ்வாறு நந்தகோபனை வெளியில் விட்டனர்.

அதிலும் குறிப்பாக விடுதலைப்புலிகளின் சர்வதேச பொறுப்பாளராக இருந்த கஸ்ரோ அவர்களின் உதவியாளனாக இருந்த நந்தகோபனைக் கைது செய்திருந்தாலும், சில மாதங்களுக்குள்ளாகவே நாட்டைவிட்டு வெளியே செல்ல அனுமதித்தது ஏன்?

கவிகளின் மூலமும், இலக்கியங்கள் மூலமும் புரட்சியை ஏற்படுத்திய எமது ஆஸ்தான கவிஞராக இருந்த புதுவை இரத்தினதுரை அவர்களையே விட்டு வைக்காத சிறிலங்கா அரசு. விடுதலைப்புலிகளின் சர்வதேசப் பொறுப்பாளரான கஸ்ரோ அவர்களின் உதவியாளரான நந்தகோபன் சரணடைந்த பின்னர் எதுவித நடவடிக்கைகளுமின்றி வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல சிறிலங்கா அரசு வழியமைத்துக் கொடுத்திருந்தது.

இவ்விடயத்தை உன்னிப்பாக நோக்கில் விடுதலைப்புலிகளின் சர்வதேச வலையமைப்பை இவர்மூலம் கண்காணிக்கவும், அதனூடாக அதைச்சிதைக்கவும், அதில் பணியாற்றியோரை சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி கைது செய்யவுமே சிறிலங்கா அரசு தனது கைக்கூலியாக நந்தகோபனை வெளியில் அனுப்பியிருக்கலாம் என்பது தற்போதைய அவரின் நடவடிக்கைகள் சுட்டிநிற்கின்றது.

நந்தகோபன் சரணடைந்திருந்தபோது முகாமில் இராணுவப் புலனாய்வாளர்களிடம் சேர்ந்திருந்ததும், ஏராளமான போராளிகளுக்குத் தெரியும். மூத்தபோராளி கஸ்ரோ அவர்கள் சரியான உடல் இயக்கம் இல்லாத நபர் என்பது யாவருக்கும் தெரியும். எனவே இறுதிக்கட்டங்களில் அவரைப் பாதுகாப்பான இடங்களுக்கு நகர்த்திவிட்டு விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்புச் சம்பந்தப்பட்ட ஆவணங்களை அழிக்கின்ற அல்லது நகர்த்துகின்ற பொறுப்பில் இந்த நந்தகோபன் என்பவரும், அறிவு என்பவருமே பொறுப்பாக இருந்தார்கள். அவர்கள் தமது கடமையைச் சரிவரச் செய்யாது தங்களை மட்டும் பாதுகாத்துக் கொண்டு மக்களோடு சேர்ந்து சரணடைந்து வந்துவிட்டார்கள்.

இதனால் தான் விடுதலைப்புலிகளின் சர்வதேச ஆவணங்கள் முழுவதும் சிறிலங்கா படைகளால் விஸ்வமடுப்பகுதியில் வைத்து எடுக்கப்பட்டது. அவ்வாறு அவ் ஆவணங்கள் அனைத்தும் சிங்கள அரசிடம் செல்வதற்கு காரணகர்த்தாக்கள் இவர்கள் இருவருமே. இவர்களே இன்று அனைத்துலக செயலகத்தை வழிநடத்தும் பொறுப்பாளர்கள்.

சிங்கள அரசுக்கெதிராகச் செயற்பட்ட புலம்பெயர் தமிழர்களை இனங்காணுவதற்கு விஸ்வமடுவில் எடுக்கப்பட்ட அனைத்துலகச் செயலகத்தின் ஆவணங்களே போதுமாவை. புலம்பெயர் மக்களுக்குத் தெரியாத தீவிர விடுதலைச் செயற்பாட்டாளர்கள், உயர்மட்ட அரசியலாளர்கள், பொருளியலாளர்கள் என யாவருடைய விபரங்களும் இராணுவத்தினரிடம் உள்ளன. வெளியே யாருக்கும் தெரியாத விடயங்களை இராணுவத்திடம் அகப்பட வைத்துவிட்டு புலம் பெயர் தேசத்திற்கு வந்து மற்றவர்களைத் துரோகி என்று சொல்ல இந்த நந்தகோபனுக்கு எப்படி முடியும்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இராணுவத்திடம் அகப்பட்டு அல்லது சரணடைந்து வெளியில் வந்தவர்களுக்கு தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் உடனடியாக பாரிய பொறுப்புக்கள் எதனையும் கொடுத்தது கிடையாது. அப்படி வந்தவர்கள் உடனடியாக பொறுப்புக்களை ஏற்றதும் கிடையாது. அப்படியிருக்க நந்தகோபன்; புலம்பெயர் தேசத்திற்கு வந்தவுடன் ஊடத்துறைப் பொறுப்பை எடுத்துக்கொண்டு ஏன் இப்படியான குழப்பங்களை விளைவிக்கின்றார்?. நந்தகோபனை நம்புவது எப்படி. கேபி ஒரு கைதி. அவர் பற்றி நாம் அலட்டத் தேவையில்லை.

அவர் இலங்கை அரசின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்பவே செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார் என்பது வெளிப்படை. அத்துடன் மக்கள் மத்தியில் அறியப்படாத கேபியை புலம்பெயர் மக்கள் மத்தியில் அறியச் செய்து அவரை ஒரு பெரிய நபர் ஆக்கியதும் இந்த ஊடகங்களும், நந்தகோபனுமே. கேபி குழு என்ற விடயத்தை கையிலெடுத்து மக்கள் மத்தியில் அவரைப் பெரிய சக்தியாகக் காட்டி. விளம்பரப்படுத்தி. தன்னுடைய நிலையை மறைப்பதற்காக ஏதோ தலைமைத்துவப் போட்டி இருப்பது போல ஒரு மாயையை ஏற்படுத்தி மக்களை குழப்பத்தில் ஆழ்த்தியிருப்பது இந்தஊடகங்களும், நந்தகோபனுமே.

  குறிப்பாக கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் விடுதலைப்புலிகள் இயக்கத்திலிருந்து பிரிந்ததன் பின் பல அறிக்கைகளை ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார். அதில் ஒன்று தான் இலங்கைப் படைகளால் 97,98,99 காலப்பகுதிகளில் நடாத்தப்பட்ட ஜயசிக்குறூய் இராணுவ நடவடிக்கைக்கெதிராக விடுதலைப்புலிகள் மேற்கொண்ட ஒட்டுமொத்த தாக்குலையும் தாமே தலைமை தாங்கி நடத்தினேன் என்பது. இவ்வாறு இவர் தம்பட்டம் அடித்தபோது தமிழீழ விடுதலைப்புலிகள் அதைப்பற்றி அலட்டிக் கொள்ளவில்லை. அதனால் கருணாவின் தம்பட்டம் உடைந்து போனது. அதே பாணியில் கேபி விடயத்தையும் கையாண்டிருந்தால் கேபி மிகப்பெரிய சக்தி பற்றிய மாயை உருவாக்கியிருக்க வாய்ப்பேயில்லை. 


எனது அன்புக்கும் பாசத்துக்குமுரிய மக்களே! அனைத்துலகச் செயலகத்தின் தற்போதய பொறுப்பாளர்கள் எமது விடுதலைப் போராட்டத்தின் எதிர்காலம் பற்றிய ஏதாவது ஒரு செயற்திட்டத்தை கடந்த ஒன்றரை வருடங்களில் அறிவித்தார்களா? என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். மற்றவர்களைத் துரோகி என்பதும், தமிழ்த் தேசியச் செயற்பாட்டாளர்கள் பற்றி தவறான பரப்புரைகளை தமது ஊடகங்களான பதிவு, சங்கதி (புதிது), ஈழமுரசு, புலத்தில் (கனடா) ஆகியவற்றில் மேற்கொண்டு காலத்தை வீணடித்து தேசிய நிதியைச் சூறையாடுவதிலும், தங்களுடை இருப்பை உறுதிப்படுத்துவதிலுமே காலத்தைக் கழித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

   இறுதிக்கட்டப் போரின்போது இராணுவ முற்றுகையை உடைத்துக் கொண்டு வெளியேறி விடுதலை வேட்கையோடு இன்று இயங்கிக் கொண்டிருக்கும் போராளிகளையும், கட்டளைத் தளபதிகளையும் மதிக்காது அவர்களின் செயற்பாடுகளுக்கான வழங்கல்கள் எதனையும் செய்யாமல் அவர்களைப் புறந்தள்ளிவிட்டு காகிதத்திலும், இணையத்தளங்களிலுமே தமிழீழ விடுதலைப்போர் என்று கர்ச்சித்துக்  கொண்டு தமிழீழச் செயற்பாட்டாளர்களுக்குத் துரோகிப்பட்டம் வழங்குவதுதான் இந்த அனைத்துலகத் செயலக தற்போதைய பொறுப்பாளர்களின் பணியாகிப் போய்விட்டது.

உண்மையில் புலனாய்வு அமைப்புக்கள் ஊடுருவுவதென்றால் அது யாருக்கும் புலப்படாது. அதை சிங்கள அரசு பிரச்சாரப்படுத்தவும் மாட்டாது. புலனாய்வு என்பது எவருக்கும் தெரியாமலேயே இரகசியமாக நடத்தப்படும் வேலை. புலனாய்வாளர்கள் பற்றிய சரியான மதிப்பீடு தெரியாமல் சிங்கள அரசின் புலனாய்வு ஊடுருவல் என்ற பூச்சாண்டியைக் காட்டி இந்த நந்தகோபன் குழு புலம்பெயர் மக்களிடையே குழப்பம் விளைவிக்க முனைகின்றது.


பொதுவாக அனைத்துலக தொடர்பகத்தைச் செயற்படுத்திக் கொண்டிருக்கும் ஒருசில பொறுப்பாளர்களே தவறானவர்கள் என்று குறிப்பிடுகின்றேன். ஆனால் அதில் உள்ள அனைத்துப் போராளிகளும் பிழையானவர்கள் அல்ல. அதேபோல் அனைத்துலக செயற்பாட்டுக் கிளைகள் எல்லாவற்றையும், அதன் எல்லாச் செயற்பாட்டாளர்களையும் பிழை என்றும் கூறவில்லை. இலங்கை அரசு உடைக்க நினைக்கும் நாடுகடந்த தமிழீழ அரசையும், புலம்பெயர் தேசத்தில் இருக்கின்ற மக்கள் அமைப்புக்களையும் இவர்கள் ஒற்றுமையாகச் செயற்படுவதைத் தடுக்கிறார்கள்.


அதாவது நாடுகடந்த அரசு. மற்றும் அனைத்துலக தொடர்பகம் மக்களுடன் இணைந்து ஒற்றுமையாகச் செயற்படக்கூடாது என்பதே சிங்கள அரசின் திட்டமாகும். அதைத் தற்போது இந்த நந்தகோபன் குழு நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கின்றது. இதிலிருந்து தெரிகின்றது நந்தகோபன் யாரின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப செயற்படுகின்றார் என்பது. இந்நபரின் கீழ் இயங்கிக் கொண்டிருக்கின்ற உண்மையான போராளிகளும் தேசியச் செயற்பாட்டாளர்களும் இதை விளங்கிக் கொள்ளவேண்டும்.

  இவ்வாறு நந்தகோபன் குழுவினரால் பல தேசியச் செயற்பாட்டாளர்களும், மக்கள் கட்டமைப்புக்களும் துரோகி என்ற முத்திரை குத்தப்பட்டு முடக்கப்படுவதோடு தமிழீழ விடுதலைப்போரை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் நோக்கத்தில் புதிதாக உருவாக்கப்படுகின்ற கட்டமைப்புக்களை துரோகி கருணாவுடனும், கேபியுடனும், இலங்கைப் புலனாய்வுத் துறையினருடனும் முடிச்சுப் போடுகின்ற சூட்சுமம் இதுதான். அத்துடன் நந்தகோபனதும், சில தனிப்பட்ட நபர்களினதும் தமிழீழத் தேசிய நிதியைச் சூறையாடி மோசடி செய்த விடயங்களை அடுத்த மடலில் வெளியிடுகின்றேன். 

ஆகவே எத்தனை தடைகள் வரினும் தமிழீழ விடுதலைக்கான போராட்டம். மானிட இயங்கியல் விதியின் வழித்தடத்தைப் பின்பற்றி இயல்பாகவும், உறுதியாகவும் முன்னோக்கிச் செல்லும். இக்கால ஓட்டத்தில் பல அற்புதமான மனிதர்கள் வருவார்கள். போவார்கள். சங்கமிப்பார்கள். தமிழீழ விடுதலைப் போராட்டம் தனி மனிதர்களுக்கானதன்று. அது தமிழ்த் தேசிய இனத்திற்குச் சொந்தமானது. உண்மையான தேசியவாதிகள் யாராக இருந்தாலும் இதில் இணையலாம் செயற்படலாம், பணியாற்றலாம். இதற்கு யாரும் தடை போடமுடியாது. “நான் சாகலாம் நாங்கள் சாகமுடியாது” இலக்கை அடையும் வரை தொடர்ந்தும் போராடுவோம். 

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
                                                                                                                                                                                                  ச.புலிச்சோழன்
நிர்வாகப் பொறுப்பாளர்
இம்ரான் பாண்டியன் படையணி

Image Hosted by ImageShack.us

செவ்வாய், 22 பிப்ரவரி, 2011

தமிழீழ அன்னையின் நினைவு சுமந்த பாடல்கள்


தமிழின தலைவனை பெற்றெடுத்த தமிழீழ அன்னைக்கு எங்கள் தலை வணங்கி வீரவணக்கம் செலுத்துகிறோம்.

பாடல்: தாய் என்ற சொல்லுக்கு 
உருவாக்கம்:செந்தழிர் இசைக்குழு
இசை : செந்தழிர் இசைக்குழு யேர்மனி
வரிகள் : மேவன்



பாடல் : வீரத்தாய் அவளே
பாடியவர்: தேனிசை செல்லப்பா
உருவாக்கம் : புலிகளின்குரல் நிறுவனம்
இசை : இளங்கோ செல்லப்பா
வரிகள் : வன்னி மைந்தன்



பாடல் : அண்ணன் இருந்தா
பாடியவர்: தேனிசை செல்லப்பா
இசை : இளங்கோ செல்லப்பா
வரிகள் : தேனிசை செல்லப்பா


Image Hosted by ImageShack.us

பேஸ்புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவியுங்கள்.

திங்கள், 21 பிப்ரவரி, 2011

தாயே!விதையாக போன பிள்ளைகளுக்கு துணையாக இரு தாயே.

பார்வதியம்மா
இதயம் வெந்து துடிக்கிறது- தாயே
உந்தன் துயர் செய்தி கேட்டு.-என்றும் 

அப்பாவின் தயவில் வட்ட முகத்தில் 
முழுநிலா பொட்டு வைத்து 

புன்சிரிப்போடு இருப்பாயே.
தள்ளாத வயதிலும்
கயவரால் மானச் சிறை இருந்தீர்.

அப்பா பறவையும் பறந்துபோக 
தாயே!ஐயோ தனிமை உன்னை வாட்ட
மனதில் என்ன நினைத்திருப்பீர்.

சொந்த ஊரில் ,அப்பாவின் கோவிலுக்கு அருகில்
தாயே நீங்களும்-------------

தாயே!விதையாக போன பிள்ளைகளுக்கு
துணையாக இரு தாயே.

                                               -செல்வி-


Image Hosted by ImageShack.us

பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

போராளி ஒருவரின் உண்மை சம்பவத்தை தழுவி ஒளிப்பதிவு செய்யப்பட்ட குறும்படம்

தமிழீழ கடற்புலிகளின் ஆதரவுடன் கடற்கரும்புலி மேயர் குமாரவேல் என்ற போராளியின் உண்மை சம்பவத்தை தழுவி ஒளிப்பதிவு செய்யப்பட்ட குறும்படம்.




தமிழீழ கடற்ப்பரப்பில் நடந்த உண்மையான நிகழ்வு இது அதன் மீள் படைப்பே இக் குறும்படம்.

Image Hosted by ImageShack.us

ஞாயிறு, 20 பிப்ரவரி, 2011

வேர்கள் வெளியினில் தெரிவதில்லை

பாடல்வரிகள்: புதுவை இரத்தினதுரை.

பாடியவர்: வர்ண. இராமேஸ்வரன்

மறைமுகக் கரும்புலிகள் பற்றிய பாடல்


வேர்கள் வெளியினில் தெரிவதில்லை -சில
வேங்கைகள் முகவரி அறிவதில்லை
பெயர்களைச் சொல்லவும் முடிவதில்லை -கரும்
புலிகளின் கல்லறை வெளியில் இல்லை.


காலப் பெருவெளி நீளும் பொழுதிலும்
கண்ணில் தெரிவதுமில்லை -இங்கு
வாழும் தலைமுறை சாகும் கரும்புலி
வாழ்வை அறிவதுமில்லை -இவர்
வாசம் புரிவதுமில்லை

கட்டி அணைத்தொரு முத்தம் அளித்துமே
கைகள் அசைத்திட்டுப் போவார் -ஒரு
தொட்டில் வளர்ந்தவர் தோளில் சுமந்தவர்
சொல்லி புறப்பட்டுப் போவார் -எங்கள்
தோழர் நெருப்பென ஆவார்

நொடியில் ஒருபெரும் வெடியுடன் கரும்புலி
நெருப்புடன் சங்கமமாகும் -எங்கள்
விடிவினுக்காகவே இடியென எதிரியின்
முடிவுடன் அவருடல் சாயும் -அவர்
மூச்சும் பெரும் புயலாகும்.

Image Hosted by ImageShack.us

"தமிழீழத்தின் அன்னை" பார்வதி அம்மாவுக்கான இரங்கற் செய்தி - தலைமைச் செயலகம், தமிழீழ விடுதலைப் புலிகள்

தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் தாயார் திருமதி பார்வதியம்மா வேலுப்பிள்ளை அவர்களின் மறைவுச் செய்தி தமிழ்மக்கள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பேரன்னையின் பிரிவால் துயருறும் இவரின் பிள்ளைகளுக்கும், உறவினர்களுக்கும், தமிழ்பேசும் மக்கள் அனைவருக்கும் தமிழீழ விடுதலைப்புலிகள் சார்பில் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

பார்வதி அம்மாவுக்கு இரங்கல் தெரிவித்து தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகம் விடுக்கும் அறிக்கை.

‘தலைமைச் செயலகம் , 
த/செ/இ/செ/01/11 
தமிழீழ விடுதலைப் புலிகள், 
தமிழீழம். 
20/02/ 2011.

அன்பான தமிழ் பேசும் மக்களே!

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் தாயார் திருமதி பார்வதி வேலுப்பிள்ளை அவர்கள் இன்று (20/02/2011) வல்வெட்டித்துறையில் காலமானார். அன்னை பார்வதியம்மாவின் மறைவுச் செய்தி தமிழ்மக்கள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தமிழீழத் தேசத்தின் விடுதலைப் போராட்டத்தைத் தலைமைதாங்க ஒரு தவப்புதல்வனைப் பெற்றெடுத்து, வளர்த்து, ஆளாக்கிய அந்தப் பெருவிருட்சம் இன்று கண்மூடித் துயில்கின்றது.

எமது தேசியத் தலைவரைப் பெற்றெடுத்த திரு. திருவேங்கடம் வேலுப்பிள்ளை ஐயாவும் பார்வதி அம்மாவும் தமது இறுதிக்காலத்தில் தாயகத்தில் வாழும் பேரவாவோடு இந்தியாவிலிருந்து தாயகம் திரும்பியிருந்தனர். தாயகத்தில் நிகழ்த்தப்பட்ட பேரழிவின்போது தமது தள்ளாத வயதிலும் மக்களோடு மக்களாக இறுதிவரை வாழ்ந்து வந்தனர்.

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர் சிறிலங்கா இராணுவத்தினால் கைது செய்யப்பட்டு, சர்வதேச நெறிமுறைகளுக்கு மாறாக உறவினர்களைச் சந்திக்கும் வாய்ப்புக்கூட மறுக்கப்பட்டு எமது தேசியத் தலைவரின் பெற்றோர் சிறைப்படுத்தப்பட்டிருந்தனர். இந்நிலையில், கடந்த ஆண்டு திரு. திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்கள் உரிய மருத்துவ வசதிகளின்றி சிறிலங்காப் படையினரின் தடுப்புக்காவலில் சாவடைந்த நிகழ்வு இன்றும் தமிழ்மக்களின் மனதில் ஆறாத துயராகவுள்ளது.

கணவரின் மறைவைத் தொடர்ந்து தடுப்பு முகாமிலிருந்து விடுவிக்கப்பட்ட நிலையில் பார்வதியம்மா தனது சொந்த ஊரிலேயே தங்கியிருந்தார். மிகவும் நொடிந்து போன நிலையில் அவர் தனது இறுதிக்காலத்தை மருத்துவமனையிலேயே கழித்திருந்தார். கடந்த ஓராண்டாக பல சிரமங்களோடு வாழ்ந்து வந்த எமது தேசத்தின் பேரன்னை இன்று மீளாத் துயிலில் ஆழ்ந்துள்ளார்.

ஓர் ஒப்பற்ற விடுதலை வீரனை, தளபதியை, தலைவனை, வழிகாட்டியை தமிழினத்துக்குப் பெற்றெடுத்துத் தந்த பெருமை எமது தேசத்தின் பேரன்னைக்குரியதே. தனது சிறு பராயத்திலேயே விடுதலைப் போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்டு ஒரு விடுதலை அமைப்பைக் கட்டி வளர்க்கத் தொடங்கிய எமது தேசியத் தலைவரைப் புடம்போட்டு வளர்த்தவர் எமது தேசத்தின் பேரன்னையே ஆவார்.

இறுதிநேரம் வரை பல நெருக்கடிகளின் மத்தியிலும் எமது தேசத்தின் பேரன்னையின் நலன் பேணலில் அக்கறையெடுத்து உறுதுணையாகச் செயற்பட்ட அனைவருக்கும் இந்நேரத்தில் எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதோடு, பேரன்னையின் பிரிவால் துயருறும் இவரின் பிள்ளைகளுக்கும், உறவினர்களுக்கும், தமிழ்பேசும் மக்கள் அனைவருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் சார்பில் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” 

இராமு.சுபன், 
இணைப்பாளர், 
தலைமைச் செயலகம், 
தமிழீழ விடுதலைப் புலிகள், 
தமிழீழம். 


Image Hosted by ImageShack.us

சனி, 19 பிப்ரவரி, 2011

தமிழீழத்தின் அன்னை இன்று இறைவனடி சேர்ந்தார்

தமிழீழ தேசியத்தலைவரின் தாயார் பார்வதிப்பிள்ளை (பார்வதியம்மா) இன்று யாழ் வல்வெட்டித்துறை மருத்துவமனையில் காலை 6 மணியளவில் இறைவனடி சேர்ந்தார் என்பதை மிக வருத்ததோடு உங்களுக்கு தெரிவிக்கின்றோம்.

வன்னியில் போர் தொடங்குவதற்கு முன்பே  இவருடைய உடல் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

எங்கள் ஈழத்தின் அன்னை 81 அகவையில் விண்ணுலகத்தை அடைந்தார்.
  
இப்புனிததாய் போர் முடிந்த
பிறகு மலேசியா சென்று  சிகிச்சை பெற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தனது மேலதிக சிக்கிச்சைக்காக இந்தியா வந்த அவரை சிகிச்சை அளிக்க அனுமதி மறுத்து வந்த விமானத்திலேயே திருப்பி அனுப்பபட்டார்.


பின்னர் இந்திய அரசு அவருக்கு நிபந்தனையின் அடிப்படையிலேயே கிகிச்சையளிக்க முன்வந்த போதில் அவரது குடும்பத்தினர் அதற்கு உடன்படாமையாலும் அவரை ஓர் அரசியல் சர்ச்சைக்குள் இழுக்கப்படுவதையும் விரும்பவில்லை.
இதனால், பார்வதி அம்மாள்,  அவர் பிறந்த ஊரான வல்வெட்டித்துறைக்குச் அழைத்து செல்லப்பட்டார்.    அங்கு அவரின் உடல் நிலை மோசமடைந்ததையடுத்து அவர் யாழ்ப்பாணம் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.  
அங்கு அவருக்கு தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சற்று உடல் நலம் தேறிய அவர் மீண்டும் பிறந்த வல்வெட்டித்துறை மருத்துவமனைக்கே மாற்றப்பட்டார்.  அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. 

கடந்த சில வாரங்களாக அவர் சுய நினைவை இழந்து அவதியுற்றார்.   இந்நிலையில்   வல்வெட்டித்துறை மருத்துவமனையில் இன்று காலமானார்.
ஈழத்தாயின் பூவுடல் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அளவில் ஈழமக்களின் அஞ்சலிக்குப்பின்னர் விதைக்கப்படலாம் என தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். 
ஈழத் தமிழினத்தை அடிமைத் தளையிலிருந்து மீட்டெடுக்கும் போராட்டத்தை முன்னெடுத்த எமது தலைவரைப் பெற்றெடுத்து வளர்த்து ஆளாக்கிய அத்தாயை உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் அனைவரும் நினைவுகூர்ந்து தமது அஞ்சலியைச் செலுத்துமாறு வேண்டிக் கொள்கின்றோம்.
பிந்திய செய்தி.
யாழ் வல்வெட்டிதுறையில் மருத்துவமனையில்  ஈழத்தின் அன்னையின் பூதவுடல் வைக்கப்பட்டுள்ளது அங்கே எங்கள் ஈழத்தின் அன்னையின் பூதவுடலுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் அணிதிரண்டு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள் இதனை தடுப்பதற்கு அங்கு பல இராணுவத்தினரும் பொலிசாரும் குவிக்கப்பட்டுள்ளதாக அங்கு அஞ்சலி செலுத்தும் மக்கள் தெரிவித்துள்ளார்கள்.








“விடுதலைப் புலிகளும் தமிழர்களும் வேறு வேறல்ல" வான் கரும்புலி கேணல் ரூபன்

சிறிலங்கா தலைநகரில் வான் வழியாக கரும்புலி தாக்குதல் நடாத்தி 20-02-2009  அன்று வீரச்சாவடைந்த கேணல் ரூபன் – தான் தாக்குதலுக்கு போக முன்னதாக – உலகத் தமிழர்களை நோக்கிய எழுதிய கடிதம் . “தமிழர்களின் குரலை உலகம் செவிமடுக்கும் இன்றைய கட்டத்தில், விடுதலைப் புலிகளும் தமிழர்களும் வேறு வேறு அல்ல; இது ஒரு மக்கள் போராட்டம் என்று இந்த உலகத்திற்கு எடுத்துக் கூறுங்கள்” என அவர் உலகத் தமிழர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் 20-02-2009  அன்று வெள்ளிக்கிழமை தாக்குதல் நடத்திய வான் கரும்புலிகளில் ஒருவரான கேணல் ரூபன் தாக்குதல் நடத்துவதற்கு முன்னர் தமிழக மக்களுக்கும் புலம்பெயர் தமிழர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.

கேணல் ரூபன் எழுதிய கடிதத்தின் முழு விவரம் 
15.02.2009
தமிழீழம்.

எனது அன்பிற்கும் பெருமதிப்பிற்குமுரிய தமிழக மக்களே மற்றும் புலம்பெயர் மக்களே!

மாவீரர்கள் மாவீரர்களாகப்போகின்ற நாங்கள் உங்களிற்கு தலைவணங்குகின்றோம்.

நீங்கள் எழுச்சிகொண்டு உங்களது உறவுகளாகிய எமது மக்களின் அழிவைக்கண்டு நடத்தும் போராட்டங்களைக் கேட்டு மகிழ்ச்சியும் தன்னம்பிக்கையும் அடைகின்றார்கள்.

‘மாவீரன்’ முத்துக்குமார் இட்ட தீ இன்று ஐ.நா வாசலில் கூட பரவியிருக்கின்றது. இப்பொழுது தான் தமிழரின் பிரச்சினை உலகத்தின் காதுகளில் விழத்தொடங்கியுள்ளது.

எனவே எமது தமிழினத்தின் விடிவிற்கு நீங்கள் செய்யும் தொடர்ச்சியான போராட்டங்கள் பலம் சேர்க்கும். தமிழகத்தில் இருக்கும் அனைத்துக் கட்சிகளும் ஒன்று சேர்ந்து போராட வேண்டும். அப்போதுதான் மத்திய அரசின் உலகத்தின் ஐ.நாவின் காதுகளில் விழும்.

மனம் தளரவிடாதீர்கள். தொடர்ச்சியாக போராடுங்கள் தமிழ் மக்களிற்கு விடிவு வரும்.

புலம்பெயர் எமது உறவுகளே!

நீங்கள் செய்த உதவிகளால் தான் எமது போராட்டம் வளர்ச்சியடைந்து நின்றது. அதனை தொடர்ச்சியாக செய்யுங்கள். விடுதலைப் புலிகள் வேறு மக்கள் வேறல்ல. இது மக்கள் போராட்டம் என்று உலகத்திற்கு எடுத்துக் கூறுங்கள். தினம் தினம் உங்களது உறவுகள் இங்கே கொல்லப்படுகின்றார்கள். அதிலும் கொடுமை இறந்தவரைக்கூட எடுத்து அடக்கஞ் செய்யமுடியவில்லை.

மருந்தில்லை. உணவில்லை. உடையில்லை. உறையுளில்லை. எவ்வளவு கொடுமைகளை சிங்கள இராணுவம் அரசு செய்கின்றது. தமிழரை வவுனியா திறந்த சிறைச்சாலைக்கு வரவழைத்து தமிழினத்தை அழித்து சிங்கள இனத்தை உருவாக்கப்போகின்றது.

வன்னியிலே இருந்து உலக நிறுவனங்களையும் கடைசியாக செஞ்சிலுவைச் சங்கத்தையும் வெளியேற்றி எமது மக்களின் அவலம் வெளியே தெரியாவண்ணம் மூடிமறைக்க முயல்கின்றது.

விரைவிலே எமது மக்களிற்கு கொடிய நோய்கள் பரவப்போகின்றது. இவற்றை நீங்கள் உலகத்திற்கு தொடர்ச்சியாக போராடி எடுத்துக்கூறுங்கள். கேளுங்கள் தரப்படும் இல்லாவிட்டால் தட்டுங்கள் திறக்கப்படும்.

அன்புக்குரிய புலம்பெயர் வாழ் தமிழ்மக்களே!

உலகத்தில் வாழ்ந்த யூத இன மக்கள் எல்லோரும் சேர்ந்து தங்களுக்கென்று இஸ்ரவேல் என்றொரு நாட்டை உருவாக்கியது போல் நீங்கள் எல்லோரும் சேர்ந்து தமிழீழத்தை அமைக்க உருவாக்க தயாராகுங்கள்.

எமது மாவீரர்களின் கனவை நனவாக்குங்கள்.

அதேபோன்று வன்னி மக்களுக்கும் கேணல் ரூபன் கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தின் முழு விவரம் வருமாறு:

15.02.2009
தமிழீழம்.

அன்புள்ள எனது தமிழீழ மக்களே குறிப்பாக வன்னியில் வாழும் மக்களே,

நீங்கள் அனுபவிக்கும் கொடும் வலி கண்டு எனது மனம் குமுறுகிறது, கலங்குகின்றது. எமது மக்கள் சுதந்திரமாக வாழவேண்டும் என்றுதான் எமது தேசியத் தலைவர் போராட்டத்தைத் தொடங்கினார்.

அவ்வேளை நீங்கள் தான் அவரிற்கு உத்வேகம் கொடுத்து ஆதரித்து போராட்டத்திற்கு வலுச்சேர்த்து உங்கள் பிள்ளைகளை போராட்டத்தில் இணைத்து எமது அமைப்பை வளரச் செய்தீர்கள். நாம் காலங்காலமாக வாழ்ந்த மண்ணில் சுதந்திரமாக வாழத்தான் ஆசைப்பட்டோம். அது தவறா?

உலகத்தில் வாழும் மக்களில் எமது தமிழ் இன மக்களின் உயிர் உயிரில்லையா? எவ்வளவோ நாடுகள் சுதந்திரம் அடைந்ததற்கு காரணமாக இருந்த உலக நாடுகள் எமது தமிழினத்தை மட்டும் சிங்கள தேசம் அழிக்கவிட்டு வேடிக்கை பார்ப்பதன் காரணம் தான் எனக்குப் புரியவில்லை.

அன்புக்குரிய மக்களே!

எமக்காக தமிழகத்தில் இருக்கும் மக்களும் புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் இருக்கும் மக்களும் உங்களின் விடிவிற்காக தீக்குளிப்புக்களிலும் பல வகையான அகிம்சைப் போராட்டங்களையும் நடத்தி வருவது உங்களிற்கு தெரிந்ததே. அவர்களால் வெளியே இருந்து செய்யக் கூடியதை செய்கின்றார்கள்.

நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் உங்களை போராட்டத்தில் இணைத்து உங்கள் விடிவிற்கான இறுதிப்போரில் போராட வேண்டும். தேசியத் தலைவரின் கைகளைப் பலப்படுத்த வேண்டும்.

அன்புக்குரிய மக்களே!

எதிரியானவன் பல்வேறு சூழ்ச்சிகள் செய்து அதாவது படிப்படியாக உங்களை உங்களது இடங்களில் இருந்து இடம்பெயர வைத்து உணவுத்தடை, மருந்துத்தடை போட்டு உங்களின் மேல் குண்டுமழை பொழிந்து தினம் சாவுக்குள் வாழவைத்து, பாதுகாப்பு வலயம் என அறிவித்து அதற்குள் உங்களை விட்டு குண்டுமழை பொழிந்து உங்கள் உறவுகளை கொன்று உங்களை தனது திறந்த சிறைச்சாலைக்கு வரச்செய்கின்றான். ஏன் தெரியுமா?

யூத இனத்தை கிட்லர் பல வதைமுகாம்களை அமைத்து யூத இனத்தை அழித்ததுபோல் மகிந்தவும் உங்களை அழிக்கப்போகின்றான். அது தெரியாமல் நீங்கள் அதற்குள் அகப்படக்கூடாது. கோத்தபாய இராணுவத்திற்கு கூறியிருப்பது தெரியுமா? தமிழரில் பெண்கள் உங்களுக்கு ஆண்கள் கடலிற்கு என்று. அதனடிப்படையில் இங்கிருந்த எத்தனை பெண்கள் கற்பழிக்கப்பட்டு இராணுவ மருத்துவமனைகளில் இராணுவத்தை பராமரிப்பதற்கு விடப்பட்டுள்ளர்கள் என்று தெரியுமா. இதைவிட எவ்வளவோ கொடும் செயல்கள் வெளியே தெரியாவண்ணம் உள்ளது.

அன்புக்குரிய மக்களே!

எமக்கு இந்த இழிவுநிலை தேவையா? நிச்சயமாக இதை நீங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டீர்கள். ஏனென்றால் அதற்காக தான் நீங்கள் போராடி வருகின்றீர்கள்.

அதற்காக 24,000 மேற்பட்ட மாவீரர்களை அர்ப்பணித்திருக்கின்றீர்கள???இவர்கள் யார் போராளிகளாக பிறந்தவர்களா இல்லை. காலம் தான் போராளிகளாக்கியது. போராளிகள் பிறப்பதில்லை அவர்கள் உருவாக்கப்படுகின்றார்கள். யார் உருவாக்கியது.

சிங்கள தேசம் எமக்குரியதை தந்திருந்தால் எமது தேசியத்தலைவர் ஆயுதமேந்த தேவை ஏற்பட்டிருக்காது.

அன்புக்குரிய மக்களே!

நாம் விரும்பியோ விரும்பாமலோ எம்மை போராட சிங்களதேசம் பணித்து விட்டது. 30 வருடங்களாக போராடி உங்களது இறுதி இலட்சியமாம் தமிழீழத்தை அடையும் நேரம் வந்திருக்கும் வேளை நீங்கள் போராட்டத்தை விடப்போகின்றீர்களா? உங்கள் விடிவிற்காக நீங்கள்தான் போராட வேண்டும்.

நீங்கள் போராடாவிட்டால் உங்களுக்காக யார் போராடுவது? If we don’t fight for our freedom who else will? வன்னியில் இருக்கும் 250,000 பேரில் 50,000 பேர் போராட வலுவில்லாமலா இருக்கிறீர்கள்? சிந்தித்து பாருங்கள் 50,000 இளைஞர் யுவதிகள் போராட்டத்தில் இணைந்து போராடினால் சிங்கள இராணுவம் வந்த இடம் தெரியாமல் பறந்திடும்.

அன்புக்குரிய தம்பி, தங்கை அக்கா அண்ணா உறவுகளே!

போராட்டத்திற்கு வயதெல்லை கிடையாது வயது பார்த்தா இராணுவம் உங்களை கொல்கின்றது. 1990 ஆம் ஆண்டு 14 வயதில் நான் போராட புறப்பட்டேன். காரணம் இடப்பெயர்வு பாடசாலை இல்லை. நாம் நிம்மதியாக வாழ எமக்கென்று ஒரு தேசம் வேண்டுமென்பதால் நீங்களும் அதேபோல்தான் நினைப்பீர்கள்.

உங்களது வலியை நேரில் தினம் தினம் கண்டு மனம் வெதும்பி குமுறுவதுபோல் இன்னொன்றையும் நினைத்து குமுறுகிறது. நீங்கள் தாங்குகின்ற வலியை உங்களது வயதில் நான் தாங்கவில்லை அப்படியிருந்தும் என்னைப் போராட உந்தியது.

ஆனால் நீங்கள் எவ்வளவோ வலியை ஏற்படுத்திய சிங்கள இராணுவத்திற்கு எதிராக போராட ஏன் இன்னும் கிளர்ந்தெழாமல் இருக்கின்றீர்கள் என்பதை நினைக்க நினைக்க மனம் வெதும்புகின்றது.

சிங்கள இராணுவம் ஏற்படுத்திய வலி காணாதா? இன்னும் வலியை ஏற்படுத்தினால் தான் நீங்கள் போராடுவீங்களா?

அன்புக்குரிய மக்களே!

எமது தேசியத் தலைவர் காலத்தில் நீங்கள் சுதந்திரம் அடையாவிட்டால் ஒரு காலமும் நீங்கள் சுதந்திரமாக வாழமாட்டீர்கள் என்பதை தெளிவாக புரிந்துகொள்ளவேண்டும். தமிழீழ தேசியத் தலைவர் கூறியது போல் ‘ஒரு விடுதலை இயக்கம் தனித்து நின்று போராடி விடுதலையை வென்றெடுத்ததாக வரலாறு இல்லை. ஒரு விடுதலை இயக்கத்தின் பின்னால் மக்கள் சக்தி அணிதிரண்டு எழுச்சி கொள்ளும் பொழுதுதான் அது மக்கள் போராட்டமாக- தேசியப் போராட்டமாக முழுமையும் முதிர்ச்சியும் பெறுகின்றது. அப்பொழுதுதான் விடுதலையும் சாத்தியமாகின்றது.’

‘கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்’ கேட்டோம் தந்தார்களா? இல்லை என்னத்தை தந்தார்கள் தாங்கொணா வலியை தந்தார்கள். அதன்பின்னர் என்னசெய்ய வேண்டும் தட்டுங்கள் நிச்சியமாக திறக்கப்படும்.

அன்புக்குரிய மக்களே!

எல்லோரும் சேர்ந்து ஆயுதம் ஏந்தி விசைவில்லை தட்டுங்கள் நிச்சியமாக சுதந்திரம் கிடைக்கும்.

அன்புக்குரிய மக்களே!

தமிழரிற்கு இருந்த போர்க்குணம் குன்றிவிட்டதா இல்லை. அதை நீங்கள் இன்னும் வெளிக்காட்டவில்லை. அந்தத் தருணம் வந்துவிட்டது. நான் யார்? நாங்கள் யார்? உங்களது பிள்ளைகள் நீங்கள் வளர்த்துவிட்டவர்கள் நாங்கள் வெளிநாடுகளில் இருந்து வந்து போராடவில்லை.

எனவே அன்புக்குரிய தாய்மாரே! தந்தைமாரே!

எனது குடும்பத்தில் ஒரு மாவீரர் எனது குடும்பத்தில் இரு மாவீரர் என பார்க்காதீர்கள். போராட வலுவுள்ள உங்களது பிள்ளைகளை நீங்கள்தான் அனுப்பி வைக்க வேண்டும். அப்பொழுதுதான் இளம் சந்ததிக்கு சுதந்திரமான வாழ்க்கையை அமைத்துக்கொடுக்கலாம். எமக்கென்று ஒரு தேசிய இராணுவத்தை கட்டி எழுப்புங்கள். இந்தப் பூமிப்பந்திலே இருப்பை, பலம் தான் தீர்மானிக்கின்றது.

வலிந்தவன் பிழைப்பான் என்ற தத்துவத்திற்கேற்ப எல்லோரும் சேர்ந்து தேசியத் தலைவரின் கையை பலப்படுத்துங்கள். எம்மிடம் தேவையான ஆயுதம் உள்ளது. மிகுதி எதிரியிடம் உள்ளது. எமக்கு தேவையானது எல்லாம் ஆளணி ஒன்றுதான்.

பல மடங்கு கொண்ட ஆளணியையும் உலக நாடுகள் வழங்கும் இராணுவ தளபாடங்களையும் கொண்டுள்ள சிங்கள இராணுவத்திற்கு எதிராக குறைந்த ஆளணியை வைத்து இரண்டு வருடத்திற்கு மேலாக நாம் போராடுகின்றோம் என்றால் யாரிற்கு வெற்றி நீங்கள் நினைத்துப்பார்த்தீர்களா?

நாங்கள் அழிவது போல் சிங்கள தேசமும் அழிந்துகொண்டுதான் இருக்கின்றது பொருளாதாரத்தில், இந்தத் தருணம் நீங்கள் திரண்டெழுந்து ஓங்கி ஒரு அடி அடித்தால் எழும்ப முடியாமல் சிங்களம் நொருங்கும்.

அன்புக்குரிய இளைஞர் யுவதிகளே!

உங்களிற்கு உங்களது பெற்றோரை பார்க்கும் பொறுப்பு இருக்கு என்பது தெரியும் தாய் தந்தைமாரை காப்பாற்ற வேண்டும் என்றால் தாய்நாட்டை காப்பாற்றினால் தான் முடியும். இது கற்பனையல்ல இதுதான் நிஜம். நாம் எவ்வளவு காலம் சாவிற்குள் வாழ்வது? தினம் தினம் செய்தியில் சிங்கள இராணுவத்தின் எறிகணை வீச்சில் வான் தாக்குதலில் இத்தனைபேர் படுகொலை செய்யப்பட்டு காயப்பட்டுள்ளனர் என்பதை தான் கேட்கின்றோம், பார்க்கின்றோம்.

இவர்களில் அரைவாசிப்பேர் போராட வலுவுள்ளவர்களாகத்தான் இருக்கின்றார்கள் அந்த வயதில் இவர்கள் ஏன் அநியாயமாக சாகவேண்டும். செத்தவர்கள் வீதியோரங்களிலும் காணிகளிலும் புதைக்கப்படுகின்றார்கள். ஏன் இந்த அவலம். இவர்கள் எல்லாம் எமது அமைப்பில் இணைந்து ஆயுதம் ஏந்தி இராணுவத்தை கொன்று வீரச்சாவு அடைந்தால் தமிழன் வீரத்தோடு வாழ்ந்தான் அல்லது வீரத்தோடு மடிந்தான் என்று வரலாறு சொல்லும்.

அன்புக்குரிய மக்களே!

சுதந்திரத்திற்கான காலம் கனிந்துகொண்டிருக்கின்றது. வெண்ணை திரண்டுவரும்பொழுது பானையை போட்டு உடைத்துவிடாதீர்கள். ஒவ்வொருவரும் தன்நம்பிக்கையாக இருங்கள். உங்களது இன்னல்கள் வலியை கண்டுதான் தலைவர் போராட்டத்தை தொடங்கினார். உங்களிற்கு ஏற்படும் வலியைக் கண்டு அவரது மனம் அப்பொழுதிலிருந்து இப்பொழுதுவரை குமுறிக்கொண்டுதான் இருக்கிறது. அதில் எள்ளளவும் குறையவில்லை. நாங்கள் (மாவீரர்கள்) திரும்பத் திரும்ப உங்களிடம் கேட்பது எல்லாம் தலைவரை பாதுகாக்குங்கள். அவரின் கையை பலப்படுத்துங்கள். உங்கள் பிள்ளைகளை போராட விடுங்கள். தலைவர் நிச்சியமாக உங்களிற்கு சுதந்திரம் பெற்றுத்தருவார்.

எமக்கும் சிங்கள இராணுவத்திற்கும் தான் யுத்தம் சிங்கள மக்களுக்கல்ல. ஆனால் இராணுவமோ எமது மக்களை குண்டு வீசி கொல்கின்றது. எமக்கும் சிங்கள மக்களை கொல்ல முடியும். சிங்கள மக்கள் இதை தெளிவாக புரிந்துகொள்ளவேண்டும்.

ஆனால், நாம் அப்படிச் செய்யவில்லை. நாம் தலைவரை சந்தித்து குண்டு போடப்போகும் பொழுது திரும்பத் திரும்ப வலியுறுத்துவது மக்கள் மீதோ மருத்துவமனைகள் மீதோ தவறியும் குண்டு போடாதீர்கள் என்று. ஆனால் சிங்கள வான் கழுகுகள் எமது மக்களையும் மருத்துவமனைகளையும் தேடித் தேடி குண்டு போடுகின்றது.

நாம் சிங்கள தேச மக்களுக்கு ஒன்றை தெளிவாக சொல்ல விரும்புகின்றோம். தமிழினத்தை அழித்துவிட்டு நீங்கள் நிம்மதியாக வாழலாம் என்று கனவு காணாதீர்கள். எமது தலைவிதியை நாமே தீர்மானித்து உங்களுடன் ஒற்றுமையாக வாழத்தான் நாங்கள் விரும்புகின்றோம். இதைத்தான் நாங்கள் திரும்பத் திரும்ப வலியுறுத்தி வருகின்றோம். நாம் எமது மண்ணில் சுதந்திரமாக வாழத்தான் ஆசைப்படுகின்றோம்.

அன்புக்குரிய வன்னிவாழ் மக்களே!

நாம் சிங்கத்தின் குகைக்குள் வெடி சுமந்து போகின்றோம். நாம் யார், தமிழன் யார் எனக் காட்டுவோம். நான் எப்பொழுதும் அநியாயமாக சாவதை விரும்பியதில்லை. அந்த வகையில் நான் மாவீரனாக அதிலும் கரும்புலி வீரனாக எனது தாய்நாட்டிற்கும், மக்களிற்கும் பெருமை சேர்ப்பதை நினைத்து நான் பெரும் மகிழ்ச்சியடைகின்றேன்.

திலீபன் அண்ணை கூறியது போல்

“மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் அமையும்”

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்" தமிழரின் தாகமும் அதுதான்”

இப்படிக்கு,
தம்பி, அண்ணா, மகன், போராளி
இ.ரூபன்.






Image Hosted by ImageShack.us

பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

Get this widget